இயேசு கண்ணீர் விட்டார். - (யோவான் 11:35)
வேதத்திலேயே மிகவும் சிறிய இந்த வசனத்தை நமது பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே கற்று கொடுத்து, அவர்கள் அழகாக அந்த வசனத்தை சொல்வதை கேட்டிருக்கிறோம். உலகத்தில் வாழும் நமக்கு அநேக பாடுகளும் உபத்திரவங்களும் வருகிறபடியால் நாம் சில வேளைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் அழுவது உண்டு. துக்க நேரங்களிலும், மனம் பாரத்தால் நிறைந்திருக்கிற போதும் நாம் அழுவது உண்டு. ஆனால் சகலவற்றையும் படைத்தவர், தேவனுக்கு சமமாக எண்ணப்பட்டவர், தேவனுடைய ஒரே பேறான குமாரன் இந்த உலகத்தில் வந்திருந்தபோது கண்ணீர் விட்டார். அவர் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை கண்ணீர் விட்டார் என்று வேதம் நமக்கு கூறுகிறது.
1. இயேசு கண்ணீர் விட்டார். - (யோவான் 11:35)
2. அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது (லூக்கா 19:41-42)
3. அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு... (எபிரேயர் 5:7) இதில் முதலாவது முறை லாசருவின் கல்லறையினிடத்தில் வந்து, அவர் அழுவதை காண்கிறோம். இரண்டாவது முறை எருசலேம் நகரத்தண்டை வந்து, அவருடைய வார்த்தைகளையும், அவரையும் தள்ளி விட்ட அந்த நகரத்தையும், அதினால் அவர்களுக்கு வர இருக்கும் அழிவையும் நினைத்து அவர்கண்ணீர் விட்டார். மூன்றாவது முறை சிலுவையில் தாம் அறையப்படுவதற்கு முன்பு, தாம் கடந்து செல்ல இருக்கும் பாடுகளின் பாதையை நினைத்தவராக கண்ணீரோடு விண்ணப்பம் செய்தார் என்றும் பார்க்கிறோம்.
மனிதர்களாகிய நாம் விடும் கண்ணீருக்கும், சர்வ வல்லமையுள்ள தேவன் விடும் கண்ணீருக்கும் நிச்சயமாக அதிக வித்தியாசமுண்டு. நம்முடைய கண்ணீர் நமது விடுதலைக்காக, நமது பாரம் நீங்குவதற்காக விடுவதாகும். அவர் சகலத்தையும் அறிந்தவர், அவர் நம் ஒவ்வொருவரின், மற்றும் உலகத்தின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் அறிந்தவர். அதினால்தான் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று அவரை குறித்து கூறப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தேவன் கண்ணீர் விட்டார் என்பது விந்தையிலும் விந்தையல்லவா?
நம் தேவன் நம்மை விசாரிக்கிறவர். அவர் நம்மை தேற்றுகிறவர். நம் கண்களில் கண்ணீர் வரும்போது, அதை கண்டும் காணாமல் போகிறவர் அல்ல, லாசருவின் கல்லறையினிடத்திற்கு வந்தபோது, யூதர்கள் அழுகிறதை கண்ட அவருக்கும் கண்ணீர் வந்தது. மக்கள் அவரிடம் தங்கள் வியாதினிமித்தமும், வருத்தத்தினிமித்தமும் வந்த போது, அவருடைய உள்ளம் உருகிற்று. அவர்களை தொட்டு அவர் சுகப்படுத்தினார். அதே தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். நம்முடைய தேவைகளிலும் அவர் உடனே நமக்கு வந்து உதவி செய்யவும், நம்முடைய தேவைகளை சந்திக்கவும் அவர் வாஞ்சையுள்ளவராயிருக்கிறார். அவருடைய சித்தமில்லாமல் நம்முடைய தலையிலிருந்து ஒரு முடிக்கூட கீழே விழுவதில்லை.