கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Tuesday 18 December 2012

வேத வசனமாகிய கண்ணாடி


ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். -(யாக்கோபு 1:23-24).

மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று முகம் பார்க்கும் கண்ணாடியாகும். கண்ணாடி முன்பாக மணிக்கணக்காக நின்று தன்னை அழகுப்படுத்தி பார்த்து கொள்வாள் பெண். மனிதனும் தன் முகத்தை விதவித கோணங்களில் வைத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று திருப்தியாகும் வரைக்கும் முகத்தை அப்படி சீவி, இப்படி சீவி அழகு படுத்தி, பின் அவ்விடம் விட்டு போகிறான்.

ஒரு கண்ணாடி ஒருவரின் உருவத்தை தன்னிடத்தில் வாங்கி கொண்டு, பின்பு அவருடைய உருவத்தை அவர் இருக்கிற வண்ணமாக பிரதிபலிக்கிறது. ஒருபோதும் ஒரு மனிதனை அழகுப்படுத்தியோ, ஒரு மனிதனை அசிங்கப்படுத்தியோ காட்டுவதே இல்லை. ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அது வெளிப்படுத்துகிறது.

இந்த கண்ணாடி மாத்திரம் இல்லாதிருந்தால் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை நாம் அறியாமல் போயிருந்திருப்போம்! நம்மை அழகுப்படுத்தி கொண்டிருக்க மாட்டோம். முகத்தில் இருக்கிற கறையையோ, அப்பியிருக்கிற பவுடரையோ துடைத்து கொண்டிருந்திருக்க மாட்டோம். அத்தனை முக்கியமானதாக கண்ணாடி விளங்குகிறது.

வேத வசனம் கண்ணாடிக்கு ஒப்பிடப்பட்டு மேற்கண்ட வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒருவன் திருவசனத்தை கேட்டும் அதன்படி செய்யாதவனானால் அவன் ஒருவன் தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு, தன்னிடத்தில் இருக்கிற குறைகளை கண்டும், அதை சரி செய்யாதிருக்கிறவனைப் போல இருப்பான் என்று வேதம் கூறுகிறது.

'தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது' (எபிரேயர் 4:12). ஆம், வேத வசனம் ஒரு மனிதனிடத்திலுள்ள இருதயத்திலுள்ள நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாய் இருக்கிறபடியால், அது அவனிடத்தில் உள்ளதை அவனுக்கு தெரிவிக்கிறது.

நாம் நம்முடைய வெளி உருவத்தை பார்ப்பதற்கு கண்ணாடி உள்ளது. ஆனால் இருதயத்தில் உள்ளில் இருக்கும் காரியங்களை வேத வசனமே கண்ணாடியை போல வெளிப்படுத்துகிறது. எப்படி நம் உருவத்தை கண்டு, சரி செய்ய வேண்டிய காரியத்தை சரி செய்கிறோமோ, அதுப்போல நம்முடைய இருதயத்தில் காணப்படும் காரியங்களை வேதம் வெளிப்படுத்தும்போது அவற்றை சரி செய்து கொள்ள வேண்டும்.

'எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?' (எரேமியா 17:9). ஏனெனில் அப்படிப்பட்ட 'இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்' (மத்தேயு 15:19). ஆம், இருதயத்தின் உள்ளிருந்து தான் இப்படிப்பட்டதான அசுத்தங்கள் வெளிப்படும். வெளியே மனிதனை பார்ப்பதற்கு மிகவும் நல்லவனாக, சாதுவாக இருப்பான். ஆனால் இருதயத்திற்குள்ளேயோ எல்லாவற்றையும் அடக்கி வைத்து கொண்டிருப்பான். இவற்றில் வேத வசனம் நம்மை குறித்து வெளிப்படுத்தும் காரியத்திற்கு நாம் செவி கொடுத்து, எந்த துர்க்குணங்களாவது நம்மில் இருந்தால் அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.

Sunday 16 December 2012

அந்நியரை உபசரி

அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள், அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. - (எபிரெயர். 13:2).

ஜெர்மனியில் மிகவும் குளிரான இரவு. கன்ராடும் அவர் மனைவி உருசுலாவும் தங்களது ஒரே மகன் மரித்ததினால், மிகவும் துக்கத்தோடு அந்த குளிரான இரவைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒருச் சிறுவன் பாடும் குரல் கேட்டது. அந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது பாட்டுப்பாடி, அச்சிறுவன், பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். அவன் பாடுவதைக் கேட்ட அத்தம்பதியினர், அந்த அழகிய குரல், இக்கடும் குளிரில் பாடினால் கெட்டுவிடுமே எனறு எண்ணி, அச்சிறுவனை தங்கள் வீட்டிற்குள் அழைத்தனர். கந்தைகளையும் அழுக்குத் துணிகளையும் அணிந்து, குளிரில் நடுங்கியபடி இருந்த அவனை அனலான இடத்தில் கொண்டுவந்து, தங்கள் மரித்த மகனின் உடைகளை அணியச் செய்து, சாப்பிட ஆகாரமும் கொடுத்தார்கள்.

சாப்பிடும்போது அச்சிறுவன், தனது தந்தை மிகவும் ஏழ்மையானவரென்றும், தனக்கு உடையோ உணவோ கொடுக்க இயலாதவர் என்றும் கூறினான். இதைக் கேட்ட அத்தம்பதியினரின் இருதயம் நெகிழ்ந்தது. தங்கள் மகனின் படுக்கையில் படுக்க வைத்தனர். அவன் தூங்கிய பிறகு, அவர்கள், தங்களது மரித்த மகனுக்கு பதிலாக அச்சிறுவனை தத்தெடுப்பது என்று முடிவு செய்தனர்.

அடுத்த நாள் காலையில் அச்சிறுவன் எழுந்த போது, தங்கள் முடிவை தெரிவித்த போது, அவன் மிகவும் சந்தோஷப்பட்டு, சம்மதித்து, அவர்களோடேயே தங்கினான். அவனை படிக்க வைத்து, ஒரு பாதிரியும் ஆக்கினார்கள். அநதப் பாதிரி வேறு யாருமில்லை, புரட்சி செய்து புரோட்டஸ்டண்ட் என்னும் பிரிவை உண்டாக்கி, உலகத்தை கலக்கிய மார்ட்டின் லுத்தரே ஆவார்.

பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள், தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள், அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள். மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். - (மத்தேயு.25:35,40).

Sunday 9 December 2012

எச்சரிக்கையாயிருங்கள்.

ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். - (மாற்கு 13:5).

ஒரு பள்ளியில் வழக்கமாக வாரத்திற்கு ஒருமுறை வேதபாட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதை அந்தந்த வகுப்பாசிரியர்கள் நடத்தி வந்தனர். அதில் ஏழாம் வகுப்பு ஆசிரியர் ஒரு கிறிஸ்தவராயிருந்த போதிலும், வேதாகமத்தை தன் இருதயத்தில் நம்பாதவரும், பரிகசிப்பவருமாய் இருந்தார். ஒரு நாள் அவர் தன் வகுப்பு பிள்ளைகளிடம், 'இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலை கடந்து சென்றது பெரிய அற்புதம் ஒன்றுமில்லை. ஏனென்றால் அந்த சமயத்தில் சமுத்திரத்தில் ஆறு அங்குல அளவு மட்டுமே தண்ணீர் இருந்தது. ஆகவே தான் ஜனங்கள் அதை வெகு சுலபமாக கடந்து விட்டனர்' என்றார்.

உடனே அவ்வகுப்பிலிருந்து ஒரு சிறுமி, 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று சத்தமாக கூறினாள். ஆசிரியர் எரிச்சலுடன், 'இதில் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?'என்று கேட்டார். அச்சிறுமியோ சற்றும் தயங்காமல், 'அந்த ஆறு அங்குல அளவு தண்ணீரில் எகிப்திய சேனை அனைத்தையும், பார்வோனின் இரதங்களையும் நம்முடைய பெரிய தேவன் அழித்து விட்டாரே! இது அற்புதம் அல்லவா? அதற்காகவே நான் கர்த்தரை துதித்தேன்' என்று பதிலளித்தாள். அந்த ஆசிரியர் பேச்சற்று போனார். இந்நாட்களில் வேத வல்லுநர்கள் என்ற பெயரில் பலர் வேதத்தின் அற்புதங்களை ஏற்று கொள்ள மனதில்லாதவர்களாய் விதவிதமான விளக்கங்களை சொல்லுகிறவர்களாய் உள்ளனர். விண்வெளிக்கு மனிதன் செல்லும் இந்த விஞ்ஞான யுகத்தில் அற்புதங்களை நாம் நம்ப தேவையில்லை என்று கூறுவர். ஒரு சில கிறிஸ்தவ புத்தகங்களில் கூட வேதத்திற்கு புறம்பான பல விளக்கங்கள் காணப்படுவதுண்டு. 'இப்புத்தகத்தை எழுதியவர் பெரிய போதகரல்லவா, அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்' என்று நாம் அக்கருத்தை ஏற்று கொள்ள வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஆனால் இவையெல்லாம் வேதத்திற்கு புறம்பானது என்பதை எப்படி அறிநது கொள்ள முடியும்? வேதத்தின் அறிவு நமக்கு இருக்கும்போது மட்டுமே! இல்லாவிட்டால் எல்லாவற்றையும் கேட்டு மனதில் பெரும் குழப்பம் அடைந்து விடுவோம். கடந்த மே மாதம் 21ம் தேதி ஹெரால்ட் கேம்பிங்க் என்பவர் உலகம் அழியப்போகிறது என்று அறிவித்தார். இதை உலகமெங்கும் செஃப் ஹாகின்ஸ் என்பவர் பல இலட்ச ரூபாய்களை செவழித்து, பரப்பினார். ஆனால், மே மாதம் 21ம் தேதி ஒன்றும் நடக்கவில்லை. அவர் கூறியது உண்மை என்று அவரை நம்பி பலர் ஏமாந்தனர். சரியாக வேதம் அறியாதவர்கள் இத்தகைய வார்த்தைகளுக்கு மிக எளிதாக விழுந்து விடுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசுவும் தன்னுடைய இரண்டாம் வருகைக்கு முன் நடககும் அடையாளங்களில் பிரதானமாக கூறியது, கள்ளபோதனைகள் மற்றும் கள்ள போதகர்களுக்கு எச்சரிக்கையாயிருக்கும்படி கூறியுள்ளார். ஏனெனில் இயேசுவின் நாட்களில் இருந்த வேதபாரகர்களும், பரிசேயர்களும் வேத உபதேசம் என்ற பெயரில் ஜனங்களை கட்டி போட்டிருந்தார்கள். இன்றைக்கும் பிரசங்கம், உபதேசம் என்ற பெயரில் தவறானவைகளை போதித்து ஜனங்களை பிசாசு கட்டி வைத்துள்ளான். குறிப்பாக ஏதெனும் ஒரு வசனத்தை மையமாக வைத்து இதுவே சத்தியம் என போதித்து, அதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சபைகளும், ஊழியங்களும் ஏராளம். நாம் அப்படிப்பட்ட மாயையில் சிக்கி விடாதபடிக்கு வேதத்தை வாசித்து வேத அறிவிலே வளர வேண்டியது மிகமிக அவசியம்.

Thursday 6 December 2012

சிலுவை அன்பு

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். - (யோவான் 12:25).

'இப்பொழுது நாம் என்ன செய்வது? கீழே ஒரு நகரம் இருக்கிறது. பள்ளிக்கூடம் ஒன்றும் காணப்படுகிறது. இங்கே இந்த ஹெலிகாப்டர் வெடித்து கீழே விழுந்தால் இந்நகரிலுள்ள அநேகர் இறந்து விடுவார்கள். ஆனால் நாம் தப்பித்து கொள்ள பாராசூட் இருக்கிறது' என்று கூறி கொண்டிருந்தவரிடம் மற்றொருவர், 'நாம் முடிந்த அளவு வேகமாக ஹெலிகாப்படரை ஓட்டி சென்று விடுவோம். ஒருவேளை ஹெலிகாப்டர் வெடித்தால் நாம் இருவர் மாத்திரமே இறப்போம். ஆனால் கீழேயுள்ள அநேகரை காப்பாற்றி விடலாம்' என்று கூறி கொணடிருக்கும்போதே அந்த ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. பழுதடைந்த அந்த ஹெலிகாப்டர் ஊருக்கு வெளியில் சென்று வெடித்ததால் நகர மக்களுக்கு எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் அதை ஓட்டி சென்ற இரண்டு இளம் இராணுவ அதிகாரிகளும் உடல் கருகி இறந்து விட்டனர். இந்த இருவரும் பேசிய இறுதி பேச்சுக்களே மேலே படித்த சம்பவம்.

அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்த 28 வயதான இராணுவ அதிகாரி பானுசந்தர். கணிணி துறையில் இஞ்சினியரான இவர் பல்கலை கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றிருந்த போதிலும், தனக்கு வந்த வேலை வாய்ப்புக்களை தள்ளிவிட்டு நாட்டு மக்களுக்கு சேவை செய்யும்படி இராணுவத்தில் சேர்ந்து கடின உழைப்பு மற்றும திறமையினால் சிறுவயதிலேயே அதிகாரியாக உயர்ந்தவர். மற்றவர் சண்டிகரை சேர்ந்த ராதோர். பெற்றோருக்கு ஒரே மகனான இவர் தன்னை தேசத்தை காக்கும் பணியில் ஈடுபடுத்தி கொண்டார். இந்த இருவரும் தப்பித்து கொள்ள வாய்ப்பிருந்தும் தப்பித்து கொள்ளாமல் இறந்ததற்கு காரணமென்ன? நான் மரணமடைவதாயிருந்தாலும் என் தேசத்சை காக்கும்படி கடைசி மூச்சு வரை போராடுவேன் என்ற அவர்களின் உறுதி மொழியே! அர்ப்பணிப்பே அப்படி செய்ய தூண்டியது.
நாம் ஆராதிக்கும் ஆலயங்கள் ஏற்பட காரணமாயிருந்த மிஷனெரிகள் அநேகருடைய வாழ்க்கை சரிதைகளை வாசித்து பார்ப்போமானால் நாற்பது, நாற்பத்தைந்து வயதிற்குள்ளாகவே அநேகர் மரணமடைந்திருக்கிறார்கள். ஒரு நண்பர் எழுதின கடிதத்தை படித்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் இந்தியாவின் மீது பாரம் கொண்டு அந்த கடிதத்தையே அழைப்பாக ஏற்று குஷ்டரோகிகளின் மத்தியில் ஊழியம் செய்து, அவரும், அவருடைய இரண்டு மகன்களும் இரத்த சாட்சியாக மரித்தது நாம் அனைவரும் அறிந்ததே! ஒரு மிஷனெரியின் பிரசங்கத்தின் மூலம் இந்தியாவின் நிலைமையை அறிந்த வில்லியம் கேரி அறியாமையிலுள்ள மக்களை விடுவிக்கும்படி ஜெபித்தார். குறைந்த கலிவியறிவு உடையவராக இருந்தாலும் மிஷனெரியாக இந்தியா வந்து 40க்கும் மேற்ப்பட்ட இந்திய மொழிகளி;ல் பைபிள் அச்சிடப்பட காரணமாயிருந்தார். இப்படி அநேகர் பணி செய்யும்படி அவர்களை உந்தி தள்ளியது என்ன? சிலுவை அன்பே! அதே அன்பை நமக்குள்ளும் வாசம் செய்கிறது. ஆனால் அந்த அன்பை வெளிப்படுத்த நாம் என்ன செய்கிறோம்?

நம்மை சுற்றியுள்ள மக்களை பார்க்கும்போது மேய்ப்பனற்ற ஆடுகளை போல இருக்கிறார்களே என்று கண்ணீர் விடுகின்ற இயேசுவுக்கு உங்கள் அன்பை எப்படி வெளிப்படுத்த போகிறீர்கள்? அறுவடையோ மிகுதி ஆட்களோ கொஞ்சம் என்ற ஏக்கமுள்ள இருதய பாரமுள்ள வார்த்தைகளுக்கு நமது பதில் என்ன? நம்முடைய கிறிஸ்துவுக்கு அவருக்காக நிற்க, உழைக்க ஆட்கள் தேவை! நமது வாழ்க்கை, தாலந்துகள், நேரங்கள், விடுமுறைகள் எல்லாவற்றையும் அவருக்காக அர்ப்பணிப்போமா? அவர் நமக்கு செய்த, நமக்கு கொடுத்த எல்லா காரியங்களுக்கு ஈடாக நாம் என்னத்தை செலுத்த முடியும்? எது ஈடாகும்? ஓன்றுமே இல்லை! ஆனாலும் நம்மால் இயன்றதை அவருக்காக செய்வோமா? குடும்பத்திலுள்ளவர்கள் அதிலிருந்து பிரிந்து, தியாகமாக செய்தால்தான் ஊழியம் என்று நினைக்காதீர்கள். கர்த்தர் உங்களை குடும்பமாக இணைத்திருந்தால், குடும்பமாக அவருக்கென்று ஊழியம் செய்யுங்கள். குடும்பத்தை விட்டு விட்டு, ஊழியத்திற்கு போகிறேன் என்று சல்லாதிருங்கள். கர்த்தர் இணைத்து வைக்கிற தேவன், பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறவர் அல்ல! மனைவி ஊழியத்திற்கு வர மாட்டேன் என்று சொல்வார்களானால், அவர்களுக்காக தேவனிடத்தில் உங்கள் ஜெபத்தில் மன்றாடுங்கள். கர்த்தர் அவர்களையும் உங்களோடு இணைந்து ஊழியம் செய்ய வைப்பார்.

இந்த வாரத்தில் ஈரான் தேசத்தில், நீதிமன்றத்தில் கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த வாலிப போதகர் யூசுப் நடர்கனி அவர்களுக்கு சென்ற வருடமே அவர் கிறிஸ்துவை ஏற்று கொண்டதால் மரண தண்டனை விதித்த ஈரானின் அரசு இப்போது இந்த வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறது. தனது உயிரே போனாலும் நான் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன் என்று கிறிஸ்துவை பற்றி கொண்டிருக்கிற அவருக்கு ஈரான் அரசு தயவு காட்டும்படியாக நாம் ஜெபிப்போமா?

Tuesday 4 December 2012

கர்த்தர் கொடுத்த பெற்றோர்

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. - (நீதிமொழிகள் 23:22).

ஒரு வேடிக்கையான கதை உண்டு. ஒரு தாயின் மூன்று குமாரர்கள் நன்கு படித்து, வீட்டை விட்டு வெளியே சென்று நன்கு சம்பாதித்து, நல்ல நிலைமையில் இருந்தார்கள். ஒரு நாள் அவர்கள் மூவரும் கூடி தங்கள் தாயாருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒருவரோடொருவர் சொல்லி கொண்டார்கள். அதன்படி மூத்தவன் 'நான் அம்மாவுக்கென்று ஒரு பெரிய வீட்டை கட்டியிருக்கிறேன். ஏசியெல்லாம் போட்டு, சூப்பரா கலக்கியிருக்கிறேன்' என்று கூறினான். அடுத்தவன், 'நான் அம்மாவுக்கென்று ஒரு மெர்சிடஸ் காரும், அவர்கள் ஹாயா உட்கார்ந்து போகத்தக்கதாக ஒரு டிரைவரையும் ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்' என்று கூறினான். கடைசி மகன், 'உங்களுக்கெல்லாம் தெரியும், அம்மா பைபிளை அதிகமாக வாசிக்க பிரியப்படுவார்கள் என்று. ஆனால் அவர்களுடைய கண் சரியாக தெரியாததால் அவர்களால் சரியாக வாசிக்க முடிவதில்லை. ஆகவே நான் ஒரு கிளியை வாங்கியிருக்கிறேன். அது பைபிளை அப்படியே சொல்லும். அதை பழக்குவிக்க 12 வருடங்கள் ஆனதாம். அம்மா சோபாவில் உட்கார்ந்து, எந்த அதிகாரம், எந்த வசனம் என்று சொன்னால் போதும், அது பட்பட்டென்று சொல்லும்' என்று கூறினான். மூவரும் தங்கள் அன்னைக்கென்று தாங்கள் வாங்கிய பரிசுகளை பெருமிதமாக நினைத்தபடியே, அவற்றை தங்கள் அன்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அவற்றை பெற்று கொண்ட அன்னையிடமிருந்து ஒவ்வொருவருக்கும் கடிதம் வந்தது. அதன்படி, அவர்கள், மூத்தவனுக்கு 'நீ கொடுத்த வீடு மிகவும் பெரியது. நான் ஒரே ஒரு அறையில் தான் இருக்கிறேன். ஆனால் மற்ற இடம் முழுவதையும் நான் சுத்தப்படுத்த வேண்டி இருக்கிறது' என்று எழுதியிருந்தார்கள். அடுத்தவனுக்கு 'நான் எங்கே வெளியே போகிறேன், நீ எனக்கு அவ்வளவு பெரிய காரை அனுப்பி வைத்திருக்கிறாய்? நீ அனுப்பியிருக்கிற அந்த டிரைவர் அதற்கு மேல் மிகவும் மோசம், முகம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறான்' என்று எழுதியிருந்தார்கள். மூன்றாமவனுக்கு 'நீ மட்டும்தான் என்னுடைய தேவையையும், என்னை பற்றியும் நன்கு அறிந்திருக்கிறாய்! நீ அனுப்பியிருந்த கோழி; நன்றாக ருசியாக இருந்தது' என்று எழுதியிருந்தார்களே பார்க்கணும்!

Monday 3 December 2012

நம்முடைய காலங்கள்

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? - (மத்தேயு 6:25).

இரு வாலிபர்கள் (ஒருவன் விசுவாசி, மற்றவன் அவிசுவாசி) ஒரு மலையின் மேல் நடந்துப் போய்க் கொணடிருந்தார்கள். அப்போது விசுவாசியான வாலிபன், கர்த்தருடைய அநாதி திட்டங்களையும், அவருடைய சிருஷ்டிப்பின் மகிமையையும் பேசிக் கொண்டே இருவரும் நடந்துப் போய் கொண்டிருந்தார்கள். ‘எனக்கு எந்தவித கவலையும் இல்லை ஏனென்றால் என்னுடைய நடைகளை அவர் தீர்மானிக்கிறார். அவருடைய பாதுகாப்பு எனக்கு இருப்பதால் எனக்கு எந்தவிதக் கவலையும் இல்லை’ என்று விசுவாசியான வாலிபன் கூறினான்.

அதற்கு அவிசுவாசியான வாலிபன், ‘என்னை நடத்திக் கொள்ள எனக்குத்தெரியும் யாருடைய தயவும் எனக்கு வேண்டுவதில்லை’ என்றுக் கூறிவிட்டு, ஒரு கல்லை தூரத்தில் எறிந்து, ‘கடவுள் இந்தக் கல் எங்கே போய் விழ வேண்டும் என்று தீர்மானிக்கிறார்’ என்று கேலியாக கேட்டுவிட்டு, ‘பார், அந்த மரம் மலையின் ஓரத்தில் வளர்ந்து இருக்கிறது. அதையும் கர்த்தர்தான் வைத்தார் என்று சொல்லாதே, யாரோ வழிபோக்கன் விதையை எறிந்திருக்கிறான் அது இங்கே முளைவிட்டு மரமாக இருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்கிறாய்’ என்று அந்த மரத்தின்மேல் சாய்ந்து நின்றான். திடீரென்று அந்த மரத்தின் கீழ் இருந்த மண் சரிய ஆரம்பித்தது. அந்த வாலிபன் நகர்வதற்குள் மண்சரிந்து தாழ இருந்த பாறைகளுக்குள் விழ ஆரம்பித்தது. ஒரு கையை மரத்தைச் சுற்றி பிடித்தும் ஒரு காலை அங்கு இருந்த பாறையின் மேலும் வைத்து தப்பித்தான். இருவரும் சில நிமிஷங்கள் அப்படியே உறைந்துப் போய் நின்றார்கள்.

விசுவாசியான வாலிபன் உடனே அந்த இடத்திலேதானே முழங்கால்படியிட்டு, தேவனுக்கு தன் நண்பனின் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றி சொன்னான். பக்கத்தில் மற்றவனும் முழங்கால்படியிட்டு நன்றி சொன்னான் இருவரும் மீதமிருந்த தங்கள் பயணத்தில் ஒன்றும் பேசாமல் தொடர்ந்தனர். தேவன் அவிசுவாசியான வாலிபனோடு பேச ஆரம்பித்தார். தன்னை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து ஒரு ஊழியக்காரனாக அவன் மாறினான்.

Sunday 2 December 2012

இயேசுகிறிஸ்துவின் கண்ணீர்

இயேசு கண்ணீர் விட்டார். - (யோவான் 11:35)

வேதத்திலேயே மிகவும் சிறிய இந்த வசனத்தை நமது பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே கற்று கொடுத்து, அவர்கள் அழகாக அந்த வசனத்தை சொல்வதை கேட்டிருக்கிறோம். உலகத்தில் வாழும் நமக்கு அநேக பாடுகளும் உபத்திரவங்களும் வருகிறபடியால் நாம் சில வேளைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் அழுவது உண்டு. துக்க நேரங்களிலும், மனம் பாரத்தால் நிறைந்திருக்கிற போதும் நாம் அழுவது உண்டு. ஆனால் சகலவற்றையும் படைத்தவர், தேவனுக்கு சமமாக எண்ணப்பட்டவர், தேவனுடைய ஒரே பேறான குமாரன் இந்த உலகத்தில் வந்திருந்தபோது கண்ணீர் விட்டார். அவர் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை கண்ணீர் விட்டார் என்று வேதம் நமக்கு கூறுகிறது.

1. இயேசு கண்ணீர் விட்டார். - (யோவான் 11:35)

2. அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது (லூக்கா 19:41-42)

3. அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு... (எபிரேயர் 5:7) இதில் முதலாவது முறை லாசருவின் கல்லறையினிடத்தில் வந்து, அவர் அழுவதை காண்கிறோம். இரண்டாவது முறை எருசலேம் நகரத்தண்டை வந்து, அவருடைய வார்த்தைகளையும், அவரையும் தள்ளி விட்ட அந்த நகரத்தையும், அதினால் அவர்களுக்கு வர இருக்கும் அழிவையும் நினைத்து அவர்கண்ணீர் விட்டார். மூன்றாவது முறை சிலுவையில் தாம் அறையப்படுவதற்கு முன்பு, தாம் கடந்து செல்ல இருக்கும் பாடுகளின் பாதையை நினைத்தவராக கண்ணீரோடு விண்ணப்பம் செய்தார் என்றும் பார்க்கிறோம்.

மனிதர்களாகிய நாம் விடும் கண்ணீருக்கும், சர்வ வல்லமையுள்ள தேவன் விடும் கண்ணீருக்கும் நிச்சயமாக அதிக வித்தியாசமுண்டு. நம்முடைய கண்ணீர் நமது விடுதலைக்காக, நமது பாரம் நீங்குவதற்காக விடுவதாகும். அவர் சகலத்தையும் அறிந்தவர், அவர் நம் ஒவ்வொருவரின், மற்றும் உலகத்தின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் அறிந்தவர். அதினால்தான் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று அவரை குறித்து கூறப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தேவன் கண்ணீர் விட்டார் என்பது விந்தையிலும் விந்தையல்லவா?

நம் தேவன் நம்மை விசாரிக்கிறவர். அவர் நம்மை தேற்றுகிறவர். நம் கண்களில் கண்ணீர் வரும்போது, அதை கண்டும் காணாமல் போகிறவர் அல்ல, லாசருவின் கல்லறையினிடத்திற்கு வந்தபோது, யூதர்கள் அழுகிறதை கண்ட அவருக்கும் கண்ணீர் வந்தது. மக்கள் அவரிடம் தங்கள் வியாதினிமித்தமும், வருத்தத்தினிமித்தமும் வந்த போது, அவருடைய உள்ளம் உருகிற்று. அவர்களை தொட்டு அவர் சுகப்படுத்தினார். அதே தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். நம்முடைய தேவைகளிலும் அவர் உடனே நமக்கு வந்து உதவி செய்யவும், நம்முடைய தேவைகளை சந்திக்கவும் அவர் வாஞ்சையுள்ளவராயிருக்கிறார். அவருடைய சித்தமில்லாமல் நம்முடைய தலையிலிருந்து ஒரு முடிக்கூட கீழே விழுவதில்லை.

பாவத்திலிருந்து விடுதலை

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். - (1 யோவான் 1:8-9).

ஒரு கூட்ட தவளைகள் தண்ணீரை நோக்கி வேகமாக ஓடின. போகும் பாதை எப்படி உள்ளது என்று கூட பார்க்கவில்லை. மூன்று தவளைகள் வழியில் உள்ள பெருங்குழியில் விழுந்து விட்டன. மற்ற தவளைகளோ பாதையை நோக்கி செல்லாமல் குழியின் அருகே வந்து நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன. விழுந்த வேகத்தில் அந்த மூன்று தவளைகளும் எப்படியாவது மேலே வந்து விட வேண்டுமென்று வேகவேகமாக தாவின. இதை மேலிருந்து பார்த்து கொண்டிருந்த தவளைகளில் ஒன்று, 'நீங்கள் மேலே வரவே முடியாது. ஏன் வீணாக முயற்சிக்கிறீர்கள்' என்றது. இதை கேட்டவுடன் அந்த தவளை சோர்ந்து ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டது. இரண்டு மட்டும் மேலே வர முயற்சித்தன.

மேலேயிருந்த மற்றொரு தவளை கூறியது, 'மழைக்காலம் வரும் அப்போது இநத குழி மழை நீரால் நிரப்பப்படும். அப்போது நீங்கள் எளிதாக நீந்தி வெளியே வந்து விடலாம். அதுவரை இங்கே இருங்கள்' என்றது. அதுதான் சிறந்த யோசனை என்று இரண்டாவது தவளையும் எண்ணி தாவுவதை நிறுததியது. ஆனால் ஒன்று மட்டும் விடாப்பிடியாக வெளியே வர முயற்சித்தது. ஆனால் உடனிருந்த இரு தவளைகளும் 'நீயும் எங்களுடன் இரு. உனக்கு துணையாகத்தான் நாங்கள் இருக்கிறோமே' என்றன. ஆனாலும் காது கேளாதது போல பெருமூச்சுடன் தாவித்தாவி மேலேயும் வந்து விட்டது அந்த தவளை.

வேதத்தில் சிலர் பாவத்தில் விழுந்து திரும்ப எழுந்தரிக்க முயற்சிக்கவே இல்லை. அவர்கள் முயற்சித்திருந்தால் ஒருவேளை பாவததிலிருந்து வெளியே வந்திருக்கலாம். ஆனால் அவர்களோ பாவத்தில் இருப்பதையே விரும்பினார்கள்.

ஆனால் தாவீது ராஜா பாவத்தில் விழுந்து, அதை நாத்தான் தீர்க்கதரிசி கண்டித்தவுடன் அதை ஒப்புக்கொண்டு, அந்த பாவத்திற்கு மனம் வருந்தினார். பாவத்தை தேவனிடம் அறிக்கையிட்டார்.

நாமும் நமது வாழ்க்கை பயணததில் அறிந்தோ அறியாமலோ பாவத்தில் விழுந்து விடுகிறோம். விழுந்த நாம் அதிலிருந்து மீள முயற்சிக்கும்போது, சாத்தான் நம்மிடம், 'நீ எழும்பவே முடியாது. பாவமே இன்பம், நீ உன்னை சரிபடுத்த முயற்சிக்காதே' என்பான். நம்முடன் இருக்கும் நண்பர்களோ 'வயதாகும் காலம் வரும். அப்போது நாம் முயற்சிக்காமலேயே பாவ ஆசைகள் நம்மை விட்டு போய்விடும். அதுவரை இன்பம் காண்போம் என்று கூறலாம். மற்றொரு கூட்ட நண்பர்கள் 'நீ மட்டும் ஏன் அடிக்கடி குற்ற உணர்வு அடைகிறாய்? நாங்களும் உனக்கு துணையாக இருக்கிறோம், நீ மாட்டி கொள்ள மாட்டாய்' என்பார்கள். பாவத்தில் உழலும் மக்களின் பேச்சும் இதுவே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...