கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Friday 30 November 2012

2012-ல் உலகம் அழியுமா?- படித்து சுவைத்தது

  ”மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.” -   ரோமர்:11:25

வரும் 2012-ஆம் ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துபோக அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. மாயன் காலண்டர், எகிப்து பிரமிடின் அமைப்பு, பூமியின் சுழலில் ஏற்படப்போகும் மாற்றம், எதிர்பார்க்கப்படும் படுபயங்கர சூரியப் புயல் இப்படி பல காரணங்களை அட்டவணை படுத்திக் கொண்டே போயிருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி இது போன்ற டூம்ஸ்டே கதைகளுக்கு மக்களிடையே அதிக கிராக்கி உண்டு. இத்தகைய கதைகள் சீக்கிரமாக சூடுபிடித்து ஜனங்களிடையே பிரபலமாகின்றன. TEOTWAWKI என புதிதாக ஒரு சொல்லையே உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதன் விரிவாக்கம் The End Of The World As We Know It என்பதாம். இந்த டியோடுவாக்கியை சார்ந்து உருவாக்கப்படும் ஹாலிவுட் சினிமாக்கள் எப்போதுமே ஃபாக்ஸ்ஆபீஸ் ஹிட்டாக தவறுவதில்லை. இதனால் வேதாகமம் அல்லாத பிற பிரபல தீர்க்கதரிசனங்களும் ஆராயப்படுகின்றன. நாஸ்ட்ராமஸ், எட்வர்ட் கேய்ஸ், போப் மாலக்கியின் தரிசனங்கள், இஸ்லாமிய புகாரி நூல் என பல சுவாரஸ்ய மூலங்கள் இவர்களுக்கு கிடைத்திருக்கின்றன. இதனால் உலகின் முடிவு என்னமாயிருக்கும் என்னென்ன சம்பவங்கள் நடக்கலாம் ஓருலக அரசாங்கம், ஓருலக கரன்சி, அர்மெகெதோன், வெளியுலக ஜீவராசிகளின் படையெடுப்பு, ரோபாட்டுகளின் மாயாஜாலங்கள் என முன்பு பேசப்படாத பல விசயங்கள் இன்று பரவலாக பேசப்படுகின்றன.

பிசாசானவனுக்கு நம்மை விட வேதாகமம் அதிகமாய் தெரியும். இதனால் இறுதிக் காலங்களுக்கென மக்களை இப்போதே தயாராக்கத் தொடங்கிவிட்டான்.வேதாகம தீர்க்கதரிசனங்களுக்கொத்த எதிர்தீர்க்கதரிசனங்களை அவன் உருவாக்கி அதன் மூலம் மக்களின் இருதயங்களை கடினப்படுத்துவதோடு வரவிருக்கும் அசாதாரணமான நிகழ்வுகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் மக்களை இப்போதிருந்தே அவன் பயிற்றுவிக்க தொடங்கிவிட்டான்.

அணுவுலை ஒன்றின் அருகாமையிலுள்ள் மக்கள் வசிக்கும் பகுதி அது. கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைப்படி எப்போதெல்லாம் அணுவுலை வளாகத்திலிருந்து அபாயசங்கு ஒலிக்கிறதோ அப்போதெல்லாம் மக்கள் ஓடி தங்கள் தங்கள் வீடுகளுக்குள் போய் மறைந்துகொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை அந்த அபாயசங்கு பயங்கரமாக ஒலியெழுப்பியது. யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தெருவில் அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நல்லவேளையாய் அது தவறுதலாக ஒலித்த ஒரு சங்காக அமைந்தது. மத்தேயு 24:38,39-ல் சொல்லியிருக்கிறபடி வாரிக்கொண்டு போகுமட்டும் அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. ”எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”

Thursday 29 November 2012

இயன்ற மட்டும்

என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். - (ரோமர் 1:15).

ஒரு வாலிபன் ஒரு கனவை கண்டான். அவன் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டவன். பாவங்களற கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, நித்திய ஜீவனை பெற்று கொண்டவன். அவன் கண்ட கனவில், நியாயத்தீர்ப்பு நாளில் அவன் நிற்கிறதை போலவும், அவனுடைய முறை வந்தபோது, தேவன் அவனை பார்த்து, சில கேள்விகளை கேட்டப்பின், பரலோகத்தில் அவனுக்கென்று நியமிக்கப்பட்டிருந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்.

அவன் அப்படி கடந்து சென்றபோது, அவனுக்கு பின்னால் அவனுடைய உயிர் நண்பன் கர்த்தருக்கு முன்பாக நிற்பதையும், அவன் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளாததால், அவன் நித்திய ஆக்கினைக்கு தள்ளப்பட்டதையும் கண்டான். அவனுடைய நண்பனின் கண்களில் கண்ணீர்! அவனது பார்வை அந்த கிறிஸ்தவ வாலிபனின் இருதயத்தை துளைத்தது! 'எத்தனை நாட்கள் நான் உன்னோடு படுத்து உறங்கினேன், எத்தனை நாட்கள் நாம் ஒன்றாக சேர்த்து கழித்தோம்? ஒரு நாளாவது எனக்கு நீ கர்த்தரை குறித்து அறிவிக்க வில்லையே?' என்று பார்த்து கேட்டதை போன்று உணர்ந்தான். 'ஐயோ, நான் அந்த நண்பனோடு சேர்ந்து கர்த்தரை குறித்து அறிவிக்க எனக்கு கொடுக்கப்பட்ட தருணங்களை வீணாக்கி போட்டேனே!' என்று கதறினான்.

(பரலோகத்தில் கண்ணீர் உண்டு, அந்த கண்ணீர் இதை போன்றதாய்த்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! வெளிப்படுத்துதல் 21:4) ஆனால் இனி சென்ற காலம் திரும்ப வரப்போவதில்லை! நித்திய அக்கினிக்கு சென்ற ஆத்துமா மனம் திரும்ப மீண்டும் ஒரு தருணம் கொடுக்கப்பட போவதில்லை! இப்படி நம் நண்பர்கள், உறவினர்கள், கணவர்கள், மனைவிகள், பிள்ளைகளை நாம் இழந்து போவோமானால் எத்தனை பரிதாப நிலைமையாயிருக்கும்!!!

'கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் ஒருமுறை கேட்பதற்கு முன் இன்னொருவர் ஏன் பலமுறை கேட்க வேண்டும்' இக்கேள்வியை கேட்டவர் ஆஸ்வால்ட் ஸ்மித் என்ற தேவ ஊழியர். 'இயேசு என்ற வார்த்தையை கேள்விப்பட்டிராத ஜனங்கள் கோடிக்கணக்கில் இருக்கும்போது கிறிஸ்தவர்களாகிய நாம் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்கவும், அறியவும் செய்வதில் என்ன நியாயம் உண்டு?' என்று தன் செய்தி ஒன்றில் ஆஸ்வால்ட் வாதிடுகிறார்.

இவருடைய கேள்வியில் நிச்சயம் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. இவ்வுலகம் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின் 2011 வருடங்களை கடந்தும் இன்னும் நம் தேச மக்கள் தொகையில் சொற்ப அளவில்தான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளனர். உலகளவில் நற்செய்தி அறிவிக்கப்படாத மக்களினங்களில் 25 சதவிகிதம் இந்தியாவில் உள்ளனர். அதாவது மூன்றறை இலட்சம் கிராமங்களுக்கு இன்னும் சுவிசேஷ நற்செய்தி சென்றடையவில்லை. இவர்களின் எண்ணிக்கை நாற்பது கோடிக்கும் அதிகம். இன்னும் குறிப்பாய் கூற வேண்டுமானால் நம் கிறிஸ்தவ ஊழியம் என்பது புறமார்கத்தினர் மத்தியில் செய்வதை காட்டிலும், கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் பணியிலேயே முடங்கி கிடக்கிறது. சாப்பிட்டவர்களுக்கே மீண்டும் மீண்டும் உணவுகளை ஆயத்தம் செய்து கொடுத்து கொண்டிருக்கிறோம். ஜீவ அப்பமாகிய இயேசுவை தேடும் தரித்திரருக்கோ சுவிசேஷத்தை அறிவியாதபடிக்கு நம்மில் அநேகருடைய கண் சொருகி போய் இருக்கிறது.

நம் தேசம் இன்னும் சந்திக்கப்படாததற்கு பாவம், சாபம், விக்கிரக ஆராதனை என சாக்கு போக்கு சொல்லி தப்பி விடுகிறோம். ஆனால் அதற்கான காரணத்தை சரியாய் சொல்ல போனால் கிறிஸ்தவர்களாகிய நாம் செயல்படாததே காரணம்! பவுல் தான் அநேக ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படியாக கடன் பட்டுள்ளேன் என்றும் 'என்னால் இயன்ற மட்டும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க விரும்புகிறேன்' என்றும் கூறுகிறார். ஆம் மிஷனெரி ஊழியம் என்பது ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் செய்ய வேண்டிய கட்டாய கடமையாகும்.

கடைசி நிமிடத்தில் அற்புதம்

'இனி தப்பிப் பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று, .......பவுல் அவர்கள் நடுவிலே நின்று...... உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது என்றான்.' – (அப்போஸ்தலர் 27: 20 - 22).

குளத்தில் குளித்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அதில் மூழ்கி விட்டான். அனைவரும் பதற்றத்தோடு அதை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே நீச்சலடித்து, மூழ்கி கொண்டிருந்தவனை காப்பாற்ற முடியும். ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கினவன் ஒரு தடவை, இரண்டு தடவை மூழ்கி, மூன்றாம் முறையாக மூழ்க ஆரம்பிக்கிறான். அப்போது நீச்சல் தெரிந்த இவர் குளத்திற்குள் பாய்ந்து சென்று நீரில் மூழ்கினவனை தூக்கி கொண்டு வந்து சேர்த்தார். ஏன் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்து விட்டு மூன்றாம் முறை மூழ்க ஆரம்பித்தவுடன் பாய்ந்து சென்று காப்பாற்றினார்? பதிலை நீங்களே யூகித்திருப்பீர்கள்! தண்ணீரில் மூழ்கினவனை உடனே நாம் காப்பாற்ற முயற்சித்தால் காப்பாற்றுபனை மூழ்குகிறவன் கட்டி பிடித்து இருவரும் மூழ்க நேரிடும். மூழ்கினவன் தன் சொந்த பெலனை எல்லாம் இழந்தால்தான் அவனை காப்பாற்றுவது எளிது. இதுபோல தான் நமது சில தேவையிலும் தேவன் உதவி செய்ய கடைசி மணித்துளிவரை பொறுத்திருப்பதுண்டு.

வேதத்திலே நாம் பார்ப்போமென்றால், சாறிபாத் விதவையின் வாழ்விலும் கடைசி வேளையில் இதே மாதிரியான ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கடும் பஞ்ச வேளையில் அவளிடமிருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து விட்டது. கடைசியாக பானையை வழித்தெடுத்தால் ஒரு படி மாவும், ஒரு கரண்டி எண்ணையும் தேறும். அதில் அடை செய்து சாப்பிட்டு விட்டு உயிரை விட எண்ணினாள். அந்த கடைசி கட்டத்தில் ஆண்டவர் எலியாவை அவளிடத்தில் அனுப்புகிறார். சில வேளைகளில் நம்முடைய வாழ்வில் நமது தேவை உச்சக்கட்டத்தை அடையும்போதுதான் தேவன் நமது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். காரணம் என்ன? நமது சொந்த முயற்சிகளினால் பல இடங்களுக்கு உதவி நாடி சென்று பலரை சந்தித்து, பல கதவுகளை தட்டி எங்கும் உதவிக்கான வாசல் அடைபடும் போது இறுதியில் ஆண்டவரிடத்தில் வந்து 'ஆண்டவரே நீரே என் தஞ்சம், வேறு கதி இல்லை' என்று நாம் சொல்லும் நிலைக்கு வரும்வரை தேவன் நமது வாழ்வில் குறுக்கிட மாட்டார். நாம் அவரிடம் சரணடைந்து அவர் பாதத்திற்கு வரும்வரை அவர் அமர்ந்திருப்பார்.

Tuesday 27 November 2012

அந்நிய நுகம்

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?. -                                                        (2 கொரிந்தியர் 6:14-15).

காலங்கள் மாறி கொண்டிருக்கின்றன. இளைஞர்கள் ஒரு கணவனை அல்லது மனைவியை தெரிந்தெடுப்பதில் தங்களுடைய சுய விருப்பத்தை நிறைவேற்றவே விரும்புகின்றனர். தங்களுடைய பூரண வளர்ச்சியடையாத பருவத்தில் அவர்கள் அழகை, வசீகரத்தை அல்லது செல்வத்தை தங்கள் வாழ்க்கை துணையிடம் எதிர்ப்பார்க்கின்றனர். ஒரு இளைஞன் தன் வாழ்க்கை துணையை தெரிந்தெடுக்கும்போது எவ்விதமான குணாதிசயங்களை எதிர்பார்க்க வேண்டும், பெற்றோரும் எவ்வித குணாதிசயங்களை மனதில் கொண்டு வரன் பார்க்க வேண்டும் என்பதையும் காண்போம்.

வாழ்க்கை துணை ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமென்ற எண்ணமே முதலும் எல்லாவற்றிற்கும் மேலானதுமாக இருக்க வேண்டும். ஒரு பெண் ஒரு மனிதனை பார்த்து அவரை வாழ்க்கை துணையாகக் தீர்மானிக்கும் முன் கீழ்கண்ட கேள்விகளை கேளுங்கள், இந்த மனிதன் ஒரு கிறிஸ்தவரல்ல என கருதுகிறேன். இவர் எவ்வித பழக்கங்களை கொண்டிருப்பார்? என் குடும்பத்திற்கு சமாதானத்தை கொண்டு வருவாரா? அல்லது சண்டையை கொண்டு வருவாரா? மது அருந்துவாரா? புகை பிடிப்பாரா? என்று தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அதை மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். எனக்கு தெரிந்த ஒரு கிறிஸ்தவ பெண், பார்க்க வந்த ஒவ்வொரு ஆணிடமும் கேள்விகள் கேட்டு, ஒவ்வொருவரையும் தள்ளி, இன்று 35 வயது வரை இன்னும் திருமணம் ஆகாமலேயே இருக்கிறாள்!

ஒரு கிறிஸ்தவனுக்கு தேவனே வாழ்வின் மையம், அடுத்ததாக வாழ்க்கை துணை. தேவனுக்கு எதிலும் இடம் கொடுக்காதவரானால் அது எப்பேர்ப்பட்ட மன வேறுபாடுகளையும் வேதனைகளையும் உருவாக்கும்! ஆகவே கிறிஸ்தவரல்லாத ஒருவரை நேசிக்க ஆரம்பிக்குமுன், உறவாட ஆரம்பிக்குமுன், கிறிஸ்தவ பெண்களும், ஆண்களும் சிந்தித்து, அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக என்ற வசனத்தை நினைவுகூர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்லி, பின்னர் வாழ்நாளெல்லாம் கண்ணீர் வடித்து கொண்டிருக்க வேண்டாம்!

எனது உறவின் பெண் வேறு மதத்தில் உள்ள வாலிபனை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தாள். அவனிடம் 'நீ கிறிஸ்தவனாக மாறினால், நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்' என கூறவே, அவனும் ஒத்து கொண்டு, ஞானஸ்நானம் எடுத்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்தான். திருமணம் முடிந்து, அந்த பெண் அந்த வாலிபனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தபோது, அந்த பையனின் பெற்றோர், 'எங்கள் சுவாமி கோயிலில் நீ திருமணம் செய்தே ஆக வேண்டும்' என்று சொல்லி, அவளை கோயிலுக்கு கூட்டி சென்று, அங்கு மந்திரங்களை ஓதி, அந்த பையன் அவளுடைய கழுத்தில் தாலி கட்டினான். ஒரு பிள்ளையும் பிறந்தது. அவர்கள் வீட்டில், அந்த பெண் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று வற்புறுத்தல். அவளால் முடியாது போகவே இப்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது கற்பனை கதையல்ல, உண்மை சம்பவம்!

ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்து அவளை வாழ்க்கை துணையாக்க தீர்மானிக்குமுன் கீழ்க்ணட கேள்விகளை கேளுங்கள். இந்த பெண் என்னுடைய பிள்ளைகளுக்கு தாயாகி, நாள் முழுவதும் அதிக நேரம் அவர்களோடிருப்பாள், ஆனால், கிறிஸ்துவை அறியாதவளாக இவள் இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய காரியங்களை குறித்து எப்படி கற்பிப்பாள்? மேலும் நான் அவளை கிறிஸ்துவுக்கு ஆதாயப்படுத்த முடியவில்லை என்றால் நித்திய ஜீவனுக்கேதுவான நம்பிக்கையில்லாத அவளுடைய வாழ்வையும், மரணத்தையும் பார்ப்பது மிகவும் வேதனை நிறைந்த காரியமாக இருக்குமே என சிந்தியுங்கள்.

கிறிஸ்தவர்களில் பத்தில் எட்டுபேர் கிறிஸ்தவரல்லாதோரை திருமணம் செய்து கடைசியில் தேவனையும் சபையையும் விட்டு விலகி போகின்றனர் என புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. என்னோடு படித்த ஒரு வாலிபன் கர்த்தருக்காக வைராக்கியமாக நின்றவன், கிறிஸ்தவரல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து, விசுவாசத்தை விட்டே விலகி போனான்! என்ன பரிதாபம்! அவனுக்காக கண்ணீர் விட்டு ஜெபிப்பதை தவிர என்ன செய்ய முடியும்?

பழையன ஒழிந்தன, எல்லாம் புதிதாயின

ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).


ஒரு ராஜ அரண்மனையில் ஒரு அறிவிப்பு செய்தார்கள். அதன்படி, ஒரு பெரிய விருந்து அரண்மனையில் ஆயத்தபடுத்தப்பட போவதாகவும், அரச உடை அணிந்திருப்பவர்கள் நாளை நடக்கும் அந்த விருந்தில் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை ஒரு பிச்சைக்காரன் கேள்விப்பட்டான். அவனுக்கு அந்த விருந்தில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை எழுந்தது. ஆனால் தான் உடுத்தியிருந்த அழுக்கான கந்தையான உடைகளை பார்த்ததும் அவனுக்கு துக்கம் வந்தது.

நல்ல அரச குடும்பத்தினர் மாத்திரமே அந்த விருந்தில் கலந்து கொள்ள முடியும் என்று அவன் நினைத்து, பெருமூச்சு விட்டவனுக்கு திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது. தான் அதை எப்படி நிறைவேற்றப்போகிறோம் என்று நினைத்தபடியே, அவன் அரண்மனையின் வாயிலுக்கு முன்பாக சென்று, அங்கிருந்த வாயிற்காப்போனிடம், தான் அரசனை காண விரும்புவதாக கூறினான். அந்த காவலன், சற்று நேரம் காத்திருக்கும்படி கூறி, உள்ளே சென்று திரும்ப வந்து, அவனை உள்ளே அனுமதித்தான்.

உள்ளே சென்ற பிச்சைக்காரனிடம், அரசர், 'நீ என்னை காண வேண்டும் என்றாயா'? என்று கேட்டார். அதற்கு அவன், 'ஆம் அரசே, நான் நீங்கள் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு அதற்கு அரச உடுப்பு இல்லை, உங்களுடைய பழைய உடுப்பு ஏதாவது இருந்தால் எனக்கு கொடுப்பீர்களா? நானும் விருந்தில் கலந்து கொள்வேன்' என்று தைரியமாக கேட்டான்.

அதை கேட்ட அரசர் புன்னகையுடன், 'நல்லது, என்னிடமே நீ கேட்டாயே' என்று கூறி, தம்முடைய இளைய குமாரனிடம், 'உன்னுடைய அறைக்கு கூட்டி சென்று உன்னுடைய உடைகளில் ஒன்றை இவனுக்கு கொடு' என்று கூறினார். அதன்படி, இளவரசன், தன்னுடைய உடைகளில் ஒன்றை எடுத்து கொடுத்து, பிச்சைகாரனை அணிவிக்க செய்தார். அதை அணிந்த பிச்சைகாரனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கண்ணாடிக்கு முன் நின்று, அதையே பார்த்து கொண்டிருந்த பிச்சைகாரனிடம் இளவரசர், 'நீ அணிந்திருக்கிற இந்த உடையுடன் நாளை விருந்தில் கலந்து கொள், வேறு உடை எதுவும் உனக்கு வேண்டாம், இந்த உடை நீ உயிருடன் இருக்கும்வரைக்கும் போதுமானது' என்று கூறினார்.

அதை கேட்ட பிச்சைகாரன் இளவரசரின் கால்களில் விழுந்து, நன்றி கூறி, திரும்ப செல்லும்போது, தன்னுடைய பழைய கந்தல் உடைகளை கண்டு, ஒரு வேளை இளவரசர் தன்னுடைய உடைகளை மீண்டும் கேட்டால்.. என்று நினைத்து, அந்த கந்தையை தன்னுடன் எடுத்து கொண்டு புறப்பட்டான்.

அடுத்த நாள் விருந்தில் கலந்து கொண்ட பிச்சைக்காரன், அவன் வாழ்வில் கண்டிராத அளவு மிகவும் அருமையான உணவு வகைகளையும், பழங்களையும், இனிப்புகளையும் கண்டான். ஆனால், அவன் அதை சந்தோஷமாய் அனுபவிக்க முடியவில்லை, ஏனென்றால் அவன் தன்னுடைய கந்தையை ஒரு துணியில் சுற்றி அதை தன் மடியில் வைத்து இருந்தான். உணவு வரும்போது, அதை எடுக்க முற்படும்போது, அவன் மடியில் இருந்த கந்தை கீழே விழுந்ததால், அவன் விதவிதமான உணவுவகைகளை ருசிக்க முடியாமற் போனது. இளவரசர் சொன்னது போல, அவர் கொடுத்த உடை எப்போதும் அவனுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அவனுக்கோ தன் கந்தையின் மேல் இன்னும் மோகம் இருந்தபடியால், அதை அவன் விடவே யில்லை. எங்கு அவன் சென்றாலும் அந்த கந்தையை தன்னுடன் கொண்டு சென்றான்.

அதனால் அவனை கண்ட மக்கள் அவனை 'கந்தைகளோடு உள்ள வயோதிபன்' என்று அழைக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் அவன் மரண படுக்கையில் இருந்தான். அவனை காண அரசர் வந்தார். அவரது முகத்தில் அவன் தன் அருகில் வைத்திருந்த கந்தையை கண்டபோது, சோகம் வந்தது. எத்தனை அருமையான உடை இருந்தும் தன் கந்தையை அவன் விடவே இல்லையே என்று சோகத்துடன் அவர் கடந்து சென்றார். அதை கண்ட அந்த பிச்சைக்காரன், இளவரசர் தன்னிடம், 'இந்த கந்தையை விடாதிருந்தால் தாம் கொடுத்த ராஜ உடையை இழக்க வேண்டியதாயிருக்கும்' என்று கூறினதை நினைவு கூர்ந்து, தான் செய்த தவறை நினைத்து அழுதான். ஆனால் அது மிகவும் காலம் கடந்ததாயிருந்தது.

நாமும் கூட அரச விருந்திற்கு அதாவது தேவனுடைய குடும்பத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றால், நம்முடைய அழுக்கான கந்தையாகிய பாவங்களை நம்மை விட்டு அகற்றி, தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்து கொடுக்கும், இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிந்திருக்க வேண்டும். இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிந்து கொண்ட பிறகு பழைய கந்தையான அழுக்கான பாவங்களை நிச்சயமாய் விட்டிருக்க வேண்டும். அதை நாம் தொடர்ந்து பிடித்து கொண்டு ருப்போமானால், நாம் நிச்சயமாக கர்த்தருடைய விருந்தில் கலந்து கொள்ள முடியாது. இரட்சிப்பின் வஸ்திரம் இருந்தால் தான் நாம் பரலோகம் செல்ல முடியும். 'ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின' என்ற வசனத்தின்படி, நாம் புதிதாக்கப்பட்டவர்களாக, நம்முடைய வாழ்க்கை புதியதாக மாற வேண்டும். பழைய பாவ பழக்க வழக்கங்கள் நம்மை விட்டு முற்றிலும் அகல வேண்டும். பாவங்களை முற்றிலும் அகற்றிவிட்டு, புதிதாய் பிறந்த குழந்தையை போல நாம் கர்த்தருக்குள் வளர தேவன் தாமே கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே - நான்
புதியன படைப்பானேன்
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, என்னுடைய பாவங்கள் அழுக்கான கந்தையை போல் இருக்கிறதே, இயேசுகிறிஸ்துவின் தூய இரத்தத்தால் கழுவி என்னை சுத்திகரிப்பீராக. என்னை கழுவி சுத்திகரித்து, பாவங்களை போக்குவதற்காய் உமக்கு நன்றி. இரட்சிப்பின் மெல்லிய வஸ்திரத்தை எனக்கு உடுத்துவிப்பதற்காக உமக்கு நன்றி. என்னுடைய பழைய பாவங்கள் எதையும் என்னுடன் கந்தையை போல கொண்டு வராதபடிக்கு, அவைகளை முற்றிலும் என்னை விட்டு அகற்றும். பரிசுத்தமாய் வாழ கிருபை செய்யும். எல்லாவற்றையும் புதியதாக மாறி, என்னை உம்முடைய சொந்த மகனாக, மகளாக ஏற்று கொண்ட கிருபைக்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Monday 19 November 2012

குணசாலியான ஸ்திரீ

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. - (நீதிமொழிகள் 31:10).


குணசாலியான ஸ்திரீ, இவள்தான் ஒவ்வொரு இள வாலிபனின் கனவு. எந்த ஒரு திட்டமும் தீட்டி அவன் அப்படிப்பட்ட பெண்ணை பெற முடியாது. ஆனால் அவன், தன் தேவனிடம் தன் கனவுகளையும், தன் எதிர்ப்பார்ப்புகளையும் ஒப்புக்கொடுத்து, அவருடைய நேரத்திற்காக காத்திருப்பானானால், நிச்சயமாக தேவன் அப்படிப்பட்ட பெண்ணை அவனுக்கு கொடுக்க வல்லமையுள்ளவராகவே இருக்கிறார். ஏவாளை ஏற்ற துணையாக ஆதாமுக்கு உருவாக்கி, அவளை அவனிடத்தில் கொண்டு வந்த தேவனல்லவா அவர்!

அப்படிப்பட்ட மனைவியை பெற்ற மனிதன், முதலாவது அறிந்து கொள்ள வேண்டும், அவளுடைய விலை முத்துக்களை பார்க்கிலும் உயர்ந்தது என்று. இப்போது உலகம் மூன்று WWW உடைய பெண்ணைத்தான் தேடி கொண்டிருக்கிறது. Working, White, Wisdom உடைய பெண்ணைத்தான் தங்கள் மகனுக்கு தேடி கொண்டிருக்கிறார்கள். பெண்ணின் அழகு, வேலை, படிப்பு, கலர், குடும்ப செல்வாக்கு, சொத்துக்கள் இவைதான் ஒரு பெண்ணை திருமணம் செய்ய உலகம் முதலாவது பார்க்கிறது. இவைகள் ஒரளவு முக்கியம் என்றாலும், தேவ பக்தியுள்ள பெண்ணோ இவைகள் எல்லாவற்றிலும் மேலானவள். அப்படிப்பட்ட பெண்ணை வாஞ்சிக்கும்போது நிச்சயமாக தேவ கிருபையும் ஆசீர்வாதமும் அங்கு இருக்கும். அவை உலகத்தின் எல்லா சம்பத்துக்களைவிட மிகவும் உயர்ந்தது. குணசாலியான பெண்ணின் விலை இந்த உலகத்தின் எல்லா செல்வத்திற்கும் மேலானது.

ஒரு மனிதன் தனக்கு அழகான பெண் வேண்டும் என்று தேடினால் நிச்சயமாக அவனுக்கு கிடைக்கும். ஆனால் அந்த அழகு என்றும் நிலைக்காது. சிலர் தங்களுக்கு ஒரு சில நடிகைகள் போன்ற அழகுள்ள மனைவி வேண்டும் என்று கனவு காண்பதுண்டு. அந்த அழகு வீண், மாiயானது என்று நினைப்பதில்லை. 'சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திர்Pயே புகழப்படுவாள்' (நீதிமொழிகள் 31:30) என்று வேதம் சொல்கிறது. அழகு நாளாக ஆக குறைய ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் இருந்த அழகு கடைசிவரை நிலைப்பதில்லை. ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயின் அழகு நாளாக நாளாக கர்த்தரின் அழகு அவளில் தெரிய, அவள் அழகாக விளங்க ஆரம்பிப்பாள்.

வேதத்தில் அப்படிப்பட்ட குணசாலியான ஸ்திரீ ஒருவள் இருந்தாள். அவள்தான் ரூத். 'இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாம் அறிவார்கள்' (ரூத் 3:11) அவள் குணசாலியானவள் என்று ஊராரெல்லாம் அறிந்திருந்தார்கள். அது எப்படிப்பட்ட ஆசீர்வாதம்! ஆகையால் அவள் புறஜாதியான மோவாபிய ஸ்திரீயாயிருந்தாலும் கிறிஸ்து அவளுடைய சந்ததியில் பிறந்தார்.

குணசாலியான ஸ்திரீ என்றால் என்ன? அவளுடைய எட்டு வகையான குணநலன்களை நீதிமொழிகள் 31ம் அதிகாரதிதிலிருந்து பார்ப்போம். அந்த எட்டு குணநலன்களையும் ரூத் கொண்டிருந்தார்கள்.

1. குணசாலியான ஸ்திரீ தன் குடும்பத்தின் நன்மைக்காக பாடுபடுவாள். தன் கணவனின் காரியங்களிலும், வீட்டின் காரியங்களிலும் கருத்துள்ளவளாயிருப்பாள். 'அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.அவள் உயிரோடிக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்' - (நீதிமொழிகள் 31:11-12).

2. குணசாலியான ஸ்திரீ தான் செய்யும் வேலையை சந்தோஷமாய் உற்சாகத்தோடே செய்வாள். (13ம் வசனம்)

3. குணசாலியான ஸ்திரீ தன் வேலையில் கவனமாய் ஞானமாய் செய்வாள் (நீதிமொழிகள் 14-24)

4. குணசாலியான ஸ்திரீ தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. (26ம் வசனம்). வீடு வீடாக ஏறி ஊர்க்கதைகளை பேசி கொண்டிருக்காமல், ஞானமாய் தன் வாயை திறந்து போதிக்கிறாள்.

5. குணசாலியான ஸ்திரீ கர்த்தருக்கு பயப்படுகிறவளாக, அவர் மேல் தன் நம்பிக்கையை வைக்கிறவளாக இருக்கிறாள் (வசனம் 30)

6. குணசாலியான ஸ்திரீ தன் உடையில் மிகவும் கவனமாயிருக்கிறாள். மற்றவர் குறை கூறாவண்ணம், சரியான முறையில் உடுத்தி, அலங்காலம் செய்கிறாள். (வசனம் 22,25)

7. குணசாலியான ஸ்திரீ தன் கணவனை தவிர மற்ற ஆண்களிடம் மிக கவனமாக பழகுவாள். அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. அவள்; புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான். (வசனம் 11:23) மோசமான நடத்தை உள்ள பெண்ணின் கணவன் நியாயஸ்தலங்களில் உட்கார முடியாது.

8. குணசாலியான ஸ்திரீ தன் குடும்பத்திற்கும், தன் பின்வரும் சந்ததிக்கும் எப்போதும் ஆசீர்வாதமாக இருப்பாள் (வசனம் 28-29)

ரூத்திற்கு இத்தனை குணநலன்களும் இருந்தபடியால்தான் அவள் குணசாலி என்ற பெயர் பெற்றாள். இந்த குணநலன்கள் இருந்தபடியால் அதை கவனித்த போவாஸ் அவளை மணந்து கொண்டார். இந்த காலத்து வாலிப பெண் பிள்ளைகள் இந்த குணங்களை கொண்டவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும். நமது குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகள் இந்த குண நலன்களை உடையவர்களாக இருக்கும்படியாக நாம் ஜெபிக்க வேண்டும். கணவனும், பிள்ளைகளும் உற்றார் உறவினரும், ஊராரும் பாராட்டும் குணசாலியான பெண்ணாக ஒவ்வொரு கிறிஸ்தவ பெண்ணும் இருக்க பிரயாசப்படவேண்டும்.

ஒய்யாரத்து சீயோனே நீயும்
மெய்யாகவே களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேசுக்குனின் கையை கூப்பி துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே – தினம் 
தந்தானை துதிப்போமே

ஜெபம்:
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, குணசாலியான ஸ்திரீயை கண்டுபிடிப்பவன் யார் என்று வசனம் கூறுகிறதே, அந்த குணசாலியான ஸ்திரீயாக ஒவ்வொரு கிறிஸ்தவ சகோதரியையும் மாற்றும்படியாக ஜெபிக்கிறோம் தகப்பனே. குணசாலியான ரூத்தின் சந்ததியை நீர் ஆசீர்வதித்தது போல ஒவ்வொரு குணசாலியான சகோதரிகளின் வாழ்வையும் ஆசீர்வதிப்பீராக. எங்கள் பெண்பிள்ளைகள் குணசாலியான ஸ்திரீகளாக வளர கிருபையையும் ஞானத்தையும் தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Wednesday 14 November 2012

கோலியாத்தை முறியடிப்போம்

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். - (ஏசாயா 54:17).

ஒரு விதவை தாய் தன் வீட்டிற்கு அருகாமையிலுள்ள சிறு பிள்ளைகளை கூட்டி வைத்து, ஒவவொரு நாள் மாலையிலும் ஆண்டவரை துதித்து பாடி, சிறு சிறு கதைகள், சம்பவங்கள் மூலம் வேதாகம செய்திகளை பிள்ளைகள் மனதில் பதிய செய்து, வறுமையின் மத்தியிலும் தன்னால் இயன்ற பண்டம் கொடுத்து அனுப்புவார்கள். அநேக பிள்ளைகளின் வாழ்வு மாற்றப்பட்டு வந்தது. பக்கத்து வீட்டுகாரருக்கு தினமும் கைளை தட்டி, அந்த பிள்ளைகள் பாடுவது எரிச்சலை உண்டாக்கியது. ஆகவே அந்த அம்மாவை விரட்ட ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஒரு மந்திரவாதியை வரவழைத்தான். குறிப்பிட்ட நேரத்திலே மந்திரவாதி அவர்களுக்கு விரோதமாய் மந்திரங்களை செய்து கொண்டிருந்தான். திடீரென்று மந்திரவாதியின் கைகளும், கால்களும் நடுங்கின. ' ஐயோ என்னை உடனே இப்போதே என் வீட்டிற்கு அனுப்பு, இல்லையென்றால் மரித்து விடுவேன்' என்று கதறினான். காரில் உடனே அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான் மந்திரவாதி. ஆம் தேவன் தெரிந்து கொண்டவர்களை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறவன் யார்? (ரோமர் 8:33) சர்வவல்லமையுள்ள தேவனை அடைக்கலமாக கொண்ட நாம் எந்த ஒரு மாந்திரீகத்திற்கும், பிசாசின் வல்லமைக்கும் கலங்க தேவையில்லை.

மாந்திரீகங்கள் மற்றும் பிசாசின் கிரியைகளை குறித்து வேதாகமம் போதிக்கும் காரியத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும். கிறிஸ்தவர்களில் ஒரு சாரார் பிசாசுகளே கிடையாது என்று கூறுவர். மாறாக மறறொரு சாரார் எல்லாவற்றிற்கும் பிசாசு என்று கூறி எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். இந்த இரண்டு எண்ண ஓட்டங்களுமே சரியானதல்ல.

வேதாகமத்தில் குறி சொல்லுவோர், மந்திரவாதத்தில் ஈடுபடுவோரை குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. உதாரணமாக பார்வோனுக்கு முன்பாக மோசேயின் கோல் பாம்பாக மாறியது போல பார்வோனின் மந்திரவாதிகளும் தங்கள் கோல்களை மாற்றினர். அதே போல் எகிப்தியர்களுக்கு மேல் வந்த பத்து வாதைகளில் முதல் இரண்டை எகிப்திய மந்திரவாதிகளும் செய்து காட்டினர். ஆம், பிசாசும் தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு வல்லமையையும், அற்புதம் செய்கிற வழியையும் கொடுக்கிறான். ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமைக்கு முன்பாக எந்த பிசாசின் வல்லமைகளும் ஒரு பொருட்டல்ல. எகிப்திய மந்திவாதிகள் பாம்பாக மாற்றிய கோலை மோசேயின் கோல் விழுங்கி போட்டது.

அதுபோல இரண்டு வாதைகளுக்கு மேல் எகிப்திய மந்திரவாதிகளால் செயல்படுத்தி காட்டமுடியவில்லை என்பதையும் வாசிக்கிறோம்.

பிரியமானவர்களே, மாந்திரீகமும் பில்லி சூனியங்களும் உண்மைதான். ஆனால் அவைகளை விட கோடி மடங்கு வல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னமும், பாதுகாப்பும் மிகமிக உண்மையாகும். எந்த ஒரு பிசாசின் கிரியைகளுக்கும் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இயேசுவின் நாமத்தினால் பிசாசுகளை துரத்த அதிகாரம் பெற்ற நாம் ஏன் பிசாசின் வல்லமைக்கு பயப்பட வேண்டும்? அந்தகார வல்லமைகளை தேவ பெலத்தினாலும், இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள இரத்தத்தினாலும், அவருடைய நாமத்தின் வல்லமையினாலும் நாம் தோற்கடிக்க வேண்டும். எல்லா நாமத்திற்கும் மேலான இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்கு பாதாளம் நடுநடுங்கும்! ஒரே ஓட்டமாக ஓடிப்போகும்! அந்த நாமத்தை தரித்து கொண்ட ஒவ்வொருவர் மேலும் பிசாசிற்கும், சாத்தானின் வல்லமைக்கும் எந்தவித அதிகாரமுமில்லை.

கிறிஸ்தவர்களில் சிலர் பயப்படுவார்கள், 'அவன் எனக்கு சூனியம் வைத்து விட்டான், மந்திரம் செய்து விட்டான்' என்று. உண்மையான கிறிஸ்தவனாக இருந்தால், அந்த சக்திகள் அவனுக்கு பயந்து ஓடும். செய்தவனையே தாக்கும். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது. கர்த்தரின் நாமமும், அவருடைய இரத்தமும் நம்மை பாதுகாக்கும் கோட்டைகளாகும். அதினாலே நாம் வெற்றி எடுத்து, சாத்தானின் கிரியைகளையும், அவனுடைய தந்திரங்களையும், வெல்வோமாக! ஆமென் அல்லேலூயா!

சர்ப்பங்களை மிதித்திடவும் பெரும்
தேள்களை நசுக்கிடவும்
அதிகாரம் உண்டு வல்லமை உண்டு
தோல்வி இல்லை வெற்றி எனக்கே என்றும்
தோல்வி இல்லை வெற்றி எனக்கே

அந்தகார வல்லமைகளை தேவ பெலத்தால் முறியடிப்பேன்
இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு
பயமில்லை வெற்றி எனக்கே – என்றும்
பயமில்லை வெற்றி எனக்கே

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எந்த அந்தகார சக்திகளின் வல்லமையும் எங்களை மேற்கொள்ளாது என்ற உமது கிருபை நிறைந்த வாக்குதத்தத்திற்காக உமக்கு நன்றி. எங்களுக்கு விரோதமாக எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் என்ற உம்முடைய வார்த்தைக்காக நன்றி. நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிற அதிகாரத்தின்படி நாங்கள் பிசாசுகளை துரத்தவும், சத்துருவின் எல்லா வல்லமைகளையும் மேற்கொள்ளவும், நீர் எங்களுக்கு பெலன் தருவதற்காக உமக்கு நன்றி. எங்கள் துதி ஸ்தோத்திரங்களை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Related Posts Plugin for WordPress, Blogger...