கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Monday 3 September 2012

“நான் உயிரோடிருக்கிறேன்”

பதினொன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற ஹேஸ்டிங்க்ஸ் யுத்தத்தில் நார்மனியர் இங்கிலாந்தை முற்றுகையிட்டு இருந்தனர். அந்த யுத்தத்தின்போது நார்மனியரின் தலைவனான வில்லயம் கொலை செய்யப்பட்டு விட்டான் என்ற ஒரு வதந்தி போர்க்களத்திலிருந்து நார்மனியரின் நடுவே காட்டுத்தீ போல பரவிற்று. தங்கள் தலைவன் கொலை செய்யப்பட்டு விட்டான் என்ற செய்தியை கேட்டபோது அவர்களது கைகள் தளர்ந்து போயின. அவர்களுடைய உள்ளங்களில் சோர்வும். சோகமும் மேலிட்டன. தங்கள் தலைவனை இழந்து விட்டதால் தாங்கள் யுத்தத்தில் தோல்வியடைவது திண்ணம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டனர்.
‘யுத்தக்களத்திலிருந்து தாயகம் திரும்பி விடலாம்’ என்று தங்கள் இருதயத்தில் தீர்மானித்து விட்ட போர் வீரர்களும் இருந்தனர். இதை கேள்வியுற்ற தலைவனாகிய வில்லயம் துடித்தெழுந்தான்.

அவன் தன் குதிரையின் மேல் ஏறி தன் வீரர்களின் முகாம்கள் அமைந்திருந்த அனைத்து இடங்களுக்கும் விரைவாக சென்று, “நான் உயிரோடிருக்கிறேன்” என்று உரத்த சதத்ததுடன் முழங்கினார். அதை கேட்ட நார்மனியர் புத்துயிர் அடைந்தனர். அவர்களுடைய சோர்வும் சோகமும் அவர்களை விட்டகன்றன. தங்கள் கைகளை அவர்கள் மீண்டும் யுத்தத்திற்காக திடப்படுத்தினர். முடிவில் அப்போரில் அவர்கள் மகத்தான ஜெயம் பெற்று இங்கிலாந்தை கைப்பற்றினர். உலக சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பின் நடந்த சம்பவங்களை நமக்கு நினைவூட்டுகிறதல்லவா? மேலே வாசித்த சம்பவத்தில் நார்மனியர்கள் தங்கள் தலைவனை நினைத்து வருந்தி கலங்கினது போலவே இயேசுவின் சீடர்களும் கலங்கி காணப்பட்டனர். இரட்கர் இயேசு சிலுவையில் கொலை செய்யப்பட்டார். இனி நமது எதிர்காலம் என்னவோ? என்று வேதனையுற்றனர். ஆனால் மரணத்தை வென்று உயிரோடு எழுந்த இயேசு தன் சீடர்களுக்கு தரிசனமாகி அவர்களை தைரியப்படுத்தினார். “இதோ, உலகத்தில் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என திருவுளம் பற்றினார். உயிர்த்தெழுந்த இயேசுவின் தரிசனத்திற்கு பின்பாக, பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டு, பதினோரு சீடர்களும் ஆவியில் பெலனடைந்தனர். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்காக ஒவ்வொருவரும் வைராக்கியமாய் செயல்பட்டு கிரியை செய்தனர். அதன் விளைவாக உலகமங்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு தேவனுடைய சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன.
Related Posts Plugin for WordPress, Blogger...