கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Thursday 27 September 2012

எஜமானருடைய தொடுதல் (the touch of the Master’s Hand)

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. - சங்கீதம் 118:22-23.

ஒரு இடத்தில், ஏலம் விடுபவர் ஒரு பழைய வயலினை (Violin) எடுத்து, ஏலம் விட ஆரம்பித்தார். அந்த வயலின் மிகவும் பழையதாக, தூசி படிந்ததாக, அதனுடைய நரம்புகள் (Strings) எல்லாம் தொய்ந்துப் போனதாக, அநேக நாட்களாக உபயோகிக்கப்படாததாக இருந்தது.

ஏலம் விடுபவர் நினைத்தார், இதைப் போய் நான் ஏலம் விடுகிறேனே, யார் வாங்கப் போகிறார்கள்? என் நேரம் இதற்காக வீணாகப் போவதுதான் மிச்சம் என்று நினைத்தவராக, அதை ஏலம் விடுவதற்க்கு, ஒரு டாலர், இரண்டு டாலர் என்று ஆரம்பித்தார். ஓருவர் மூன்று
டாலர் என்றுக் கூறவும், மூன்று டாலர் ஒரு தரம், மூன்று டாலர் இரண்டு தரம், மூன்று டாலர் மூன்று தரம் என்று கூறி முடிப்பதற்குள், ஒரு சத்தம், ‘பொறுங்கள்’ என்றுக் கேட்டது. ஒரு உயரமான மனிதர், முன்பாக வந்துக் கொண்டிருந்தார், அவர் வந்து, அந்த வயலினைக்
(Violin) கையில் எடுத்து, அதைத் துடைத்து, தொய்ந்துப் போயிருந்த அதன் நரம்புகளை (Strings) சரியாக டியூன் பண்ணி, அதை மெருகேற்றினார். இப்போது அந்த
வயலின் (Violin) புதுப் பொலிவோடு ஜொலித்தது. அதிலே அழகான ஒருப் பாடலை இசைக்க ஆரம்பித்தார்.

பாடல் நின்றவுடன், ஏலம் விடுபவர், மெதுவான சத்தத்தில், அந்த வயலினின் (Violin) அருமையை உணர்ந்தவராக, இப்போது, இந்த வயலின் (Violin) 1000 டாலர் ஒரு தரம் என்று கூற ஆரம்பித்தார். ஒருவர் 2000 என்றுக் கூற, இன்னொருவர், 3000 என்று போட்டியிட ஆரம்பித்தனர். கடைசியாக 4000த்தில் அதன் ஏலம் முடிந்தது. கூடியிருந்த மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ‘2 டாலருக்குப் விலைப் போன அந்த வயலின் இப்போது 4000 டாலருக்கு எப்படி போயிற்று’ என்று அந்த ஏலம் விடுபவரை கேட்டபோது அவர் சொன்னார், ‘அதுதான் எஜமானனுடைய கைகளின் தொடுதல்’, (the touch of the Master’s Hand) என்று.

அன்பானவர்களே, ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம், ‘என்னால் என்ன பிரயோஜனம்?’ பாவத்திலும், துன்பத்திலும் அடிபட்டு, பொலிவிழந்து இருக்கிற என்னால் என்ன பிரயோஜனம்? என்று நினைக்கிறீர்களா? எஜமானர் உங்களை தொடும்போது நீங்கள் ஜொலிக்க ஆரம்பிப்பீர்கள். உங்களுக்கு தெரியுமா? ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.  உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய்  எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். - (1கொரிந்தியர் 1:27-28).

சமீபத்தில் ஒரு அருமையான ஊழியர் எங்கள் சபைக்கு வந்திருந்தார். அவர் இந்துக் குடும்பத்தை சேர்ந்தவராக, ஏழு தலைமுறையாக மந்திரவாதத்தில் ஈடுபட்டு, தன்  குடும்பத்தில் அநேகர் பைத்தியங்களாக திரிந்து, வாழ்க்கையில் சந்தோஷத்தைக் காணாதவராக,  அவருக்கு பிறந்த ஆறு குழந்தைகள் அடுத்தடுத்து, மரித்துப் போய் அவரும் அவருடைய மனைவியும் தற்கொலைதான் முடிவு என்று முடிவுசெய்து அதற்கு ஆயத்தம் செய்தபோது, கர்த்தர் “மகனே” என்று அவரை அழைத்து, தம்மை வெளிப்படுத்தி, அவரை தமது  கனமான ஊழியத்திற்கு தெரிந்துக் கொண்டார். அவர் செய்த ஒவ்வொரு பிரசங்கங்களும் முத்தானவை. வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு
ஆச்சரியமாயிருக்கிறது. - சங்கீதம் 118:22-23).

ஆம் பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஒரு பயங்கர
மந்திரவாதியை கர்த்தர் எடுத்து, அவருக்கென்று உபயோகிக்க கூடுமானால் உங்களை உபயோகிப்பது அவருக்கு லேசான காரியம்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முத்துக்கள் என்பது கர்த்தருக்குத் தெரியும். லேகியோன் பிசாசு பிடித்திருந்த ஒருவனுக்காக  இயேசுகிறிஸ்து கலிலேயாவைக் கடந்து, கதரேனருடைய நாட்டிற்கு வந்து, அவனை சுகப்படுத்தி, அவனை கிறிஸ்துவின் அற்புதங்களை சொல்லும் ஊழியக்காரனாக மாற்றினார், அவர் ஒரு ஆத்துமாவிற்காக கரிசனையுள்ள தேவன். நான் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லதவன், என்னால் கர்த்தருக்கு என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? அந்த லேகியோன் பிசாசு  பிடித்திருந்த ஒருவனால் ஒரு பட்டணத்தை ஆதாயப்படுத்த முடியுமானால் (லூக்கா 8:39-40) எல்லா ஞானத்தோடும் உங்களை உருவாக்கின கர்த்தருக்கு உங்களால் எதையும் செய்ய முடியும். 

இயேசுகிறிஸ்துவுடன் உரையாடிய சமாரிய ஸ்திரீ வேறு ஒன்றும் செய்யவில்லை. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி; நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள் (யோவான் 4:28,29,39). அவள் போய் மற்றவர்களுக்கு ‘வந்துப் பாருங்கள்’ என்று மட்டுமே கூறினாள். அதைப் போல உங்கள் சபைக்கு மற்றவர்களை வந்துப் பாருங்கள் என்று நீங்கள் அழைக்கலாம். அவர்கள் வந்து, ஜீவனுள்ள தேவனை  அவர்களே அறிந்துக் கொள்வார்கள்.

Wednesday 26 September 2012

பொறுமையோடு காத்திருக்கும் தந்தை


எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். - 1 பேதுரு.4:7.

அந்த ஹோட்டலில் இரண்டாவது முறையாக சர்வர் அந்த மனிதரிடம் வந்து ‘ஐயா ஏதாவது வேண்டுமா?’ என்றுக் கேட்டான். அவர் வந்து அரை மணி நேரம் ஆகிறது. அவரோ, ‘இல்லை இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கிறேன். அவள் வந்து விடுவாள்’ என்றார். 

அந்த மனிதர் பார்க்க அழகாக நல்ல உடை உடுத்தி இருந்தார். யாரையும் ஈர்த்திழுக்கும் தோற்றம்.  அவளுக்காக அவர் காத்திருந்தார்;  தனிமையாக அமர்ந்திருந்து பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னும் அரை மணிநேரம் கழித்து, சர்வர் திரும்பவும் வந்து,  ‘ஐயா காப்பியாவது கொண்டு வரட்டுமா?’ என்றுக் கேட்டான். அவரும் ‘சரி’ என்றார். அவன் காபி கொண்டுவந்து கொடுத்து விட்டு, ‘ஐயா உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் ஒன்று கேட்கட்டுமா?’ என்றுக் கேட்டான். அதற்கு அவர் கேள் என்றார். ‘ஐயா நீங்கள் இன்று 3 ஆவது நாளாக அந்தப் பெண்ணிற்காக காத்திருக்கிறீர்கள். அவளோ வரவேயில்லையே,  ஏன் அவளுக்காக காத்திருக்க வேண்டும்?  நீங்கள் மற்ற வேலைகளை கவனிக்கலாமே’ என்றான்.  அதற்கு அவர்‘அவள் சொன்னாள் நான் வருவேன் என்று,  அதோடு அவளுக்கு நான் தேவை’ என்றார். ‘ஐயா அவளுக்கு நீங்கள் தேவை என்றால் இன்று மூன்றாவது நாளாக உங்களை காக்க வைக்கமாட்டாளே’ என்றான். ‘அவள் சொன்னாள், தான் இன்று வருவதாக நான் அவளை அதிகமாய் நேசிப்பதால் அவளுக்காக காத்திருக்கிறேன்’ என்றார். அந்த சர்வர், இந்த மனிதனுக்கு பைத்தியம் ஏதாவது பிடித்திருக்குமா? என்று யோசித்துப் பார்த்து,  இல்லை ஆளைப் பார்த்தால் நன்றாக இருக்கிறார், என்னவோ நமக்கு என்ன என்று போய் மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தான். நேரம் கடந்துக் கொண்டே இருந்தது. அவளோ வரவேயில்லை. அவளது சத்தத்தைக் கேட்க வேண்டும்,  அவளோடு எத்தனையோ காரியங்களை பகிர்ந்துக கொள்ள வேண்டும் என்று அவர் பொறுமையோடு காததிருந்தார். ஹோட்டலை மூடும் நேரம் வந்தபோது அந்த சர்வர் மீண்டும் வந்து, ‘ஐயா உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?  என்றுக் கேட்டான்.’ அதற்கு அவர், ‘இன்று அவ்வளவுதான், நான் புறப்படுகிறேன்’ என்று விரக்தியுடன்  சொல்லிவிட்டு, கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து விட்டு, புறப்படும்போது அங்கு இருந்த கிளர்க்கிடம்,  நாளை சரியாக 6 மணிக்கு இரண்டு பேருக்கு டேபிளை புக் பண்ணி விடுங்கள் என்றுச் சொல்லி விட்டு தனது ஏமாற்றத்தை மறைக்க மெல்லியதாக புன்னகைத்து விட்டுச் சென்றார். 

அவர் வெளியே போகும்போது யாருக்காக அவர் அத்தனை நேரம் காத்திருந்தாரோ, அவள் தனது படுக்கைக்கு சென்றாள். அன்று சாயங்காலம் முழுவதும் தன் தோழிகளோடு வெளியே சென்றிருந்ததால் அவளுக்கு ஒரே களைப்பு. அடுத்த நாள் அலாரம் வைக்க தனது கடிகாரத்தை பார்த்தபோது அதன் கீழ் ஒரு தாளில் இன்று ஆறு மணிக்கு ஜெபிக்க வருவதாக எழுதி வைத்திருந்தாள். ஐயோ மறந்துப் போய்விட்டோமே! என்ற ஒரு சிறிய வருத்தம் மனதில் தோன்றியது.  அதை புறம்பே தள்ளிவிட்டு நாளை பார்த்துக் கொள்ளலாம், இயேசுகிறிஸ்து மன்னித்து விடுவார்  என்று எண்ணியபடி படுக்கச் சென்று விட்டாள். 

இன்று நம்மில் அநேகர் ‘அப்பா எனக்கு இதைச் செயயும், நான் தினமும் ஜெபிப்பேன்’ என்று வாக்கு  பண்ணுகிறோம் ஆனால் காரியம் நடந்த பிறகு அதை மறந்துப் போகிறோம். கர்த்தர் மன்னித்து  விடுவார் என்கிற குருட்டு நம்பிக்கை. ஆனால் அவர் காத்திருக்கிறார் என்பதை மறந்து போய்  விடுகிறோம். இன்று எத்தனை குடும்பங்களில் குடும்ப ஜெபம் வைப்பதில்லை. தேவனிடம் நாம்  பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு குடும்பமாக ஒரு நன்றி தெரிவிக்கக்கூட நாம் ஜெபிப்பதில்லை.  குடும்ப ஜெபம் இல்லாத வீடு, கூரை இல்லாத வீடு என்று என் பெற்றோர் சொல்லியிருக்கிறார்கள்.  கூரை இல்லாத வீடு எல்லா மழைக்கும் காற்றுக்கும் தூசிக்கும் திறந்திருக்கிற மாதிரி எல்லா 
கஷ்டங்களுக்கும் பிசாசின் கிரியைகளுக்கும் திறந்துக் கொடுக்கிற மாதிரியாகும்.  அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்;அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று என்று கர்த்தரிடம் முறையிட்டான். அப்படியானால் நம் குடும்பத்தைச் சுற்றி 

Monday 24 September 2012

ஜெபம் செய்திடுவோம்

இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். - (யோவான் 16:24).

புதிதாய் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் எப்படி ஜெபிப்பது என்று தெரியாமல் இருப்பார்கள். எவ்வளவு நேரம் ஜெபிக்க வேண்டும்? எப்படி ஜெபிக்க வேண்டும்? என்ன சொல்லி ஜெபிக்க வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்கு கேள்விகள் எழும்பலாம்.

ஒரு மனிதர் மிகவும் உடல்நிலை மோசமாகி, ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்தார். அவர் புதிதாய் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர். அவருக்கு சொல்லிக் கொடுக்க யாருமில்லை. அப்போது அவரைக் காண வந்த போதகரிடம், அவர், தன்னுடைய ஜெபிக்க தெரியாத நிலைமை ஒப்புக் கொண்டு, தான் ஜெபிக்க முற்பட்டதாகவும், ஆனால் ஜெபிக்க ஆரம்பிக்கும்போது, தன் மனம் அங்குமிங்கும் அலைவதாகவும் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று அறியாமல் இருப்பதாகவும் தனக்கு உதவி செய்யும்படியாகவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அப்போது போதகர், தான் ஜெபிக்கிற விதத்தைக் குறித்து அந்த மனிதரோடு பகிர்ந்துக் கொணடார்.தன் பக்கத்தில் ஒரு காலி நாற்காலியைப் போட்டு, அங்கு இயேசுகிறிஸ்து அமர்ந்திருப்பதாக கற்பனை செய்தபடி, தன் மனதில் இருப்பதை அவரிடம் வெளிப்படுத்துவதாகவும் அவர் சொன்னார். அந்த மனிதரிடமும் அப்படி செய்துப் பார்க்க அறிவுரைக் கூறினார்.

அந்தப்படியே அந்த மனிதரும செய்து, முதலில் அரை மணிநேரம் ஆரம்பித்து சில வேளைகளில், இரண்டு மணிநேரம், மூன்று மணி நேரம் போவதே தெரியாமல், கிறிஸ்துவோடு கூட மிக நெருங்கிய உறவு வைத்தவராக ஜெப வீரனாக மாறினார். அங்கு அவரிடம் வந்த நர்சுகளும் அவருடைய ஜெப வாழ்க்கையைக் கண்டு தொடப்பட்டனர்.

திரும்ப போதகர் அவரைக்காண வந்தபோது, அங்கிருந்த நர்சுகள், அவரிடம், கடந்த நாளில் அவர்மரித்துப போனதாகவும், இறப்பதற்கு முன்பு தன் படுக்கையை விட்டு, இறங்கி, அந்த நாற்காலியில் தன் தலையை சாய்த்தவராக, அப்படியே மரித்துப்போனதாகவும் கூறினர். அவர்களுக்கு அது புரியாத புதிராக இருந்தது. ஆனால் போதகர் அதை அறிந்த போது, அந்த மனிதர் தேவனோடு கொண்டிருந்த உறவைப் புரிந்துக் கொண்டார்.

நாம் ஜெபிக்கும்போது, வார்த்தை அலங்காரங்களோடு ஜெபித்தால்தான் கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்பார் என்று நம்மில் சிலர் தப்பர்த்தம் கொள்கிறோம். நமக்கு தெரிந்த மொழியில் வார்த்தையில் ஜெபித்தாலே கர்த்தர் அதைக் கேட்க ஆவலாயிருக்கிறார். புதிதாய் பிறந்து வளரும் குழந்தை பேச ஆரம்பித்த உடனே சரியான வார்த்தைகளை பேசி விடாது. அதற்கு தெரிந்ததெல்லாம், மா, பா, தாதா இதுதான். ஆனால் அதைக் கேட்கும் பெற்றோருக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி! என் பிள்ளை பேசி விட்டானே என்று, அதுப்போலத்தான் நாம் தினமும் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்ப்பார்க்கிறார். நாம் என்ன சொன்னாலும் அவர் அதில் பிரியப்படுகிற தேவனாய் இருக்கிறார். நாம் ஜெபிக்காதபோதுதான் அவர், பிறந்த குழந்தை பேசாமல் இருந்தால் பெற்றோர் எப்படி வருத்தப்படுவார்களோ அதுப்போல அவரும் வருத்தப்படுவார். நமக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரோடு உரையாடுவோம். முட்டிப் போட்டுதான் அவரோடு பேச வேண்டும் என்பதில்லை. நாம் வேலை செய்துக் கொண்டே, பெண்கள் சமைத்துக் கொண்டே, அவரோடு பேசிக் கொண்டே இருக்கலாம். வார்த்தை அலங்காரம் தேவையில்லை. செய்யுள் போன்ற உரைநடை தேவையில்லை, சாதாரண மொழியிலே பேசலாம்.

நான் காலையில் எழுந்தவுடன் புன்னகையுடன், Daddy, Good Morning என்றுச் சொல்லுவேன். இந்த நாளைக் காண கிருபைச் செய்தீரே நன்றி என்றுச் சொல்லி படுக்கையை விட்டு எழுந்தரிப்பேன். அப்படி சின்ன சின்னதாக ஜெபித்து, அப்படியே வளர்ந்து வரும்போது நம் ஜெப நேரம் இனிமையாக மாறிவிடும். ஒவ்வொரு நாளும் ஜெபித்து ஆரம்பித்து, ஜெபித்து முடிக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். 
ஜெபமே ஜெயம்!

ஜெபம்: 
எங்களது ஜெபத்தைக் கேட்டு, எங்களுக்கு பதில் தருகிற எங்கள் நல்ல தேவனே உம்மைத் துதிக்கிறோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் ஜெபிக்க எங்களுக்கு கற்றுத்தாரும். உம்மோடு கூட உறவாட, நேரத்தை ஜெபத்தில் செலவழிக்க எங்களை பழக்கப்படுத்திக் கொள்ள உதவிச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Saturday 22 September 2012

அன்புகூருவாயாக

இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்;. - லூக்கா. 10:36,37. 

சமீபத்தில் ஈட்ஹழ்ப்ங்ள் நஸ்ரீட்ன்ப்ற்க்ஷ், Charles Schultz, (the creator of the "Peanuts" comic strip) ஒரு சில கேள்விகளை எழுதியிருந்தார். இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. படித்தாலே உங்களுக்குப் புரியும்.
 
1. உலகத்தில் மிகவும் பணக்காரரான ஐந்துப் பேரை குறிப்பிடவும் 
2. ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஐந்துப் பேரைக் குறிப்பிடவும் 
3. மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற அழகியர் ஐந்து போரை குறிப்பிடவும் 
4. சிறந்த நடிகர்கள் நடிகைகளுக்கான விருதை வென்ற ஐந்துப் பேரை குறிப்பிடவும் 
5. நோபல் பரிசு வென்ற பத்துப் பேரை குறிப்பிடவும் இவர்களில் யாருடைய பேராவது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியவர்கள். ஆனால் அவர்களுடைய புகழ் ஓய்ந்தது. 

அவர்கள் செய்த சாதனைகள் மறக்கப்பட்டு போயின, அவர்களுடைய பேர் நிலைத்திருக்கவில்லை. ஆனால் இப்போது சிலக் கேள்விகள் கேட்கிறேன், பதில் தர முடியுமா என்று பாருங்கள்: 

1. உங்களுடைய பள்ளியில் உங்களுக்கு உதவிய சில ஆசிரிய ஆசிரியர்களின் பெயர்களைக் கூற முடியுமா? 
2. உங்கள் கஷ்ட நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களின் பெயர்களை சொல்ல முடியுமா? 
3. உங்களுக்கு அருமையான வாழ்க்கையின் பாடங்களை சொல்லிக் கொடுத்த சிலரது பேர்களைச் சொல்ல முடியுமா? 
4. நீங்கள் சிறந்தவர்கள் என்று உங்களை நினைக்க வைத்த, உங்களை பாராட்டிய சிலரதுப் பெயர்களைச் சொல்ல முடியுமா? 
5. நீங்கள் உங்கள் நேரத்தை செலவிட விரும்பும்; நண்பர்கள் சிலரைக் கூற மடியுமா? ஆம் இதற்கு உங்களால் உடனே பதில் சொல்ல முடியும். ஏனென்றால், இவர்கள் உங்களுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தினவர்கள், இவர்கள் நிறைய பயம் படைத்தவர்கள் இல்லை, பெரிய சாதனைப் படைத்தவர்கள் இல்லை, ஆனால் இவர்கள் உங்களை நேசிக்கிறவர்கள். இவர்கள் உங்களை விசாரிக்கிறவர்கள். 

இவர்களை நிச்சயமாக உங்களால் மறக்க முடியாது. கர்த்தர் நல்ல சமாரியனின் உவமையில் இரக்கம் காட்டும்படியாக நமக்கு அறிவுறுத்துகிறார். இந்த உலகத்தில் தங்களை நேசிக்க யாருமில்லையே என்று அன்புக்காக ஏங்குகிற மக்கள் அநேகர் உண்டு. வெளியே பகட்டாக காட்சியளித்தாலும் உள்ளே அவர்கள் மனம் அன்புக்காக ஏங்குகிறது. ஏனென்றால் தேவன் மனிதனை படைக்கும்போது உணர்ச்சிகளோடு படைத்தார். 

Friday 21 September 2012

காலத்தை பிரயோஜனப்படுத்து

ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். - (எபேசியர் 5: 15-17).

ஒரு மனிதன் தன் விடுமுறை நாளில், மீன் பிடிப்பதற்காக சென்றான். அப்போது ஒரு அழகிய மீன் அவனுடைய தூண்டிலில் சிக்கியது. அதைப் பார்த்து, அவன் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தபோது, அந்த மீன் பேச ஆரம்பித்தது, ‘தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள், நான் உங்களுடைய மூன்று ஆசைகளை நிறைவேற்றுகிறேன்’ என்று சொன்னது. 

அப்போது அந்த மனிதன், ‘இல்லை, எனது ஐந்து ஆசைகளை நிறைவேற்று, நான் உன்னை விட்டு விடுகிறேன்’ என்றுக் கூறினான். அதற்கு அந்த மீன், 'எனக்கு மூன்று ஆசைகளை நிறைவேற்றதான் சக்தி இருக்கிறது' என்று சொன்னது, அப்போது அந்த மனிதன், ‘இல்லை, எனக்கு நாலரை ஆசைகளையாவது, நிறைவேற்ற வேண்டும்’ என்று திரும்ப பேரம் பேசினான்.‘ஓ, என்னால் மூன்றுதான் முடியும் என்று சொன்னேனே, 

தயவு செய்து என்னை விட்டுவிடு’ என்று அவனிடம் கெஞ்சியது. ஆனால் அந்த மனிதனோ, ‘சரி, குறைந்த பட்சம் நான்காவது கொடு’ என்று சொல்லி முடிப்பதற்குள் இந்த மீன் அவனது கைகளிலேயே மடிந்துப் போனது. அவன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பேரம் பேசியே நழுவ விட்டான். ஒரு வேளை இந்த வாரம் உங்களுக்கு உங்கள் தகுதிக்கு மேல் செய்யும்படியாக, ஒரு வேலை வரலாம், ஆனால், நீங்கள் ஐயோ, என்னால் செய்ய முடியாது என்று நினைக்கலாம், ஒருவேளை நான் செய்யப் போய் தோல்வி அடைந்து விட்டால் என்ன செய்வது? என்று நினைக்கலாம், ஆனால் ஒருவேளை அது வெற்றியாக முடிந்து விட்டால்? சில நல்ல காரியங்களில், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சந்தர்ப்பங்களை நாம் நழுவ விடக் கூடாது. ஜெபித்து, ஞானமாய் அதை முயற்சி செய்ய வேண்டும். 

ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் என்ற வேதம் நமக்கு ஆலோசனை கூறுகிறது. ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் வேதம் நம்மை எச்சரிக்கிறது. நாட்கள் மிகவும் பொல்லாதவைகளாய் இருப்பதால், நாம் நம் ஆத்தும இரட்சிப்பை தள்ளிப் போடக்கூடாது. நாளை ஒருவேளை நமக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்றால், என்ன செய்வோம்? இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள் (2 கொரிந்தியர் 6:2) என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். 

ஆகவே காலத்தை பிரயோஜனப்படுத்தி, இரட்சிக்கப்படுவோம். நமது கையில் கொடுக்கப்பட்டிருக்கிற சந்தர்ப்பத்தை, தருணத்தை, காலத்தை நாம் வீணாக்காமல், ஞானமாய் அதை பிரயோஜனப்படுத்திக் கொள்ள தேவன் தாமே, கிருபை செய்வாராக! ஜெபம்: எங்களை நேசிக்கிற நல்ல தேவனே, இந்த புதிய மாதத்தின் முதலாம் நாளை ஜீவனோடுக் காண எங்களுக்கு பாராட்டின கிருபைக்காக உம்மைத் துதிக்கிறோம். நீர் கிருபையாக கொடுத்திருக்கிற ஒவ்வொரு நாளையும் நாங்கள் அநாவசியமாக வீணாக்காமல், ஞானமாய் செலவு செய்ய எங்களுக்கு ஞான இருதயத்தை தாரும். கொடுக்கப்படுகிற சந்தர்ப்பங்களை வீணடிக்காமல், எங்கள் ஆவிக்குரிய காரியங்களில் நாங்கள் இன்னும் கருத்தாய் ஜீவிக்க வாழ கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

தகப்பனின் வாக்கு

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். –     யோவான் - 16:33.

1989-ம் ஆண்டு ஆர்மேனியா (ஆழ்ம்ங்ய்ண்ஹ) தேசத்தில் நடந்த நான்கு நிமிடத்திற்கும் குறைவான பூமி அதிர்ச்சியில் (ரிட்சர் ஸ்கேலில் 8.2) – (தண்ஸ்ரீட்ற்ங்ழ் ள்ஸ்ரீஹப்ங்) ஏறக்குறைய 30,000 மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது அங்கு இருந்த நிலைமையை சற்று சிந்தித்துப் பார்த்தால் தெரியும், எவ்வளவு பரிதாபமான நிலைமை என்று. எங்கு பார்த்தாலும் ஓலங்களும், தங்களுக்குரியவர்களை இழக்க கொடுத்த துயரத்தில் அழுகைகளும், உயிரோடு இருப்பவர்களை தேடிக் கொண்டிருந்த உறவினர்களும் என்று ஒரே துயரமான சூழ்நிலை. அதில் ஒரு தகப்பன் தன் மகன் படித்துக் கொண்டிருந்த பள்ளியை நோக்கி விரைந்தார். 

அங்கு பள்ளிக்கு பதிலாக அந்த இடத்தில் இடிபாடுகளோடுகூட கல்லும் மண்ணும் குவியலாக இருந்தது. அதைப் பார்த்த தகப்பனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மற்ற பெற்றோர் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தியபடி தங்களது பிள்ளைகளின் பெயர்களை கூப்பிட்டுக் கொண்டே தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தத் தகப்பனோ தனது மகன் படித்துக் கொண்டிருந்த வகுப்பு இருந்த இடத்தை தேடி கண்டுபிடித்து, அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தார். அவர் தன் மகனிடம் சொல்லியிருந்தார், தான் எப்போதும் தன் மகனுடன் இருப்பேன் என்றும் அவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றும் வாக்கு பண்ணியிருந்தார். 

அவர் தோண்ட ஆரம்பித்தபோது, மற்ற பெற்றோர், ‘கால தாமதமாகிவிட்டது, எல்லாரும் மரித்து விட்டனர், இனி ஒரு பிரயோஜனமில்லை’ என்றுக் கூறி அவரை தடுத்தனர். அவரோ விடாமல் தோண்ட ஆரம்பித்தார். தீயணைப்பு படையினர் வந்து ‘எங்கும் தீ பற்றி எரிந்து, வெடிக்கிறது, நீங்கள் எது செய்தும் பிரயோஜனமில்லை வீட்டுக்கு போய் விடுங்கள்’ என்று கூறி அவரை எச்சரித்தனர். அவரோ விடாப்பிடியாக தோண்டிக் கொண்டே இருந்தார். கடைசியாக போலீஸ் படையினர் வந்து ‘உங்கள் வேதனை எங்களுக்குப் புரிகிறது. இப்போது எந்தப் பயனும் இல்லை, போய் விடுங்கள்’ என்று அவரை அந்த இடத்திலிருந்து இழுத்தனர். அவரோ தன் மகன் மேல் கொண்டிருந்த அன்பினால் தொடர்ந்து தோண்டிக் கொண்டே இருந்தார். 8மணி நேரம்.. 12.. 24.. 34 மணிநேரம் தொடர்ந்து ஓயாமல் தோண்டிக் கொண்டே இருந்தார். 38ஆவது மணி நேரத்தில் அவரது மகன் உதவிக்கு அழைக்கும் அழுகுரல் அவருக்கு கேட்டது. உடனே ‘ஆர்மண்ட்’ (ஆழ்ம்ர்ய்க்) என்று உரத்த சத்தமாக கூப்பிட்டு பார்த்தார். 

Thursday 20 September 2012

உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது

உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க
விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். - (மத்தேயு 20: 26,27).

மிகச்சிறந்த படிப்பாளரான Booker T. Washington என்பவர் Hampton Institute in Virginia என்னும் இன்ஸ்டியூட்டியில் சேருவதற்காக இன்டர்வியூவிற்காக
சென்றிருந்தார். அந்த இன்ஸ்டிடியூட் மிகவும் பெயர் பெற்றதாகும். அதில் இடம் கிடைப்பது மிகவும் அரிது, அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியை அங்கிருந்த வகுப்பறையை கழுவ சொல்லிவிட்டு, அங்கிருந்த பெஞ்சுகளையும் துடைக்க சொல்லி விட்டு போனார்கள். அவர் பாடம் சம்பந்தமான கேள்வியை கேட்பார்கள் என நினைத்தால் இந்த வேலையை சொல்லுகிறார்களே என்று அவருக்கு கோபமிருந்தாலும்  வேறுவழியில்லாமல், அதை துடைக்க ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த தலைமை ஆசிரியை எல்லாவற்றையும் தனது கைக்குட்டையால் துடைத்து பார்த்து, ‘சிறப்பான காரியத்தை செய்தாய்’ என்று அவரை பாராட்டி அவருக்கு அங்கு ஒரு இடத்தை கொடுத்தார்களாம். அது தன் வாழ்க்கையையே மாற்றிற்று என அவர் தனது புத்தகத்தில் எழுதினார்.

அன்று ஒரு நாள் மேல் வீட்டறையில், இயேசுகிறிஸ்து தன் வஸ்திரங்களைக்
கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு
பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம்
கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினபோது அதை பார்த்து கொண்டிருந்த சீஷர்களுக்கு எப்படி இருந்திருக்கும்! அவர்கள் அவரை
ராஜாவாக, தங்கள் குருவாக, ஆண்டவராக, போதகராக ஏற்றிருந்தபோது அவரே தங்களது கால்களை கழுவுகிறரரே என்று நெருடல் அடைந்திருந்தாலும் அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை. அவர்கள் எதிர்பாராத காரியத்தை கிறிஸ்து செய்து கொண்டிருந்தார். அவர்கள் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார்கள். கடைசியில் பேதுரு மாத்திரம் துணிவுடன், ‘ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா’ என்று கேட்டபோது, இயேசுகிறிஸ்து ‘ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்’. (யோவான் 13:4-15) என விளக்கினார்.

இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிற நமக்குள் தாழ்மை இருக்கிறதா? நாம் தேவனாக வணங்குகிற இயேசுகிறிஸ்துவே கால்களை கழுவினதுண்டானதால், நாம் எவ்வளவு தாழ்மையாய் இருக்க வேண்டும்? அவருடைய மாதிரியை பின்பற்றுகிறோமா? மற்றவர்களுடைய கால்களை கழுவாவிட்டாலும், மற்றவர்களை உதாசீனமாக எண்ணுவதாவது குறைந்திருக்கிறதா? இன்று அந்த தாழ்மைக்கும் நமக்கும் எவ்வளவு தூரமாகி விட்டது! கொஞ்சம் கையில் பணம் கிடைத்து விட்டால், மற்றவர்களை துச்சமாக எண்ணுகிற மனம், (ஏதோ அந்த பணம் என்றென்றும் நிலைத்திருக்கிறமாதிரி) வேலையில் சற்று உயர்த்தப்படடால், மற்றவர்கள்
எனக்கு கீழ் என்கிற மாதிரியான நடவடிக்கைகள், அது வேலையிடத்தில் மாத்திரம் அல்ல, சக விசுவாசிகளிடமும் காட்டுவது எந்த விதத்தில்
நியாயம்? கிறிஸ்துவின் போதகத்திற்கு மாறாக நடக்கிறதல்லவா?

Wednesday 19 September 2012

உற்சாகமாய்க் கொடுக்கிறவரிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்


ஒய்வுநாள் பாடசாலை ஒன்றில் அதன் ஆசிரியர் பிள்ளைகளிடம் ஒரு கேள்வி கேட்டார். உங்களிடம் ஒரு கோடி ஓரு ரூபாய் இருந்தால் அதை இயேசுவிற்;கு கொடுப்பீர்களா? எல்லோரும் ஆம் என்று சத்தம் இட்டார்கள்.

ஜந்நூறு ரூபாய் இருந்தால் அதன் ஒரு பகுதியை கொடுப்பீர்களா?.. “ஆம் ரீச்சர்”
ஜம்பது ரூபாய் இருந்தால் அதன் ஒரு பகுதியை கொடுப்பீர்களா?.. “ஆம் ரீச்சர் கொடுப்போம்”
ஒரு ரூபாய் இருந்தால் அதன் ஒரு பகுதியை கொடுப்பீர்களா?.. “எவருமே எதுவுமே சொல்லவில்லை”. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

அப்போது கடைசி வரியில் இருந்த ரஞ்சன் மாத்திரம் எழுந்து நின்று “ஆம்” என்று கூறினான். ஆனால் அவனிடம் ஒரு ரூபாய் இருக்கவில்லை நான் கொடுப்பேன் என்று கூறி முன்வந்த ரஞ்சன் கையில் இருபத்தைந்து சதமே இருந்தது. அவன் தன்னிடமிருந்ததை இயேசு சுவாமியின் ஊழியத்திற்க்காக கொடுக்க முன் வந்தான். 

மற்றவர்கள் எல்லோரும் கோடி ரூபாய் கொடுப்பேன் என்றார்கள். எனென்றால் அவர்களிடம் அது இருக்கவில்லை ஆனால் அவர்களில் அனேகர் தங்களிடம் இருக்கும் சிறு பணத்தை கொடுக்க முன்வரவில்லை…
நம்மிடம் ஒரு கோடி இருந்தால் அதை இயேசுவுக்கு கொடுப்போம் என்று சொல்வது இலகு ஆனால் எம்மிடம் உள்ள சிறுதொகை பணத்தை என்ன? செய்கின்றோம்.

ஆம் நாம் இயேசு சுவாமியை எவ்வளவாய் நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவே நாம் அவருக்கு காணிக்கை கொடுக்கிறோம். அல்லது அவருடைய நாமத்தில் இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். ஆகவே நாம் கொடுப்பது வெறும் பணமாக மாத்திரம் இருக்க வேண்டியதில்லை

உற்சாகமாய் கொடுக்கிறவர்கள் என்று வேதம் சொல்லுகிறது அல்லவா? அவர்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பதனால் கொடுக்காமல் தேவன் மீதுள்ள அன்பின் நிமித்தமாக கொடுப்பவர்கள். இயேசு சுவாமிக்கென்று அவருடைய நாமத்தினாலே நீங்கள் கொடுப்பதுண்டா? ஆம் இயேசு நமக்காக தன்னேயே கொடுத்தாரல்லவா?.. முதலில் நாம் நம்மையே அவருக்குக் கொடுப்போம். பிறகு நம்முடையதையும் அவருக்கு கொடுப்போம் நம்மிடம் இருப்பதிலிருந்து காணிக்கை கொடுத்து இயேசுவின் நாமத்தின் நிமித்தம் ஊழியர்களுக்கு நம்மை செய்ய முயற்சிப்போமாக..



மனநோக்கு

..வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி நமக்கு பேர் உண்டாக்கப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்…(ஆதியாகமம் 11 : 4 )

உலகின் அதி உயர்ந்த கட்டிடமாக, கனடாவின் ரொறொன்ரோ நகரில் 1976ம் ஆண்டு ஜீன் மாதம் 26ம் திகதி கோபுரம் ஒன்று மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டுää 1995ல் அமெரிக்க வல்லுனர்களினால் இன்றைய உலகின் மிகச் சிறந்த அதிசயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் உயரம் 447மீற்றர் அல்லது 1465 அடி. மக்கள் சென்றடயக்கூடிய அதி உயரத்திலிருந்து ஏறத்தாழ 160 கிலோமீற்றர் தொலைதுரத்திற்க்கு பூமியின் விஸ்தாரத்தைப் பார்க்கலாம். மக்கள் போகக்கூடிய அதிஉயரமான இடத்திற்க்கு ஏறி கால் வைக்கும் போது ஒரு வாசகம் எழுதப்பட்டுள்ளது உங்கள் தலைக்கு மேல் ஆகாயம் மாத்திரமே அதாவது அந்த இடத்தில் நிற்கும் போது முழு பூமியும் அதன் சகலமும் நமது கால்களுக்கு கீழே என்றுதானே அர்த்தப்படும் இல்லையா? இன்று இந்தக் கோபுரத்தின் 50வீத உயரத்தையும் தாண்டி அதி அதி உயரமான கோபுரம் ஒன்று டூபாய் தேசத்திலே கட்டப்படுகிது. என்ற செய்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பறவையைக்கண்டு விமானம் படைத்த மீன்களைக் கண்டு கப்பலைப்படைத்து எதிரோலி கேட்டு வானோலி படைத்து என்று மனிதன் படைத்த சாதனைகளையெல்லாம் நாம் அறிவோம். ஆனால் மனிதன் எதனைக் கண்டு அதிசயங்களைப் படைக்கிறான்? இயற்கையைப் பார்த்து அவன் படைத்துள்ள படைப்புக்களே அவன் வாழ்விற்க்கு மிக உதவியாயுள்ளன. ஆனால் தன்னுடைய அறிவினால் ஆற்றலினால் படைத்துள்ள இன்றய நவீனங்கள் மனிதனுக்கு எதனைத் தேடிக்கொடுக்கிறது? அங்கேயும் தேவன் அருளிய அறிவுதான் பங்கெடுத்துள்ளது என்பதை அவன் எவ்வளவுதான் உணருவானோ? இந்த அதிசயங்களைப் படைக்கும் மனிதனுக்கு இத்தனை அறிவாற்றல் என்றால் அந்த அறிவை கொடுத்தவருடைய அறிவும் ஆற்றலும் எவ்வளவாய் இருக்கும். என்று யார் சிந்திக்கிறான்?

கோபுரம் கட்டுவது தவறல்ல. ஆனால் அதன் உள்நோக்கம் என்ன என்பது தான் முக்கியம். அன்று மக்கள் தேவனுக்கு அல்ல தமக்கு பேர் புகழ் உண்டாக்க தமக்கு ஒரு ஞாபக சின்னமாக இருக்கவே பாபேல் கோபுரத்தைக் கட்டினர். முடிவில் ஜனங்கள் சிதறிப்போயினர். ஆனால் இன்று மனிதன் தன்னை உயர்த்த உயர்த்த தேவன் பொறுமையோடு பார்த்துக்கொண்டிருப்பதனால் அவர் வலிமையற்று போய்விட்டார். என எண்ண வேண்டாம். கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார் அவ்வளவு தான். அவர் கோபம் பற்றியெரியும்போது அதை யார் தாங்கக்கூடும்? ஆகவே தேவபிள்ளையே நாம் எதைச் செய்தாலும் அதனை தேவ நாமத்திற்கு மாத்திரமே மகிமை உண்டாகச் செய்வோமாக.

ஜெபம் : பிதாவே. நீரே அதிசயமான தேவன். எனது ஒவ்வொரு அடியிலும் உம் நாமம் மகிமைப்படவேண்டும். வேறு நினைவுகள் எனக்கு வேண்டாம் ஜயா. ஆமென்.

பர்த்தலோமேயு சீகன்பால்

இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி:

இந்தியாவிற்கு வந்த சீர்திருத்த திருச்சபையின் (புரோட்டஸ்டான்ட்) முதல் மிஷனரி பர்த்தலோமேயு சீகன்பால்க்கின் வாழ்க்கையும் அவ‌ரது அருட்பணியும் பல இந்தியகிறிஸ்தவர்களின் வாழ்வில் பெரும் தாகத்தை ஏற்படுத்தி மிஷனரிப் பணியில் ஆழ்ந்தஅர்ப்பணத்தையும் விரிவான ஈடுபாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. மிஷனரி அருட்பணியில்அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு, இந்திய பக்தியின் சக்தியைக் குறித்து அவருக்கிருந்தநுண்ணறிவு, இந்திய கலாச்சாரத்தைப் பற்றி நுட்பமாக அறிந்து, கனிவாய் செயல்பட்ட விதம்,மிஷனரி அருட்பணி வெற்றி பெற அவர் கையாண்ட செயல்முறைகள், எல்லாவற்றிற்கும்மேலாக இந்தியா டென்மார்க் குடியமைப்பு ஆளுநராலும் கோப்பின்ஹாகனிலிருந்து மிஷனரிசெயலரால் வந்த எதிர்ப்புகளையும், துன்பங்களையும் அவர் அஞ்சா நெஞ்சுடன் மனந்தளராமல்சந்தித்த விதம் போன்றவை அவரது அரும்பெரும் குணாதிசயங்களில் சில. மேற்கூறிய அவரதுவாழ்க்கையின் மற்றும் அவராற்றிய மிஷனரிப் பணியின் சிறப்பு அம்சங்களை ஆராய்ந்து நமதுமிஷனரி பணிக்கேற்ப மிக முக்கிய பாடங்ளை அறியலாம்.


பிறப்பும் இளமைப் பருவமும்:

சீகன்பால்க் ஜெர்மனியிலுள்ள பால்நிட்ஸில் 1682- ஆண்து ஜூன் 10-ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஒரு பணக்கார தானிய வியாபாரி. அவருக்கு அநேக வீடுகளும், வேலைக்காரர்களும், வயல்வெளிகளும் இருந்தன. இருப்பினும் சீகன்பால்க்கின் பெற்றோருக்கு உடல்நலம் சரி இல்லாமலிருந்தது. அவர்களது பராமரிப்பில் வளர்ந்த குழந்தைகள் அனைவரும் பெலவீனமாகவும் நோய்வாய்ப்பட வாய்ப்புகளுடனும் காணப்பட்டனர். சீகன்பால்க் இதற்கு விதி விலக்கல்ல. (இந்த பெலவீனமான ஊனை தாங்கியவர் கடினமான இந்திய மண்ணில் உழைத்தார் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறதல்லவா?). சீகன்பால்க் சரீரத்தில் பெலவீனராயிருந்தும் உயர்ந்த மனத்திறனையும் ஆழ்ந்த ஞானத்தையும் பெற்றிருந்தார்.


சீகன்பாலிற்கு பக்தி நிறைந்த தாயார் இருந்தார்கள். அவர்கள் மரணப்படுக்கையில் கூறின வார்த்தைகள் இவைகளே: "என் அருமை குழந்தைகளே! திருமறையை ஆராய்ந்து பாருங்கள், அவற்றின் ஒவ்வொரு பக்கங்களையும் என் கண்ணீரால் நனைத்திருக்கின்ற படியால் நீங்கள் அதில் பொக்கிஷத்தைக் காண்பீர்கள்." சீகன்பால்க் அவ்வார்த்தைகளை மறவாது திருமறையைக் கருத்தாய் கற்று வந்தார். சீகன்பால்க்கின் தாயார் இறந்த இரண்டு வருடத்தில் அவரது தகப்பனாரும் இறந்துவிட்டார். இன்னும் ஒரு வருடத்தில் அவரது சகோதரிகளில் ஒருவரும் மரித்துப்போனார்கள். தமது குடும்பத்தில் தொடர்ந்து நிகழ்ந்த இந்த துக்க சாகரம் அவரது மனதையும் தொடர்ந்து பாதித்தது. விரைவில் திறமையையும் இறை இயலையும் கற்றுக்கொள்ள கல்லூரிச் சேர்ந்தார்.

Tuesday 18 September 2012

கடுகுவிதையளவு விசுவாசம்

கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். - (மத்தேயு 17: 20).

ஒரு மிஷனரி பெண், ஜப்பானில், ஒரு அனாதை இல்லத்தில், வேலை செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த அனாதை இல்லம் ஒரு மலைக்கு பின்னால் இருந்தது. மலை சூரிய வெளிச்சத்தை வராதபடி தடுத்ததால், அந்த அனாதை இல்லத்தை சேர்ந்த அநேக பிள்ளைகள் வியாதிப்பட்டார்கள். அந்த மிஷனரி பெண் அந்த அனாதை பிள்ளைகளை நேசித்தபடியால், தினமும் காலையில் அந்தப் பிள்ளைகளுக்கு, வேதத்திலிருந்து வசனத்தை எடுத்துக் காண்பித்து, அதை விளக்கி, காண்பிப்பது வழக்கம்.

ஒரு முறை அவர்கள், ஒரு வருட விடுமுறைக்காக, அமெரிக்க செல்ல இருந்தது. போவதற்கு முன், ‘கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகளை அந்த பிள்ளைகளுக்கு விளக்கி, நீங்கள் விசுவாசத்தோடு ஜெபியுங்கள், ‘கர்த்தர் கிரியை செய்வார்’ என்று சொல்லிவிட்டு, விடுமுறைக்காக சென்றார்கள்.

ஒரு வருடம் கழித்து, அவர்கள் திரும்ப அந்த அனாதை இல்லத்திற்கு வந்தபோது, மிகவும் வித்தியாசமான பாதை இருந்தது. அவர்கள் டிரைவரிடம், ‘நீங்கள் தவறான பாதையில் செல்லுகிறீர்கள்’ என்று கூறினார்கள். ஆனால் ஓட்டுநர், அந்தப் பாதையை நன்கு அறிந்திருந்தபடியால், அனாதை இல்லத்தின் முன், சில நிமிடங்களில் வந்து நிறுத்தினார். அப்போது அந்த மிஷனரி பார்த்தபோது, அதே பழைய கட்டடிம்தான், ஆனால், அதை சுற்றிலும், தோட்டமும் பூக்கள் பூத்து குலுங்குவதையும் கண்டபோது, அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அதற்குள் பிள்ளைகள் வந்து, அவரைக் கட்டித் தழுவி, திரும்ப வரவேற்றனர். அவர்கள் தன் பைகளைக் கூட வைக்காமல், மிகவும் ஆச்சரியத்தோடு என்ன நடந்தது என்று பிள்ளைகளிடம் கேட்டபோது, அந்த பிள்ளைகள், ‘நீங்கள் தானே சொன்னீர்கள், விசுவாசத்தோடு இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம் என்று. நாங்கள் விசுவாசத்தோடு அந்த மலையைப் பார்த்து சொன்னோம், அது அப்படியே நடந்தது. தேவன் அதை பக்கத்திலுள்ள கடலுக்குள் தள்ளி விட்டார்’ என்று சொன்னார்கள்.

என்ன நடந்தது என்றால், ஜப்பானிய அரசாங்கம், தன் மக்களுக்கு இடம் வேண்டும் என்று நினைத்ததால், இந்த மலையை தெரிந்தெடுத்து, அதை பத்து மாதங்களுக்குள் தரை மட்டமாக்கி, அதை பக்கத்திலிருந்த பசிபிக் கடலுக்குள் தள்ளிவிட்டார்கள். அந்த சிறுவர்களின் விசுவாசம் அந்த காரியத்தை செய்ய வைத்தது.

இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மாற்கு 11:22-23) என்று கூறினார். உங்கள் வாழ்க்கையில் இந்த சம்பவத்தில் இருந்த மலையைப் போல் மலைகள் இல்லாமலிருக்கலாம். ஆனால், மலையைப் போன்ற பிரச்சனைகள், அந்தப் பிள்ளைகள் சூரிய வெளிச்சத்தை காணக் கூடாதபடி தடையாயிருந்ததுப் போல, நீங்கள் தேவனுடைய முகத்தைப் பார்க்க கூடாதபடி, உங்கள் வாழ்க்கையில் இருக்கலாம். எந்த நாளும் பிரச்சனைகள், பிரச்சனைகள் என்பதே என் வாழ்க்கையாகி விட்டது என்று பிரச்சனைகளையே நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தால் தேவனை பார்ப்பது கடினம். ஆனால் தைரியமாக, நீங்கள் கடுகளவு விசுவாசத்தோடு, அந்த பிரச்சனைகளைப் பார்த்து, நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, நான் சொன்னபடியே நடக்கும் என்று உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீங்கள் சொன்னபடியே ஆகும். ஏனென்றால் அது கர்த்தருடைய பரிசுத்த வார்த்தை. அது ஒரு நாளும் பொய் சொல்லாது.

ஆனால் நீங்கள், விசுவாசமில்லாமல், ‘நான் சொல்லி என்ன நடக்கப் போகிறது’ என்று நினைத்தீர்களானால், அதினால் ஒரு பிரயோஜனமுமிராது. கர்த்தரால் பெயர்க்க முடியாத எந்த பெரிய மலையும் இந்த உலகத்தில் இல்லை. அந்த சிறுப்பிள்ளைகளுக்கு இருந்த விசுவாசத்தைப் போல் குழந்தைத்தனமான விசுவாசத்தோடு நீங்கள் கர்த்தரை நோக்கி பார்த்தீர்களானால், அது நிச்சயமாகவே உங்களுக்கு நடக்கும். விசுவாசிப்போம், பிரச்சனைகளை சமுத்திரத்திலே தள்ளுவோம், கர்த்தரின் உதவியால் நம்மால் கூடாத காரியம் ஒன்றுமிருக்காது. ஆமென் அல்லேலூயா!


நீ விசுவாசித்தால் தேவனின்

மகிமையை காண்பாய்

தண்ணீரெல்லாம் ரசமாகிடும்

உன் தாகமெல்லாம் தீர்க்கப்படும்


ஜெபம்: 
எங்கள் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய எங்கள் நல்ல தேவனே, உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் கடுகளவு விசுவாசத்தோடு, மலையை பார்த்து பேசினால், அது அப்படியே தள்ளுண்டு போகும் என்று சொன்னீரே, எங்களது விசுவாசத்தை வர்த்திக்க பண்ணும் தகப்பனே. குழந்தைகளை போல விசுவாசம் எங்களுக்குள் காணப்பட, அதன் மூலம் எங்கள் பிரச்சனைகளிலிருந்து நாங்கள் விடுபட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Monday 17 September 2012

கர்த்தர் சொல்லுகிறார்.


நீ பயப்படும்போது – நான் உன்னைத் தைரியப்படுத்துவேன்.
(ஏசாயா 41:10,13. 44:2. மத்தேயு 14:27. அப் 18:9,10. சங்கிதம் 91:6. 138:6. ஆதி 15:1)

நீ களைப்படையும் போது – நான் உன்னை துக்கி சுமப்பேன்
(மத்தேயு 11:28. ஏசாயா 46:4. 40:11,29. 41:10. 49:15-16. உபாகமம் 1:31. யாத் 19:4. 6:6-7. சங்கிதம் 91:12 )

நீ சோர்வடையும் போது – நான் உனக்கு நம்பிக்கையளிப்பேன். 
(ஏசாயா 40:29,31. நீதி 3:25,26. 2கொரி 4:16. லூக் 18:1 சங்கிதம் 26:1 யோசு 1:9. எபி 12:2 புல 3:24 )

நீ கவலையாய் இருக்கும்போது நான் உன்னைத் தேற்றுவேன். 
(1பேதுரு 5:6. பிலிப்பியர் 4:6-7. ஏசாயா 66:13. 12:1 49:15 சங்கிதம் 71:21. மத்தேயு 6: 27-34:5,4)

நீ குழப்படையும்போது – நான் உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.              ( சங்கீதம் 32:8 119:24,73:24. வெளி 3:18. நீதி 16:3 யோசுவா 1:9)

நீ துயரப்பட்டு கண்ணீர் வடிக்கும் போது – நான் உன் கண்ணீரைத்துடைப்பேன். 
(வெளி 21:4 7:14 ஏரேமியா 31:16, 30:17, 38:5. ஏசாயா 25:8, யோவான் 16:20 )

வேதத்தில் பிரியம்

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்

ஒரு மனிதன் கவிதைப்புத்தகம் ஒன்றை வாங்கி அதைப் படிக்க ஆரம்பித்தான். அதன் முதல் பக்கத்தை மாத்திரம் வாசித்து விட்டு அது சுவையாக ரசனையாக இல்லை என ஓரமாக எறிந்துவிட்டான். சில மாதங்கள் கழித்து அவன் ஒரு பெண்ணை சந்தித்தான். அவளோடு பேசிப்பழகினான். அவளை நேசித்தான். இறுதியில் அவளை திருமணம் முடிக்க விரும்பினான். அப்பொழுது அவள் கவிதை எழுதுகிறவள் என்பதை அறிந்து கொண்டான். முன்பு சுவையும் ரசனையும் அற்ற கவிதை என்று துக்கி எறிந்த அந்த கவிதைகளை எழுதியது அவளே என்பதை அறிந்து உடனே அந்த கவிதைப் புத்தகத்தை தேடி எடுத்து அதை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தான். இப்பொழுது அதன் ஒவ்வொரு வரிகளும் அவனுக்கு தேனைப்போல இனித்தன ஒவ்வொரு கவிதைக்குள்ளும் பொதிந்திருந்த ஆழமான அர்த்தங்களை ரசித்துப்படிக்க ஆரம்பித்தான். புத்தகத்தை கிழே வைக்க மனமில்லாமல் இரவும் பகலும் பலமுறை அதை திரும்ப திரும்ப வாசிக்க ஆரம்பித்தான். எந்த புத்தகம் சுவையும் ரசனையற்றதாக இருந்ததோ அந்தப் புத்தகமே இப்பொழுது அவனுக்கு இன்மையான புத்தகமாக மாறியது. அதன் இரகசியம் அவன் அப்புத்தகத்தை அல்ல அதை எழுதியவரை நேசிக்க ஆரம்பித்ததுதான்.

அன்பான நண்பர்களே நாம் ஒரு உண்மையை புரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நாம் கர்த்தரை முழுமனதோடு நேசித்தால் மாத்திரமே நம்மால் அவருடைய வார்த்தையையும் நேசிக்கமுடியும். நாம் கர்த்தரை உண்மையாய் நேசிக்காதவரை அவருடைய வார்த்தையையும் நேசிக்க முடியாது. இன்றைக்கு தினசரி பத்திரிகைகள் வார மஞ்சரிகைகள் கதைப்புத்தகங்கள் தொலைகாட்சி தொடர் நாடகங்கள் என பொழுது போக்கு சாதனங்கள் பெருகிவிட்டன. இவற்றின் மத்தியில் கர்த்தருடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதத்தில் பிரியமாயிருந்து அதை தியானிப்பது தேவனுடைய மக்களுக்கு மிகப்பெரிய சாவாலாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் அசுத்தமும் பாவமும் பெருகி வாழ்க்கையின் உண்மையான மதிப்பீடுகள் அழிந்து வருகின்றன. இந்த சமுதாயத்தில் நம்முடைய வாழ்க்கையும் நம்முடைய குடும்பத்தையும் கறைபடாமல் கர்த்தருக்குள் காத்துக்கொள்ள வேண்டுமானால் தெவனுடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுக்கவும் அதன்படி வாழவும் நாம் தீர்மானிக்க வேண்டும். அப்படிப்பட்ட குடும்பங்களே உண்மையில் கர்த்தரின் பார்வையில் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பங்களாக காணப்படும்.


ஜெபம் :---- உம்முடைய வேதத்தில் நேசித்து அதைத் தியானித்து அதைக் கைக்கொண்டு வாழவும் இந்தப் பாவ உலகின் இழுப்புகளால் கறைபடாமல் என்னைக் காத்துக்கொள்ளவும் உமது கிருபையை தாரும். ஆமென். 

தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாயிருத்தல்

Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2012)


தேவன் பரிசுத்தர்; எனவே நாமும் பரிசுத்தராயிருக்கவேண்டும் என்று அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். நாம் தேவனுக்கு முன்பாக பரிசுத்தர்களாயிருக்க வேண்டியது அவசியமே.

“யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?” (சங்.24:3). இதற்கான விடை “கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே” (சங்.24:4). நம்முடைய தாலந்துகளோ திறமைகளோ நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவராது. நம்முடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் இவை யாவும் தேவனுக்கு முன்பாக குற்றமற்றதாய் இருக்க வேண்டியது அவசியம். இவ்வுலகில் நாம் குற்றமற்றவர்களாய் வாழ்வது சாத்தியமா? அவ்வாறு வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற கேள்விகள் நமக்குள் எழுகிறதல்லவா? வேதாகமம் எழுப்பும் பல வினாக்களுக்கு நாம் அதிலேயே விடைகளைக் காணமுடியும்.

தேவனுக்கு முன்பாக பரிசுத்தர்களாய் வாழ ஐந்து வழிகளை நாம் கீழே காண்போம்.
1. கண்கள் காண்பதையெல்லாம் இச்சிக்க வேண்டாம்.


“மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான். ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருக்கும்போது, ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள். அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச்சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள். அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்” (2சாமு.11:1-5).

இப்பகுதி தாவீது செய்த மிகப்பெரிய பாவத்தை விளக்குகிறது. ஆம், தாவீதினுடைய வாழ்வில் கறைபடிந்த நிகழ்ச்சியாக இது அமைந்தது. இப்பாவத்தைச் செய்யும்படி தாவீதைத் தூண்டியது அவனது கண்களின் காட்சியேயாகும். ஒரு சிறந்த படைத் தளபதி, சிறந்த அரசர், போரைப்பற்றிய சிந்தனையில் உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருந்தபோது அவனது கண்கள் நீராடும் ஒரு ஸ்திரீயைக் கண்டது. ஒருவேளை இக் காட்சியில் தனது சிந்தனையைச் செலுத்தாதிருந்தால் இப்பாவத்தில் விழுந்திருக்கமாட்டார். இது தற்செயலாக நடந்த ஒரு சம்பவமாகும். நம்முடைய வாழ்விலும் நம்மை பாவத்தில் விழச்செய்யும் அநேக தற்செயலான நிகழ்வுகள் உண்டல்லவா? நாம் தங்கியிருக்கும் இடங்களிலும், பேருந்து நிறுத்தங்கள் இவைகளிலும் தொலைக்காட்சி சேனல்களின் காட்சிகளிலும் நாம் பலவேளைகளில் தடுமாறினது உண்டல்லவா? “என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1). இதனைக் கூறிய பொழுது யோபு ஓர் இளைஞனாயிருக்கவில்லை. முதியவரான யோபு தன்னுடைய வாலிப காலத்துப் பாவங்களைப் பற்றியும் பேசவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எல்லா நிலைகளிலும் எல்லா வயதிலும் நம்மைப் படுகுழியில் வீழ்த்தும் பாவங்கள் பல உண்டு. எனவே நாம் அதிக எச்சரிப்புடன் நமது பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

காரிருளில் நம் தீபம் இயேசு

காரிருளில் என் நேச தீபேம நடத்துமேன்,
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்;
நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்;
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன்

இந்த வரிகளை ஜான் ஹென்றி நியுமென் (Henry Newman) என்ற தேவ மனிதர் எழுதிய பாடலின் முதற்கவி ஆகும். இந்த நான்கு வரிகளை மீண்டுமொருமுறை கருத்தாய் வாசியுங்கள். உன்னத கிறிஸ்தவ வாழ்விற்கான ஒரு அற்புத சத்தியம் இதில் அடங்கியுள்ளது. காரிருள்போல தோன்றும் வாழ்க்கையின் பாதைகளிலே கர்த்தர் கூட இருக்கும்போது தூர காட்சி வேண்டாமென்றும், ஒரு அடி மட்டும் காண்பியும் என்றும் பக்தர் இங்கே பாடுகிறார்.

இன்றைய நாட்களில் விசுவாசிகள் அநேகர் தீர்க்கதரிசனமுள்ளவர் என யாரையாவது குறித்து கேள்விபட்டால் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலம் எப்படியிருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இது அநேக நேரங்களில் அஞ்ஞானிகள் குறி கேட்பது போல ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த பாடலின் கருத்து நம் வாழ்க்கைக்கு மிகமிக அவசியாமானது. நாளைய தினத்தை கர்த்தர் பார்த்து கொள்வார் என்றும், இன்றைய தினத்திற்கான கிருபையை மட்டும் சார்ந்து வாழ நாம் கற்று கொள்வது அவசியம்.

நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். நம் வாழ்வில் என்ன நடந்தாலும், அவருடைய கரத்தில் நமது காலங்களும் நமது வாழ்க்கையும் இருப்பதால், அவருடைய சித்தமில்லாமல் நமக்கு ஒன்றும் நேரிடாது என்ற நம்பிக்கை நமக்கு

ஞானத்தைப் பெறும் வழிமுறைகள் - Finding Godly wisdom.....

தேவனிடத்திலிருந்து வருகின்ற ஞானத்தைப் பெற்றுக்கொள்ள நாம் தேவனிடத்தில் முதலாவது ஜெபிக்க வேண்டும். இரண்டாவதாக ஞானத்தை தேட வேண்டும். இவைகளைக் குறித்து இனி கவனிப்போம்.

அ. ஞானத்தைப் பெற ஜெபித்தல்.
“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” (யாக்கோபு 1:5)

நாம் ஜெபிக்கும்போது மாயக்காரரைப்போல தவறான உள்ளத்தோடும், தவறான நோக்கத்தோடு ஜெபிக்கக்கூடாது என்று கற்றுத்தந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, நாம் எப்படி ஜெபிக்கக்கூடாது என்பதைக்குறித்து கூறும்போது, 'அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள். அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்" (மத்தேயு 6:7) என்றார். இங்கே தேவனை அறியாத மக்கள்தான் அஞ்ஞானிகள். அதனால்தான் கடவுளை அறியாதவர்கள் போல ஜெபிக்கவேண்டாம் என ஆண்டவர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, இவ்வசனத்தில் ஜெபத்தில் அவர்களைப்போல வீண்வார்த்தைகளை (பொய்) அலப்பாதேயுங்கள் என்றும் கூறுகின்றார். வீண் வார்த்தைகள் என்றால் என்ன? இதை அர்த்தமில்லாத வார்த்தைகள் என்றும் கூறலாம். இந்த உலகத்தில் அர்த்தமில்லாத வார்த்தைகள் என்று ஏதாவது உண்டா? இல்லை வார்த்தை என்று சொன்னாலே அதற்கு ஏதோ ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்யும். அர்த்தமில்லாதவை வார்த்தை என்ற அழைக்கமுடியாது. அப்படியானால் இங்கே அர்த்தமில்லாத வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என ஆண்டவர் எதனைக் குறிப்பிடுகிறார்? அர்த்தமுள்ள வார்த்தையை ஒருவர் அர்த்தமில்லாமல் உச்சரிப்பதுதான் அர்த்தமில்லாத ஜெபமாகும். இதுவும் ஞானமற்ற தன்மைக்கு ஒரு சிறந்த சான்றாகும். நாமோ ஞானத்தைத் தருகின்ற தேவனிடத்தில் தைரியத்தோடு அர்த்தத்தோடு ஜெபித்து ஞானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது நாம் அஞ்ஞானிகளாக திகழமாட்டோம்.

Sunday 16 September 2012

கடவுள் இருக்கின்றாரா?

ஒருநாள் ஒரு மனிதன் தன் தலைமுடியை வெட்டுவதற்க்காகவும் தன் தாடியை சிரைப்பதற்க்காகவும் தன் வீட்டிற்க்கு அருகில் உள்ள பார்பர் சலுனுக்குச்சென்றார். அந்த பார்பர் வாடிக்கையாளருக்கு முடிவெட்டிக்கொண்டிருக்கும் போது இருவரும் பல தரப்பட்ட காரியங்களைக் குறித்து உரையாடத் தொடங்கினார்கள்.திடிர்ரென அவர்கள் கடவுளைக் குறித்து உரையாடத் தொடங்கினார்கள்.

பார்பர் கூறினான். கடவுள் இருக்கிறார் என்பதை நான் நம்புவதில்லை. ஏனனில் கடவுள் ஒருவர் இருந்தால் இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு வேதனையும் துன்பமும் கொடுமையும் காணப்பட வேண்டும்? எவ்வளவு பேர் பசி பட்டினி வியாதினால் கஷ்ப்படுகிறதை பாக்கிறோமை? கடவுள் என ஒருவர் இருந்தால் இவைகளை எல்லாம் அவர் ஏன் அனுமதிக்கவேண்டும். என்று கேட்டான்.

அதற்கு அந்த வாடிக்கையாளர். பதிலேதும் கூறவில்லை அவர் அவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை வாடிக்கையாளர் தான் வந்த வேலை முடிந்ததும் சலூனை விட்டு வெளியேறினார். அவர் அந்த பாதை வெளியே வீதியை கடக்கும் போது பாதை ஒரத்தில் நீண்டதாடியும் பல மாதங்களாக வெட்டப்படாமல் நீண்டு வளர்ந்த அழுக்கான தலை முடியம் கொண்ட ஒரு வயதான மனிதனைக் கண்டவுடன் அவர் மீண்டும் சலுனுக்குள் ஒடிச்சென்று பார்பரை நோக்கி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த உலகில் பார்பர் என்ற ஒருவரே இல்லவே இல்லை அப்படிப்பட்ட ஒருவர் இருந்தால் ஏன் நீண்ட தாடியும் வெட்டப்படாத அழுக்கான தலைமுடியும் பலர் தெருவோரங்களில் காணப்படவேண்டும். எனப் பதில் கேட்டார்.

தேவனை நம்பியிருக்கிறேன். நான் பயப்படேன்.

ஒவ்வொரு முறையும் ஒரு சொல்லை அழுத்தமாகக் கூறுங்கள்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.


ஒவ்வொரு முறையும் ஒரு சொல்லை அழுத்தமாகக் கூறுங்கள்.

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்




பலமுறை ஆழமாக மூச்சுவிட்ட பிறகு மறுபடியும் மேலேயுள்ள வாக்கியத்தை விசுவாசத்துடன் கூறிப் பாருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பதை உணருவீர்கள்.....

சத்தியவசனம்......

சத்தியவசனத்தை கேட்டதினால்

விசுவாசிக்க தொடங்கினேன் - இயேசுவே

சத்தியமும் வார்த்தையும் என்பதை

விசுவாசிக்க தொடங்கினேன்.
சத்தியவசனத்தை வாசித்ததினால்

அறிவுக்கண்கள் திறந்தன - இயேசுவே

நித்திய தேவனும் ராஜாதிராஜனும்

என்பதை அறிந்தேன்.

சத்தியவசனத்தை பெற்றதினால்

பாவம் இன்னதென்பதை அறிந்தேன் - இயேசுவே

பாவியின் மீட்பரும் இரட்சகரும்

என்பதை அறிந்தேன்.
சத்தியவசனத்தை கேட்டதினால்

என்னில் ஜீவ ஒளி வந்தது - இயேசுவே

நித்திய ஜீவனைத் தந்தார்

சத்தியவாழ்வும் வந்தது.
சத்தியவசனத்தை கேளுங்கள்

அதன்படி வாழும்போதினில் - இயேசுவின்

அன்பும் பரிசுத்தமும் தங்கும்.

துன்பம் நீங்கிக் களிப்பு பெருகும்.


ஆக்கம் - ரி.எல்.தாசன்

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

இக்கட்டுரையின் மூலம் றொபர்ட் பீட்டர்சன் அவர்களுடையது)

ஒருமுறை யுத்தமொன்றில் கிறிஸ்தவ ஊழியர் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டு சிறைச்சாலையொன்றில் அடைத்துவைக்கப்பட்டார். அங்கே அவர் பலவந்தமான முறையிலான சித்தத்தாக்குதலுக்கு (மூளைச்சலவை) அனுமதிக்கப்பட்டபோதிலும் அவர் அதற்கு இலக்காகிவிடவில்லை. (வேதவார்த்தைகள் நிரம்பிய ஒருவனுக்கு இலகுவில் ப்ரைன் வாஷ் செய்யமுடியாது) அவ்வேளையில் அவருடைய சிந்தைக்கு நங்கூரமாய் இருந்தது இந்த 23ம் சங்கீதமே. ஆழ்ந்த சோர்வோடு விரக்தியுற்றிருந்த அந்நிலையின் நடுவிலும் அவர் இச்சங்கீதத்தை உச்சரித்து, சரீரப்பிரகாரமாகவும் ஆத்மபிரகாரமாகவும் புதுத்தெம்பை அடைந்தார். இவரின் சிறுபிராயத்தில் இவரது தாயார் இச்சங்கீதத்தை இவருக்குக் கற்றுக்கொடுத்தது இவரது பாக்கியமே! இவ்விதம் பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகளை எமது தினசரி வாழ்க்கையில் பிரயோகிப்பதே நம் வாழ்வில் தேவ ஆவியானவர் செய்யும் கிரியையாகும்.

இன்று இருவகை கிறிஸ்தவர்கள் உள்ளனர். ஒருசிலர், இயேசுகிறிஸ்துவை தங்களின் மீட்பராக அறிந்துள்ள பொழுதிலும் தங்களின் பாரத்தை தாமே சுமக்கின்றனர். (இது உறவை அறுக்கின்றது. மனமுறிவில் முடிகின்றது). மற்றவர்களோ,இயேசுவை தங்களின் மீட்பராக அறிந்து இருப்பதோடு, அவரைத் தங்களின் வாழ்க்கைக்குரிய மேய்ப்பனாகவும் மீட்பராகவும் அறிந்துகொண்டுள்ளனர். இவ்வகை கிறிஸ்தவனே 23ம் சங்கீதத்தில் குறிப்பிடப்படுகிறான்.

வேதாகமமும் – அலைப்பேசியும்

செல்லிடைப்பேசிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம், நமது வேதாகமத்துக்கு கொடுக்கிறோமா? இதோ சில ஆலோசனைகள்:

நாம் செல்லுமிடமெங்கும் அதை எமது கைப்பையில் அல்லது சட்டைப்பையில் எடுத்துச்சென்றால் என்ன?

ஒரு நாளில் அதிக தடவை அதை உபயோகித்தால் என்ன?

அது இன்றி வாழமுடியாது என்ற நிலையை ஏற்படுத்திக்கொண்டால் என்ன?

மற்றவர்களுக்கு அதைப் பரிசாகக்கொடுத்தால் என்ன?

பிரயாணம் பண்ணும்போது அதை பாவித்தால் என்ன?

ஆபத்தானதும் அவசரமுமமான நேரத்தில் எப்படிப் பாவிப்பதென்று கற்றுக் கொடுத்தால் என்ன?

எம் அயலவருக்கு அதை எப்படிப் பாவிப்பதென்று கற்றுக்கொடுத்தால் என்ன?

சரி, இன்னொரு விஷயம்,

செல்லிடைப்பேசியை பாவித்து, அதற்கு உரிய கட்டணத்தை செலுத்தாவிட்டால் தொடர்பு துண்டிக்கப்படும். ஆனால் வேதாகமத்தை அதிகமாக பாவிப்பதினால், நமக்கும் நமது ஆண்டவருக்கும் இடையே உள்ள உறவு அதிகரிக்கும்.

அது சரிதான், உங்களுடைய பரிசுத்த வேதாகமம்தான் எங்கே?

நன்றி: சத்திய வசனம்

கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன்

இந்த வாரத்தில் ஈரான் தேசத்தில், நீதிமன்றத்தில் கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த வாலிப போதகர் யூசுப் நடர்கனி அவர்களுக்கு சென்ற வருடமே அவர் கிறிஸ்துவை ஏற்று கொண்டதால் மரண தண்டனை விதித்த ஈரானின் அரசு இப்போது இந்த வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறது. தனது உயிரே போனாலும் நான் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன் என்று கிறிஸ்துவை பற்றி கொண்டிருக்கிற அவருக்கு ஈரான் அரசு தயவு காட்டும்படியாக நாம் ஜெபிப்போமா?

ஈரான் தேசத்தில் இந்த யூசுப்பை போலவும், மற்றும் வெளியே தெரியாமல் இரகசிய கிறிஸ்தவர்களாக, அல்லது அரசாங்கத்தால் கிறிஸ்தவர்கள் என்னும் பேரினிமித்தம் பாடுபடும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் ஜெபங்களினால் கிறிஸ்துவுக்காக எழும்ப போகிற அநேக வாலிபர்களை என்ன செய்வது என்று ஈரான் அரசு திகைக்கும் காலம் கர்த்தரை மறுதலிக்கிற அந்த தேசத்தில் நிச்சயம் வரப்போகிறது. 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்' என்ற கர்த்தரின் வார்த்தைகள் அந்த தேசத்தில் நிறைவேறும்படியாக ஜெபிப்போம்.

Tks: அனுதின மன்னா

எதிர்காலத்திலும் வழிநடத்தும் கர்த்தர்.

ஒரு கணவர் தன் மனைவியிடம், 'ஐயோ இந்த காலத்தில் மற்ற பிள்ளைகள் படிக்கிறதையும் வாங்குகிற மார்க்குகளையும் பார்த்தால் நம்ம பிள்ளைகள் எங்கே போய் நிற்பார்களோ தெரியவில்லை! பிற்காலத்தில் ஒரு நல்ல வேலை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டம் போலிருக்கிறது. ஒரு நல்ல வேலை கிடைக்காவிட்டால் இந்த பிள்ளைகள் என்ன செய்யும்?'என்று கவலைப்பட ஆரம்பித்தார். ஆனால் மனைவியோ, ' பாருங்கள் நம் பிள்ளைகளுக்கு தேவன் கொடுத்திருக்கிற அருமையான தாலந்துகளை! அவன் கிட்டாரை எடுத்து பாட ஆரம்பித்தால் எல்லாரும் நின்று கேட்டுவிட்டு தான் போவார்கள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? கர்த்தருடைய கரத்தில் நம் பிள்ளைகளின் எதிர்காலம் இருப்பதால் அவர் பார்த்து கொள்வார்' என்று கூறினார்கள்.

இருவரும் கர்த்தரின் மேல் அன்புள்ளவர்கள்தான், அவர்மேல் நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஆனால் கவலை என்று வரும்போது, கர்த்தரைவிட பிரச்சனைகளும் போராட்டங்களுமே பெரிதாக தெரிகிறது. நாம் கவலைப்படும்போது, நம்முடைய எண்ணங்களும், நம்முடைய சிந்தனைகளும் கர்த்தரை நோக்கி பார்ப்பதை விட்டுவிட்டு, பிரச்சனைகளையே நோக்கி பார்க்க ஆரம்பிக்கிறது. பேதுரு கடலின் மேல் நடந்து கர்த்தரை நோக்கி பார்த்தபடியே நடக்க ஆரம்பித்த போது வெற்றிகரமாக நடக்க ஆரம்பித்தார். ஆனால் எப்போது கடலையும் அலைகளையும் பார்க்க ஆரம்பித்தாரோ கடலில் மூழ்க ஆரம்பித்தார்.

'ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?'

ஃபென்னி க்ரொஸ்பி

8000 இற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள ஃபென்னி க்ரொஸ்பி (1820-1915) மருத்துவர் ஒருவரது தவறான பராமரிப்பினால் பிறந்த 6 கிழமைகளில் தன் கண் பார்வையை இழந்ததுடன், ஒரு வயது பூர்த்தியாகும் முன்பே தன் தகப்பனையும் இழந்தாள். தன் தாயுடனும் பாட்டியுடனும் வாழ்ந்த வந்த ஃபென்னி க்ரொஸ்பி சிறு வயதிலிருந்து நான்கு சுவிஷேசப் புத்தகங்களையும், பழைய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்களின் பெரும்பாலான பகுதிகளையும் மனனம் செய்திருந்தாள்.

14 வது வயதில் நியூயோர்க் நகரிலுள்ள குருடர் பாடசாலையில் பயில தொடங்கிய ஃபென்னி க்ரொஸ்பி அங்கு 8 வருடங்களாக மாணவியாகவும் பின்னர் 15 வருடங்களாக ஆசிரியையாகவும் இருந்தாள். இவள் தனது 8 வது வயதில் எழுதிய கவிதை “என்னால் பார்க்க முடியாவிட்டாலும் நான் எவ்வளவு சந்தோஷமானவள்’ என்று ஆரம்பமாகியது.
ஒரு தடவை கிறிஸ்தவப் பிரசங்கி ஒருவர் ஃபென்னி க்ரொஸ்பியிடம் “தேவன் உனக்குப் பல வரங்களைக் கொடுத்திருந்தாலும் பார்வையைக் கொடுக்காமலிருப்பது உண்மையிலேயே வேதனைக்குரிய ஒரு விடயமே” என்றார்.

ஃபென்னி க்ரொஸ்பியோ உடனடியாக “ நான் பிறந்த உடன் தேவனிடம் ஒரு கோண்டுகோள் விடுக்கக்கூடியதாயிருந்தால், நான் பிறவிக் குருடியாகவே இருக்க விரும்புகிறேன் என்றே கேட்டிருப்பேன்’ என்றாள்.

ஃபென்னி க்ரொஸ்பியின் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்டு ”ஏன்?” என்று கேட்ட பிரசங்கியிடம் அவள் “நான் பரலோகத்திற்குச் செல்லும்போது என் இரட்சகர் இயேசுவைப் பார்ப்பதே என்னை முதலில் மகிழ்விக்கும் காட்சியாக இருக்கும்” என்று பதிலளித்தாள்.

குறைவுகளை நினைத்து கவலைப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எல்லா மனிதருக்கும் ஏதோ ஒரு குறைவு இருக்கின்றது. குறைவிலும் நாம் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே சிறந்தது. 95 வருடங்களாகக் கண்பார்வையற்றவளாக வாழ்ந்த ஃபென்னி க்ரொஸ்பிதே தேவனை மகிமைப்படுத்துவதற்கும் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கும் பாடல்களை எழுதுவதில் மனமகிழ்வுடன் ஈடுபட்டாள். சங்கீதக்காரனைப் போல, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே அவளது பெலனாயிருந்தது (சங் 34.4) நாமும் எத்தகைய நிலையில் இருந்தாலும் எப்போதும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். (பிலி 4.11)
- (Job Anbalagan Thangasamy)

நீங்கள் பெறுமதிமிக்கவர்கள்

நீங்கள் பெறுமதிமிக்கவர்கள்

ஒரு நிகழ்வின்போது ஒரு அருமையான பிரசங்கியார் ஒருவர், பார்வையாளர்களை நோக்கி 1000 ரூபாய் தாளை உயர்த்திப் பிடித்துக்காட்டி, 'யாருக்கு இது வேண்டும்? எனக்கேட்டார். 

அந்த அறையிலிருந்த அனைவரும் தம் கரங்களை உயர்த்திக் காட்டினார்கள். உடனே பிரசங்கியார் 'இந்த 1000 ரூபாவை உங்களில் ஒருவருக்குக் கொடுக்கப் போகிறேன். அதற்குமுன் ஒரு காரியத்தைச் செய்யப் போகிறேன் என்று சொல்லி. அந்த 1000 ரூபாய் தாளை தன் கைகளினால் கசக்கிப் பிழிந்தார்.

பின் மீண்டும் பார்வையாளர்களை நோக்கி 'இது யாருக்கு வேண்டும்? எனக் கேட்டார். 
மறுபடியும் கைகள் உயர்ந்தன. உடனே அவர் அந்த 1000 ரூபாய் தாளை நிலத்தில் போட்டு,
தன் காலால் மிதித்தார். 

மீண்டும் பார்வையாளர்களை நோக்கி 'கால்களால் மிதிக்கப்பட்ட இந்த அழுக்கான தாள் யாருக்கு வேண்டும்? எனக் கேட்டார். 
மீண்டுமாக அனைவரும் தங்கள் கைகளை உயர்த்திக் காட்டினார்கள். 

உடனே அவர் அவர்களை நோக்கி 'பார்த்தீர்களா! இதிலிருந்து நாம் அருமையானதொரு பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். இந்த 1000 ரூபாய் தாளுக்கு நான் என்ன செய்தாலும் அதைக் குறித்து நீங்கள் பொருட்படுத்தவே இல்லை. அதனை நீங்கள் பெற்றுக்கொள்ளவே விரும்பினீர்கள். ஏனெனில் அது தனது பெறுமதியை இழந்து போகவேயில்லை. அதுபோலவே நமது வாழ்வும். பலவேளைகளில் சந்தர்ப்ப சூழ்நிலை களினாலும், நமது தவறான தீர்மானங்களினாலும், மற்றவர்களாலும் வீழ்த்தப்படுகிறோம். கசக்கப்படுகிறோம், காயப்படுகிறோம், மிதிக்கப்படுகிறோம், சேறு பூசப்படுகிறோம். அப்படிப்பட்ட நேரங்களில் நாம் நம்மைக் குறித்து பெறுமதியற்றவர்களாக எண்ணி உடைந்து விடுகின்றோம். ஆனால் நமது வாழ்வில் என்ன நிகழ்ந்திருந்தாலும், இனிமேல் என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் உங்கள் பெறுமதியை இழப்பதில்லை. நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மை படைத்த நம்முடைய ஆண்டவருக்கு நாம் பெறுமதி வாய்ந்தவர்கள். “

“நமது வாழ்வின் பெறுமதியானது, நாம் என்ன சாதித்திருக்கிறோம், நமக்கு என்னத் தெரியும் என்பதில் அல்ல, நம்மில் நாமே பெறுமதி உள்ளவர்களாய் இருக்கிறோம்" என்றார்.

சிந்தனைக்கு: 

உங்கள் பரம பிதாவுக்கு '..நீங்கள் விசேஷித்தவர்கள்" (மத்.6:26). 

'நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோமர்.5:8).

ஒரு சிறிய விசுவாசம்....

ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.

அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள்.

வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

ஒரு ஏழை விதவையின் அற்ப விசுவாசம் ஜெபமாக வெளிவந்தது.

இந்த விதவையின் விசுவாசம் நமக்குண்டா?

ஒரு சிறிய தீ….. பெரிய காட்டை கொழுத்தி விடுகின்றது.

ஒரு சிறிய நாவு…. பெரிய விளைவை ஏற்படுத்தி விடுகின்றது.

ஒரு குளத்தில் வீசப்பட்ட ஒரு கல்…. பெரிய அலைவட்டத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

ஒரு சிறிய விதை….. ஒரு பெரிய விருட்சமாக மரமாக வளருகின்றது.

ஒரு சிறிய விசுவாசம்…. உண்டா?

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்.

Friday 14 September 2012

அம்பெய்த படங்கள்

அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். - மத்தேயு 25:40. 
 ஒரு போதகர் சபையில் நடந்த ஒரு ரிட்ரீட் கூட்டத்தில் யார் யார் தங்களுக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர்களுடைய படத்தை வரைந்து, அதை அருகிலிருந்த சுவற்றில் உள்ள இலக்கின் மேல் மாட்டிவைத்து, அதன் மேல் அம்புகளை எய்யலாம் என்று கூறினார். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடிக்காத நபரை மனதில் வைத்து, ஏறத்தாழ அவர்களுடைய உருவ படங்களை வரைந்து வைத்துக் கொண்டார்கள். (யாருக்கும் தெரியாது தங்களை தான் மற்றவர் வரைகிறார் என்று) அவர்களுடைய முறை வந்தபோது தங்கள் படங்களை அந்த இலக்கின் மேல் வைத்து அதன் மேல் அம்புகளை எய்தார்கள். இதை விளையாட்டுக்குத் தான் செய்தார்கள். நேரம் கடந்து விட்டபடியால் சிலருக்கு அம்பெய்ய நேரம் கிடைக்காதது வருத்தமாக இருந்தது. 

கடைசியில் போதகர் அவர்கள் அம்பெய்த படங்கள் இருந்த இலக்கை கிழித்து எடுத்தபோது, எல்லாவற்றிற்கும் பின்னால் இயேசுகிறிஸ்துவின் படம் இருந்தது. அவருடைய முகமெல்லாம் அம்பெய்து கிழிக்கப்பட்டிருந்தது. அப்போது போதகர் சொன்னார், ‘மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று இயேசு கூறியதை ஞாபகப்படுத்தினார். அப்பொழுது எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் வந்தது. 

ஆம் பிரியமானவர்களே! நமது கிறிஸ்தவ சகோதரருக்கு விரோதமாக எத்தனைப் பேச்சுகள் பேசுகிறோம். ஒரே சபையை சேர்ந்தவர்களாயிருந்தாலும் எத்தனை பிரிவினை! எத்தனை கோப தாபங்கள்! எத்தனை பேர் மேல் மனக்கசப்பு! எத்தனை மன்னியாத தன்மைகள்!

தாழ்மை

உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். - (மத்தேயு 23:11-12)

18-ம் நூற்றாண்டில், அமரிக்காவில் உள்ள மேரிலேண்ட் (MaryLand) என்னும் நகரத்தில், அடித்த பலத்தக் காற்றில், ஒரு முக்கியமான பாதையில் ஒரு பெரிய மரம் வேரோடு பிடுங்கப்பட்டு, அந்தப் பாதையில் விழுந்தது. அதை ஒரு சில இராணுவ வீரர்கள் சேர்ந்து, மரத்தின் கிளைகளை வெட்டி, அந்தப் பெரிய மரத்தை அந்தப்பாதையிலிருந்து, எடுக்க மிகவும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய அதிகாரி, ஒரு குதிரையின் மேல், உட்கார்ந்துக் கொண்டு, அதைச் செய், இதைச் செய் என்று, அதிகாரம் பணணிக் கொண்டிருந்தாரே ஒழிய, ஒருச் சின்ன இலையைக்கூட எடுத்துப்போடவில்லை. 

அப்போது அவ்வழியே ஒரு வெள்ளை குதிரையின் மேல் வந்த ஒருவர், அந்த அதிகாரியைப் பார்த்து, 'நீர் ஏன் அந்த வீரர்களுக்கு உதவாமல், சத்தமாய் அப்படிச் செய் என்று அதிகாரம் செய்;துக் கொண்டிருக்கிறீர், போய் உதவலாமே' என்றுக் கேட்டதற்கு அந்த அதிகாரி, 'நான் ஒரு பெரிய அதிகாரி, இவர்களோடுப் போய் உதவிச் செய்வது என்னுடைய பதவிக்கும் மரியாதைக்கும் இழுக்கு' என்றுக் கூறினார். 

அப்போது அந்த வழிபோக்கர், தனது மேலாடையையும், தொப்பியையும் கழற்றிவிட்டு, மற்ற வீரர்களோடு சேர்ந்து, மிகவும், பிரயாசப்பட்டு, அ;நத மரத்தை அந்தப் பாதையிலிருந்து; எடுத்துப் போட்டார்கள். பிறகு அவ்வழிபோக்கர் அந்த அதிகாரியிடம், 'ஏதாவது தேவையென்றால் என்னைக் கூப்பிடுங்கள், நான் வந்து உதவுகிறேன்' என்றுக் கூறினார். அதற்கு அந்த அதிகாரி, 'நீர் யார்?' என்றுக் கேட்க, அவ்வழிபோக்கர், 'நான் தான் ஜார்ஜ் வாஷிங்டன்' (George Washington) என்றுக் கூறிவிட்டு, தனது குதிரையில் ஏறி விரைந்தார். அதைக் கேட்ட அந்த அதிகாரி ஆச்சரியமும் வெட்கமும் அடைந்தார். அந்த வழிபோக்கர் அமெரிக்க அதிபரும், அமெரிக்க ராணுவத்தின் தலைவருமாகிய ஜார்ஜ் வாஷிங்டன் ஆவார்.

கலங்கி தவிக்காதே

உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். - நீதிமொழிகள். 22:19.

1958ஆம் ஆண்டு, ஜுன் மாதம் 10ம் தேதி, சார்ல்ஸ் பிளான்டின் என்பவர், நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒரு முனை தொடக்கி, மறுமுனை வரைக்கும், 1100 அடி நீளமுள்ள கயிற்றின் மேல் நடக்கப் போவதாக அறிவித்தார். அதைக் காண இரு கரைகளிலும் கூட்டம் அலை மோதியது. அவர் 38 அடி நீளமும், 40 பவுண்ட் எடையுள்ள கோலை பிடித்துக்கொண்டு சமநிலையாக நடந்து, ஒரு முனையிலிருந்து மறுமுனையை வந்தடைந்தார். அதுவரை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் அவர் வந்து சேர்ந்தவுடன் விண் அதிரும் கரகோஷத்தை எழுப்பியது.

அவர் தான் மீண்டும் நடக்கப் போவதாகவும், ஆனால் இந்த முறை ஒரு மனிதனை தன்னுடைய முதுகில் ஏற்றிக் கொண்டு நடக்கப் போவதாகவும் அறிவித்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம், நான் என் முதுகில் ஒரு மனிதனை ஏற்றி மறுகரையில்சேர்ப்பேன் என்று நம்புகிறீர்களா? என்றுக் கேட்டார். அதற்கு எல்லாரும் ஆம் என்று தலையை ஆட்டினார்கள். அப்படியானால் யாராவது வாருங்கள், நான் போய் சேர்க்கிறேன் என்று அழைத்தார். யாரும் முன்வரவில்லை. ஆகையால் தன் மேனேஜர் ஹென்றியிடம், நீங்கள் நம்புகிறீர்களா? என்றுக் கோட்டார். அதற்கு அவர் ‘ஆம் நிச்சயமாக நம்புகிறேன். நானே உங்கள் பின்னால் அமர்ந்து வருகிறேன்’ என்று கூறி அவர் மேல் அமர்ந்துக் கொண்டார். அவரை சுமந்தவாறு பிளான்டின் நடக்க ஆரம்பித்தார். திடீரென்று அந்தக் கயிறு ஆட ஆரம்பித்தது. உடனே பிளான்டின், ஹென்றியுடம், ‘நீர் எதையும் செய்ய வேண்டாம், என்னிடம் விட்டு விடுங்கள் நான் பார்த்தக் கொள்கிறேன்| என்று கூறி எச்சரித்தார். ஹென்றியும், எதுவும் செய்யாமல், பிளான்டினை முற்றிலும் சார்ந்து, இருவரும் பத்திரமாய் மறுகரை வந்து சேர்ந்தனர்.

“இது நானல்ல!” - சுயசரிதை

உருவம் தந்தவரின் கைபட்டால்  புழுதி கூட பூமாலையாகும்.

ஒர் ஆங்கில தம்பதியினர் ஒரு முறை பொருட்க்கள் வாங்க கடைக்கு சென்றார்கள். இவர்களுக்கு பழங்காலத்து அழகிய பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே மிக அழகாக வண்ணம் தீட்டப்பட்ட ஓர் அழகு தேனீர் குவளை (tea cup) ஒன்றை பார்த்தார்கள்.

“ இந்த குவளை மிகவும் அழகாக இருக்கிறதே. இதையே நாம் வாங்கி விடலாமே! இதைப்போன்ற ஓர் அழகான குவளையை நான் இது வரை பார்த்ததில்லை” என்றாள் மனைவி.

குவளையை கைகளில் வாங்கிய அந்த மனைவி அதன் அழகை ரசித்துக் கொண்டிருக்கையில் அந்த குவளை பேசத் துவங்கியது:“நான் எப்படி இவ்வளவு அழகான குவளையாக மாறினேன். தெரியுமா?” என்றது.

இப்படி அழகான குவளையாக ஆகும் முன் நான் ஒரு அழுக்கான சிவப்பு நிறம் கொண்ட ஒரு அழுக்கான சிவப்பு நிறம் கொண்ட ஒரு களிமண்ணாயிருந்தேன். என்னுடைய முதலாளியான குயவன் அழுக்கான என்னை எடுத்து என்னை தட்டி ஒரு உருண்டையாக மாற்றினார். அவர் என்னை தட்டி உருண்டையாக அழுத்தியபோது “ஜயா வேண்டாம்.. வேண்டாம்” என்று கதறி அழுதேன்.

Wednesday 12 September 2012

புது சிருஷ்டி

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள்ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).

ஒரு வயதான மனிதருக்கு, ஒரு பழைய வீடு ஒன்று இருந்தது. அதை விற்கக் கேட்டு சிலர் அவரை அணுகினார்கள். அந்த மனிதரும் சந்தோஷமாய் அதை விற்க ஒப்புக் கொண்டு, அவர்கள் கேட்ட பணத்திற்கு விற்க ஒத்துக் கொண்டார். பிறகு, அந்த வீட்டிற்கு வெளியே பெயின்ட் அடித்து, மேலே கூரையை திரும்ப சரியாக்கி, அந்த வீட்டைக் கொடுக்கும்போது அழகாக கொடுக்க வேண்டும் என்று, வீட்டின் முன்னால் இரண்டு மரங்களையும் நட்டார். அதை வாங்கியவர்கள் இந்த வீட்டை வாங்கியதற்காக பெருமைப்பட வேண்டும்என்று அவற்றை செய்து முடித்து, அதை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் அந்த வீட்டை வாங்கியவர்கள், ஒரு புல்டோசரைக் கொண்டு வந்து அந்த வீட்டை இடிக்கத் தொடங்கினார்கள். அதைக் கண்ட அந்த வயதான மனிதன், பதறிப் போய், ‘ஏன் இடிக்கிறீர்கள்?’ என்றுக் கேட்டார். அதற்கு அந்த வீட்டை வாங்கியவர்கள், ‘ஐயா, எங்களுக்கு ஒட்டுப் போடப்பட்ட இந்த பழைய வீடு வேண்டாம், இந்த இடத்தில், வானளாவும் கட்டிடம் கட்டப் போகிறோம். அந்த கட்டிடத்திற்கு முன்னால், நீரூற்று இருக்கும். கார்கள் நிறுத்தப்பட பெரிய இடம் இருக்கும். அநேகர் வந்து குடியிருக்கத்தக்கதான பெரிய அபார்ட்மென்டைஇந்த இடத்தில் கட்டப் போகிறோம்’ என்றுக் கூறினர்.

நமது தேவனும் நம்மிடத்தில் காணப்படும் சில நல்லக்காரியங்கள், சில நல்ல செய்கைகள் இவற்றைக் கொண்டு ஒட்டுப் போடப்பட்ட வாழ்க்கையை விரும்புவதில்லை. நம்முடைய நீதிகள் அழுக்கான கந்தை என்று அவர் அறிவார். அவர் நம்மை முற்றிலும், புதிய சிருஷ்டியாக, தம் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றவே விரும்புகிறார். ‘தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமதுகுமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்’ - (ரோமர் 8:29).

Tuesday 11 September 2012

இறைவன் நல்லவர்

கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது, என்று பக்தன் சங்கிதம் 118 : 01 இல் கூறுகின்றான். இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகின்றது என்னவென்றால் அவர் நல்லவர் ஆனபடியினால் அவரை துதியுங்கள் என்று சொல்லப்படவில்லை அவரை துதியுங்கள் அவர் நல்லவர் என்று உறுதிபட கூறுகின்றார். எனனில் அவர் எப்பொழுதுமே எல்லோருக்கும் அவர் நல்லவர் சில வேளைகளில் நமக்கு எற்ப்படும் அசாதாரணமான சூழ்நிலைகள் இறைவன் நல்லவரா?.... என்று நம்மை சிந்திக்க துண்டும் அப்படியான வேளைகளிலும் இறைவன் நல்லவரே… என நான் உறுதிப்பட கூறுகின்றேன். அதற்கு சில காரணங்களை முன் வைக்கின்றேன்.

1. எல்லா உயிரினங்களையும் இறைவனே படைத்தார். ஆனால் மனிதனை விஷேசித்த விதமாக தமது சாயலாக படைத்தார் ஆகவே அவர் நல்லவர் அவனை சிந்திக்கும் படியாக சிறந்தவற்றை தெரிவு செய்யும் படியாக நிறைவான ஆற்றலை அவனுக்கு கொடுத்தார். ஆகவே அவர் நல்லவர். அதுமட்டுமல்லாது இப்பூமியில் உனக்கு எற்படும் அசாதாரணமான சூழ்நிலையின் போது நான் நல்லவரா? என சோதித்தறிவதை விட்டு விட்டு என்னை நோக்கி கூப்பிடு நான் உனக்கு மறு உத்தரவு கொடுப்பேன் எனக்கூறியிருக்கின்றாரே (அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான். நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன். ஆபத்தில் நானே அவனோடிருந்துää அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். சங் 91 : 15 )

ஆகவே அவர் நல்லவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தம் ஜீவனை நமக்காக தந்து பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்டெடுத்து நம்மோடு நித்தமும் உறவாட காத்திருக்கிறாரே… ஆகவே அவர் மிகவும் மிகவும் நல்லவர்

ஆகவே நமக்கு நம்முடைய வாழ்வில் எப்பேற்பட்ட காரியமாக இருந்தாலும் இறைவன் நல்லவர் என்பதை நம் நினைவில் நிறுத்தி வாழக்கற்றுக்கொண்டால் அவர் நமக்கு எப்பொழுதும் மிகவும் மிகவும் நல்லவர்.

ஆகவே கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...