கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Monday 11 February 2013

இலவசமான கிடைக்கும் இரட்சிப்பு


எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். - (ரோமர் 3:23,24).

இங்கிலாந்து தேசத்தில் அநேக வீடுகளுக்கு சொந்தக்காரரான செல்வந்தர் ஒருவர், புதிதாய் இரட்சிக்கப்பட்டிருந்தார், எனவே தன் வீடுகளில் வாடகைக்கு தங்கியிருக்கும், குடிமக்களுக்கு, தேவனுடைய கிருபையின் இரட்சிப்பு எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்த விரும்பினார், அதன்படி தனக்கு சொந்தமான வீடு மற்றும் சுவற்றில், ஒரு பெரிய போஸ்டர் ஒட்டி, குறிப்பிட்ட நாளில் காலை 10 மணியிலிருந்து, 12 மணிவரை, யார்யார் தன்னிடம் கடன் பட்டிருக்கிறார்களோ, அவர்கள் வந்து தங்களுடைய கடன் பத்திரங்களை காட்டினால் அவர்களுக்கு அது மன்னிக்கப்படும் என்றும் எழுதி அந்த இடங்களில் ஒட்டியிருந்தார்.

அநேகர் அந்த போஸ்டரை பார்த்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. குறிப்பிட்ட அந்த நாள் வந்த போது, அவருடைய வீட்டின் முன் ஒரு பெரிய கூட்டம் கூடி இருந்தது. கதவு சாத்தப்பட்டிருந்தது. கதவுக்கு வெளியே ஓவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து கொண்டு வெளியே நின்றிருந்தார்கள். ''இதுப்போல முட்டாள் தனமாக யாராவது செய்வார்களா'' ''இதில் ஏதோ தந்திரம் இருப்பதாக தெரிகிறது'' ''நிச்சயமாகவே அவர் நம்முடைய கடன்களை மன்னித்து விடுவாரா? ஒருவளை நாம் உள்ளே போனால் நம்மை அவர் முட்டாள் என்று நினைத்து தள்ளிவிடுவாரா?'' என்று அவர்கள் ஒருவரோடொருவர் பேசி கொண்டார்கள்.

''நான் முதலில் போக மாட்டேன், வேறு யாராவது போகட்டும், பின் நான் போகிறேன் என்று நின்றிருந்தார்களே ஒழிய யாரும் முதலில் போக துணியவில்லை. நேரம் கழிந்து கொண்டிருந்தது. கடைசியில் 12 மணி ஆகப்போகும் நேரம், வயதான ஒரு தம்பதியினர், அங்கு வந்தார்கள். அவர்கள் தங்களுடைய கடன் பத்திரங்களை கையில் வைத்து கொண்டு, அங்கிருந்த கூட்டத்திடம் ''வீட்டு சொந்தகாரர் உள்ளே இருக்கிறாரா?'' என்று கேட்டனர், "ஆம் இருக்கிறார்" ஆனால் இதுவரை யாருக்கும் கடன் மன்னிக்கப்படவில்லை'' என்று கூறினர். அப்போது அந்த தம்பதியினர் கண்ணீருடன், ''அவர் ஒட்டிய போஸ்டர்களை பார்த்து தொலை தூரத்திலிருந்து நாங்கள் வருகிறோம், இது உண்மையா பொய்யா என்று எங்களுக்கு தெரியாது ஆனாலும் நம்பிக்கையுடன் செல்கிறோம்'' என்று கூறி உள்ளே சென்றனர். அங்கு முன்னே அமர்ந்திருந்த காரியதரிசி, அவர்களுடைய பேப்பர்களை வாங்கி சற்று அமருமாறு கூறி உள்ளே சென்று, மீண்டும் திரும்பி வந்து, அவர்களுடைய கடனை எஜமானர் அடைத்து விட்டதாக கூறி அவருடைய கையொப்பம் இட்ட பத்திரத்தை எடுத்து கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்தார்.

சரியாக 12 மணியானதும் கதவுகள் திறக்கப்பட. அந்த வயதான தம்பதியினர் வெளியே வந்தனர். உடனே, வெளியே இருந்த கூட்டம் அவர்களிடம், ''என்ன உங்கள் கடன்களை அவர் மன்னித்தாரா, தன்னுடைய வார்த்தையை அவர் காப்பாற்றினாரா'' என்று மாறி மாறி கேள்விகள் கேட்டனர். அந்த தம்பதியினர், ஆம் என்றனர். சில விநாடிகளில், வீட்டு சொந்தக்காரரும் வெளியே வந்தனர். மற்றவர்கள், தங்கள் பத்திரங்களை கையில் பிடித்து கொண்டு ‘ஐயா எங்களுக்கும் மன்னியும்’ என்று கதறினர். அப்போது அந்த எஜமானர், ‘இப்போது நேரமாகிவிட்டது, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது, ஆனால் நீங்கள் அதை பயன்படுத்திக்கொள்வில்லை, நீங்கள் உள்ளே வந்திருந்தால் நான் உங்கள் கடன்களை முழுவதுமாக மன்னித்திருப்பேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை'' என்று கூறினார்.

''எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமை இழந்த நிலையில் உள்ளனர். ஆனாலும் இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோமர் 3:23:24) என்று வேதவசனம் கூறுகிறது. அதை விசுவாசித்து பற்றி கொள்ளுகிறவர்கள் மன்னிக்கபடுகிறார்கள். அதை விசுவாசியாமல் அந்த கூட்டத்தாரைப்போல அவிசுவாசமாய் வாக்குவாதம்பண்ணிக் கொண்டிருப்பவர்கள், இலவசமாய் கிடைக்கும் இரட்சிப்பை இழந்துபோகிறார்கள்.

இலவச கலர் டிவி தருகிறர்கள் என்றால் அந்த இடத்தில் கூட்டம் அலைமோதும். ஒருரையொருவர் நெருக்கியடித்து, இடியும், மிதியும்பட்டு, எப்படியாவது அந்த டிவி கிடைக்க வேண்டும் என்று எந்த வேதனைகளையும் பொருட்படுத்தாத அதே மக்கள், விலையேறபெற்ற இரட்சிப்பை இலவசமாய் பெற்று கொள்ளுங்கள் என்றால் அதற்கு தயாராக இல்லை.

''கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல' என்று எபேசியர் 2:8-9 -ல் வேதம் தெளிவாக நமக்கு சொல்கிறது. அது தேவனுடைய மிகப்பெரிய ஈவு. நம்முடைய எந்த கிரியைகளினாலும் அதை சம்பாதிக்க முடியாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறதினாலேயே அந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பு பாவிகளாகிய நமக்கு கிடைக்கிறது. இலவசமாய் கிடைக்கிற அந்த இரட்சிப்பை இன்றே விசுவாசத்தோடு பெற்று கொள்வோமாக. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள் (2 கொரிந்தியர் 6:2) கிருபையின் காலத்தில் அநுக்கிரக காலத்தில் இருக்கும்போதே நாம் அந்த இரட்சிப்பை பெற்றுக் கொள்ள கர்த்தர் கிருபை செய்வாராக!

நியாய தீர்ப்பின் நாள் நெருங்குதே

நேசர் வர காலமாகுதே

மாய லோகம் நம்பி மாண்டிடும்

மானிடரை மீட்க மாட்டீரோ

ஜெபம்: எங்களை அளவில்லாமல் நேசிக்கும் நல்ல தகப்பனே, எங்களுடைய எந்த கிரியைகளும் சம்பாதிக்க முடியாத விலையேறப்பெற்ற இரட்சிப்பை நீர் எங்களுக்கு இலவசமாய் கொடுத்த தயவிற்காக உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். அதை விசுவாசத்தோடு பெற்று கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்யும். நாட்கள் கொடியதாய் இருக்கிறபடியால், இப்போதே கிருபையின் காலத்தில் ஒவ்வொருவரும் மிகப்பெரிய ஈவாகிய இரட்சிப்பை பெற்று கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
Related Posts Plugin for WordPress, Blogger...