கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Wednesday 2 January 2013

உலகின் ஒளி

'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்' - (மத்தேயு 5:14-15.

திடீரென்று வீட்டில் கரண்ட் கட் ஆனது. மெழுகுவர்த்தி வைத்த இடத்தை நோக்கி தட்டுதடுமாறி போய் மெழுகுவர்த்திகளை எடுத்து கொண்டு திரும்புகையில், 'அங்கேயே நில்' என்ற சத்தம் கேட்டது. யார் என்று தேடும்போது, 'நான்தான், உன் கையில் இருந்துதான் பேசுகிறேன்' என்று குரல் கேட்டது, பார்த்தால் கையிலிருந்த மெழுகுவர்த்தி! அது என்னிடம், 'என்னை இங்கிருந்து எடுத்து கொண்டு போகாதே' என்று கூறினது. நான் 'என்ன!' என்று ஆச்சரியத்துடன் கேட்ட போது, அது என்னிடம், 'என்னை இந்த அறையிலிருந்து எடுத்து கொண்டு போகாதே' என்று சொன்னது. நான் அதனிடம், 'நீ என்ன சொல்கிறாய்? நீ மெழுகுவர்த்தி, உன்னுடைய வேலை இருளான இடத்தில் ஒளியை கொடுப்பதுதான்!' என்று கூறினேன். அதற்கு அந்த மெழுகுவர்த்தி, 'நான் இன்னும் தயாராகவில்லை, என்னை இந்த இடத்திலிருந்து எடுத்து கொண்டு போகாதே' என்று மீண்டும் என்னிடம் கூறினது. 'நான் இன்னும் ஆயத்தமாகவில்லை, நான் ஒளியை எப்படி கொடுப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன், அது முடிந்த பிறகு என்னை கொண்டு போ' என்று கேட்டு கொண்டது. எனக்கு ஆச்சரியமாயிருந்தது. 'சரி, நீ மட்டும் தான் இந்த அலமாரியில் இல்லை, உன்னை அணைத்து விட்டு, நான் மற்ற மெழுகுவர்த்திகளை கொண்டு போகிறேன்' என்று கூறினபோது, மற்ற மெழுகுவர்த்திகளும் 'நாங்களும் உன்னுடன் வரமாட்டோம்' என்று முரண்டு பண்ணின. இது என்னடா வம்பாயிருக்கிறது என்று நான் அவைகளிடம், 'வெளியே ஒரே இருட்டாக இருக்கிறது நீங்கள் யாரும் வரவல்லை என்றால், யார் ஒளியை கொடுக்க முடியும்' என்று கேட்டதற்கு, ஒரு மெழுகுவர்த்தி, 'ஒளியை கொடுப்பது எத்தனை முக்கியமானது என்று மற்றவர்களுக்கு விளக்கி கொண்டிருக்கிறேன், நீயும் வேண்டுமானால் கலந்து கொள்' என்று கூறினது. எல்லாம் ஒளியின் முக்கியத்துவத்தை குறித்து ஆராய்ந்து கொண்டும் பேசி கொண்டும் இருந்தனவே அன்றி, இறுதி வரை எந்த மெழுகுவர்த்தியும் தன் ஒளியை எடுத்து கொண்டு வெளியே வர விரும்பவில்லை. அதற்குள் கரண்டும் வந்து விட்டது.

'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்' என்று இயேசுகிறிஸ்து கூறினார். நாம் யாருக்காவது கிறிஸ்துவின் அன்பை குறித்து கூறியிருக்கிறோமா? உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய கிறிஸ்துவை குறித்து நாம் யாருக்காவது வெளிப்படுத்தியிருக்கிறோமா? உலகம் முழுவதும் இருளுக்குள் மூழ்கி, வழி தெரியாமல் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள். நாமோ ஒளியை எப்படி கொடுப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோமே தவிர, எத்தனையோ பிரசங்கங்களை கேட்டு கொண்டுதான் இருக்கிறோமே தவிர எழுந்து பிரகாசிக்க இதுவரை முன்வராமல், விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைத்து கொண்டிருக்கிறோம். 'விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள். அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்' என்று இயேசுகிறிஸ்து கூறினார். நாமோ நான் இன்னும் தயாராகவில்லை, நான் சொன்னால் யார் கேட்பார்கள் என்று நம்மை குறித்தே தாழ்வாக நினைத்து ஒளி வீசாமல் மரக்காலால் மூடி வைத்து கொண்டிருக்கிறோம். நாம் தயாராவதற்குள் கர்த்தரின் வருகையும் நடந்து விடும்.
Related Posts Plugin for WordPress, Blogger...