இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள்ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).
ஒரு வயதான மனிதருக்கு, ஒரு பழைய வீடு ஒன்று இருந்தது. அதை விற்கக் கேட்டு சிலர் அவரை அணுகினார்கள். அந்த மனிதரும் சந்தோஷமாய் அதை விற்க ஒப்புக் கொண்டு, அவர்கள் கேட்ட பணத்திற்கு விற்க ஒத்துக் கொண்டார். பிறகு, அந்த வீட்டிற்கு வெளியே பெயின்ட் அடித்து, மேலே கூரையை திரும்ப சரியாக்கி, அந்த வீட்டைக் கொடுக்கும்போது அழகாக கொடுக்க வேண்டும் என்று, வீட்டின் முன்னால் இரண்டு மரங்களையும் நட்டார். அதை வாங்கியவர்கள் இந்த வீட்டை வாங்கியதற்காக பெருமைப்பட வேண்டும்என்று அவற்றை செய்து முடித்து, அதை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் அந்த வீட்டை வாங்கியவர்கள், ஒரு புல்டோசரைக் கொண்டு வந்து அந்த வீட்டை இடிக்கத் தொடங்கினார்கள். அதைக் கண்ட அந்த வயதான மனிதன், பதறிப் போய், ‘ஏன் இடிக்கிறீர்கள்?’ என்றுக் கேட்டார். அதற்கு அந்த வீட்டை வாங்கியவர்கள், ‘ஐயா, எங்களுக்கு ஒட்டுப் போடப்பட்ட இந்த பழைய வீடு வேண்டாம், இந்த இடத்தில், வானளாவும் கட்டிடம் கட்டப் போகிறோம். அந்த கட்டிடத்திற்கு முன்னால், நீரூற்று இருக்கும். கார்கள் நிறுத்தப்பட பெரிய இடம் இருக்கும். அநேகர் வந்து குடியிருக்கத்தக்கதான பெரிய அபார்ட்மென்டைஇந்த இடத்தில் கட்டப் போகிறோம்’ என்றுக் கூறினர்.
நமது தேவனும் நம்மிடத்தில் காணப்படும் சில நல்லக்காரியங்கள், சில நல்ல செய்கைகள் இவற்றைக் கொண்டு ஒட்டுப் போடப்பட்ட வாழ்க்கையை விரும்புவதில்லை. நம்முடைய நீதிகள் அழுக்கான கந்தை என்று அவர் அறிவார். அவர் நம்மை முற்றிலும், புதிய சிருஷ்டியாக, தம் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றவே விரும்புகிறார். ‘தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமதுகுமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்’ - (ரோமர் 8:29).