Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2012)
தேவன் பரிசுத்தர்; எனவே நாமும் பரிசுத்தராயிருக்கவேண்டும் என்று அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். நாம் தேவனுக்கு முன்பாக பரிசுத்தர்களாயிருக்க வேண்டியது அவசியமே.
“யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?” (சங்.24:3). இதற்கான விடை “கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே” (சங்.24:4). நம்முடைய தாலந்துகளோ திறமைகளோ நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவராது. நம்முடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் இவை யாவும் தேவனுக்கு முன்பாக குற்றமற்றதாய் இருக்க வேண்டியது அவசியம். இவ்வுலகில் நாம் குற்றமற்றவர்களாய் வாழ்வது சாத்தியமா? அவ்வாறு வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற கேள்விகள் நமக்குள் எழுகிறதல்லவா? வேதாகமம் எழுப்பும் பல வினாக்களுக்கு நாம் அதிலேயே விடைகளைக் காணமுடியும்.
தேவனுக்கு முன்பாக பரிசுத்தர்களாய் வாழ ஐந்து வழிகளை நாம் கீழே காண்போம்.
1. கண்கள் காண்பதையெல்லாம் இச்சிக்க வேண்டாம்.
“மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான். ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருக்கும்போது, ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள். அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச்சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள். அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்” (2சாமு.11:1-5).
இப்பகுதி தாவீது செய்த மிகப்பெரிய பாவத்தை விளக்குகிறது. ஆம், தாவீதினுடைய வாழ்வில் கறைபடிந்த நிகழ்ச்சியாக இது அமைந்தது. இப்பாவத்தைச் செய்யும்படி தாவீதைத் தூண்டியது அவனது கண்களின் காட்சியேயாகும். ஒரு சிறந்த படைத் தளபதி, சிறந்த அரசர், போரைப்பற்றிய சிந்தனையில் உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருந்தபோது அவனது கண்கள் நீராடும் ஒரு ஸ்திரீயைக் கண்டது. ஒருவேளை இக் காட்சியில் தனது சிந்தனையைச் செலுத்தாதிருந்தால் இப்பாவத்தில் விழுந்திருக்கமாட்டார். இது தற்செயலாக நடந்த ஒரு சம்பவமாகும். நம்முடைய வாழ்விலும் நம்மை பாவத்தில் விழச்செய்யும் அநேக தற்செயலான நிகழ்வுகள் உண்டல்லவா? நாம் தங்கியிருக்கும் இடங்களிலும், பேருந்து நிறுத்தங்கள் இவைகளிலும் தொலைக்காட்சி சேனல்களின் காட்சிகளிலும் நாம் பலவேளைகளில் தடுமாறினது உண்டல்லவா? “என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1). இதனைக் கூறிய பொழுது யோபு ஓர் இளைஞனாயிருக்கவில்லை. முதியவரான யோபு தன்னுடைய வாலிப காலத்துப் பாவங்களைப் பற்றியும் பேசவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எல்லா நிலைகளிலும் எல்லா வயதிலும் நம்மைப் படுகுழியில் வீழ்த்தும் பாவங்கள் பல உண்டு. எனவே நாம் அதிக எச்சரிப்புடன் நமது பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.