கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 2 December 2012

இயேசுகிறிஸ்துவின் கண்ணீர்

இயேசு கண்ணீர் விட்டார். - (யோவான் 11:35)

வேதத்திலேயே மிகவும் சிறிய இந்த வசனத்தை நமது பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே கற்று கொடுத்து, அவர்கள் அழகாக அந்த வசனத்தை சொல்வதை கேட்டிருக்கிறோம். உலகத்தில் வாழும் நமக்கு அநேக பாடுகளும் உபத்திரவங்களும் வருகிறபடியால் நாம் சில வேளைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் அழுவது உண்டு. துக்க நேரங்களிலும், மனம் பாரத்தால் நிறைந்திருக்கிற போதும் நாம் அழுவது உண்டு. ஆனால் சகலவற்றையும் படைத்தவர், தேவனுக்கு சமமாக எண்ணப்பட்டவர், தேவனுடைய ஒரே பேறான குமாரன் இந்த உலகத்தில் வந்திருந்தபோது கண்ணீர் விட்டார். அவர் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை கண்ணீர் விட்டார் என்று வேதம் நமக்கு கூறுகிறது.

1. இயேசு கண்ணீர் விட்டார். - (யோவான் 11:35)

2. அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது (லூக்கா 19:41-42)

3. அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு... (எபிரேயர் 5:7) இதில் முதலாவது முறை லாசருவின் கல்லறையினிடத்தில் வந்து, அவர் அழுவதை காண்கிறோம். இரண்டாவது முறை எருசலேம் நகரத்தண்டை வந்து, அவருடைய வார்த்தைகளையும், அவரையும் தள்ளி விட்ட அந்த நகரத்தையும், அதினால் அவர்களுக்கு வர இருக்கும் அழிவையும் நினைத்து அவர்கண்ணீர் விட்டார். மூன்றாவது முறை சிலுவையில் தாம் அறையப்படுவதற்கு முன்பு, தாம் கடந்து செல்ல இருக்கும் பாடுகளின் பாதையை நினைத்தவராக கண்ணீரோடு விண்ணப்பம் செய்தார் என்றும் பார்க்கிறோம்.

மனிதர்களாகிய நாம் விடும் கண்ணீருக்கும், சர்வ வல்லமையுள்ள தேவன் விடும் கண்ணீருக்கும் நிச்சயமாக அதிக வித்தியாசமுண்டு. நம்முடைய கண்ணீர் நமது விடுதலைக்காக, நமது பாரம் நீங்குவதற்காக விடுவதாகும். அவர் சகலத்தையும் அறிந்தவர், அவர் நம் ஒவ்வொருவரின், மற்றும் உலகத்தின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் அறிந்தவர். அதினால்தான் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று அவரை குறித்து கூறப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தேவன் கண்ணீர் விட்டார் என்பது விந்தையிலும் விந்தையல்லவா?

நம் தேவன் நம்மை விசாரிக்கிறவர். அவர் நம்மை தேற்றுகிறவர். நம் கண்களில் கண்ணீர் வரும்போது, அதை கண்டும் காணாமல் போகிறவர் அல்ல, லாசருவின் கல்லறையினிடத்திற்கு வந்தபோது, யூதர்கள் அழுகிறதை கண்ட அவருக்கும் கண்ணீர் வந்தது. மக்கள் அவரிடம் தங்கள் வியாதினிமித்தமும், வருத்தத்தினிமித்தமும் வந்த போது, அவருடைய உள்ளம் உருகிற்று. அவர்களை தொட்டு அவர் சுகப்படுத்தினார். அதே தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். நம்முடைய தேவைகளிலும் அவர் உடனே நமக்கு வந்து உதவி செய்யவும், நம்முடைய தேவைகளை சந்திக்கவும் அவர் வாஞ்சையுள்ளவராயிருக்கிறார். அவருடைய சித்தமில்லாமல் நம்முடைய தலையிலிருந்து ஒரு முடிக்கூட கீழே விழுவதில்லை.

பாவத்திலிருந்து விடுதலை

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். - (1 யோவான் 1:8-9).

ஒரு கூட்ட தவளைகள் தண்ணீரை நோக்கி வேகமாக ஓடின. போகும் பாதை எப்படி உள்ளது என்று கூட பார்க்கவில்லை. மூன்று தவளைகள் வழியில் உள்ள பெருங்குழியில் விழுந்து விட்டன. மற்ற தவளைகளோ பாதையை நோக்கி செல்லாமல் குழியின் அருகே வந்து நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன. விழுந்த வேகத்தில் அந்த மூன்று தவளைகளும் எப்படியாவது மேலே வந்து விட வேண்டுமென்று வேகவேகமாக தாவின. இதை மேலிருந்து பார்த்து கொண்டிருந்த தவளைகளில் ஒன்று, 'நீங்கள் மேலே வரவே முடியாது. ஏன் வீணாக முயற்சிக்கிறீர்கள்' என்றது. இதை கேட்டவுடன் அந்த தவளை சோர்ந்து ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டது. இரண்டு மட்டும் மேலே வர முயற்சித்தன.

மேலேயிருந்த மற்றொரு தவளை கூறியது, 'மழைக்காலம் வரும் அப்போது இநத குழி மழை நீரால் நிரப்பப்படும். அப்போது நீங்கள் எளிதாக நீந்தி வெளியே வந்து விடலாம். அதுவரை இங்கே இருங்கள்' என்றது. அதுதான் சிறந்த யோசனை என்று இரண்டாவது தவளையும் எண்ணி தாவுவதை நிறுததியது. ஆனால் ஒன்று மட்டும் விடாப்பிடியாக வெளியே வர முயற்சித்தது. ஆனால் உடனிருந்த இரு தவளைகளும் 'நீயும் எங்களுடன் இரு. உனக்கு துணையாகத்தான் நாங்கள் இருக்கிறோமே' என்றன. ஆனாலும் காது கேளாதது போல பெருமூச்சுடன் தாவித்தாவி மேலேயும் வந்து விட்டது அந்த தவளை.

வேதத்தில் சிலர் பாவத்தில் விழுந்து திரும்ப எழுந்தரிக்க முயற்சிக்கவே இல்லை. அவர்கள் முயற்சித்திருந்தால் ஒருவேளை பாவததிலிருந்து வெளியே வந்திருக்கலாம். ஆனால் அவர்களோ பாவத்தில் இருப்பதையே விரும்பினார்கள்.

ஆனால் தாவீது ராஜா பாவத்தில் விழுந்து, அதை நாத்தான் தீர்க்கதரிசி கண்டித்தவுடன் அதை ஒப்புக்கொண்டு, அந்த பாவத்திற்கு மனம் வருந்தினார். பாவத்தை தேவனிடம் அறிக்கையிட்டார்.

நாமும் நமது வாழ்க்கை பயணததில் அறிந்தோ அறியாமலோ பாவத்தில் விழுந்து விடுகிறோம். விழுந்த நாம் அதிலிருந்து மீள முயற்சிக்கும்போது, சாத்தான் நம்மிடம், 'நீ எழும்பவே முடியாது. பாவமே இன்பம், நீ உன்னை சரிபடுத்த முயற்சிக்காதே' என்பான். நம்முடன் இருக்கும் நண்பர்களோ 'வயதாகும் காலம் வரும். அப்போது நாம் முயற்சிக்காமலேயே பாவ ஆசைகள் நம்மை விட்டு போய்விடும். அதுவரை இன்பம் காண்போம் என்று கூறலாம். மற்றொரு கூட்ட நண்பர்கள் 'நீ மட்டும் ஏன் அடிக்கடி குற்ற உணர்வு அடைகிறாய்? நாங்களும் உனக்கு துணையாக இருக்கிறோம், நீ மாட்டி கொள்ள மாட்டாய்' என்பார்கள். பாவத்தில் உழலும் மக்களின் பேச்சும் இதுவே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...