கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 31 March 2013

அவசரம் வேண்டாம்!... காத்திருங்கள்

'நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்'

(நீதிமொழிகள் 13:12)


ஒரு நாள் கி‌ராம சேவகர் மரநடுகை தினத்தை முன்னிட்டு அக்கிராம மக்கள் அனைவரையும் அழைத்து ஒவ்வொருக்கும் ஒருமரக்கன்று கொடுத்தார். அதை வீட்டில் நட்டு தினமும் அதை பராமரிக்குமாறும் கூறினார். ராஜா குடும்பத்திற்க்கும் ஒரு மாங்கன்று கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் வீட்டிற்கு பின்னாலுள்ள தோட்டத்தில் கவனமாக நாட்டினார்கள். வாரம் ஒரு முறை உரம் போட்டார்கள். தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றினார்கள். காலை எழுந்தவுடன் அம்மரக்கன்று இலை விட்டுள்ளதா என தினமும் ஆராய்ச்சி செய்வார்கள்.மாதங்கள் உருண்டோடின. செடியில் பெரிதான மாற்றங்கள் காணாததினால் மிகவும் விரக்தி அடைந்தார்கள்.

நாம் எவ்வளவு கவனமாக வளர்த்தோம் அதை நட்டு எவ்வளவு மாதமாகி விட்டது. ஆனால் இந்த மாமரம் காய்க்கவே இல்லையே, இனி நான் இதற்கு தண்ணீர் ஊற்றப்போவதுமில்லை, உரம் போடப்போவதுமில்லை என்று புலம்பினார்கள்.

அப்போது அந்த வழியாக வந்த கிராம சேவகர் இவர்கள் கவலை அறிந்து விசாரித்தார். அவர்கள் தங்கள் நிலமையை எடுத்துக் கூறினார்கள் அப்பொழுது.  அவ் கிராம சேவகர் அவர்களை நோக்கி 'மாமரம் காய் காய்க்க பத்திலிருந்து பன்னிரெண்டு வருடம் ஆகும் ஆகவே, அதுவரை நாம் பொறுத்திருக்கத்தான் வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு' என கூறினார். அப்பொழுதான் அவர்களின் நிலை புரிந்தது.

நாமும் அநேக நேரங்களில் இவர்களைபோலவே எந்த ஒரு காரியத்திற்கும் பொறுத்திருக்க முடியாமல் அவசரப்படுகிறோம். நான் ஒழுங்காக வேதம் வாசிக்கிறேன், ஆலயம் செல்கிறேன், கர்த்தருக்கு பிரியமான வாழ்வு வாழ்கிறேன், ஆனால் இன்னும் என் ஜெபத்திற்கு பதில் வரவில்லையே, என அநேக நேரங்களில் அங்கலாய்க்கிறோம். இனி நான் ஜெபிக்க போவதே இல்லை, என்று கூட விரக்தியில் சொல்லலாம்.

ஆனால் வேதம் என்ன சொல்லுகின்றதென்று பாருங்கள், 'நீதிமானுக்காக வெளிச்சமும், மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது'. ஆம் தேவன் உங்களுக்குரிய நன்மைகளை முன்குறித்து விட்டார். அவற்றை நமக்கென்று விதைத்து விட்டார். அதை எவரும் தடை செய்ய முடியாது, ஆனால் அந்த மகிழ்சசி என்னும் விதை நமக்கு பலன் தரும் வரை நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். வாக்குதத்தத்தின் பிள்ளையை பெற வாக்குதத்தம் பெற்ற பிறகும், ஆபிரகாம் 25வருடம் பொறுமையோடு காத்திருக்கவில்லையா? 'நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்' (நீதிமொழிகள் 13:12) என்று வேதம் கூறுகிறது. ஆம், நீங்கள் நெடுங்காலமாய் காத்திருக்கிறீர்கள் என்பதை தேவன் அறிவார். அதை அவர் ஏற்ற வேளையில் கொடுக்கும்போது நிச்சயமாகவே அது ஜீவ விருட்சத்தை போல நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். அல்லேலூயா!
.
அப்படி காத்திருக்கும் காலம் நமக்கு விலையேறப்பெற்ற காலமாகும். அதில் நாம் தேவன் மேல் வைத்துள்ள அன்பின் ஆழத்தை அவர் கண்டு கொள்ள ஏதுவாகும். காத்திருக்கும் நாட்களில் சாத்தானுக்கு இடம் கொடுத்தோமானால் அவன் நம்மை இதை காரணம் காட்டியே தேவனை விட்டு பிரித்து விடுவான். ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
.
பிரியமானவர்களே, எவ்வளவு காலம் காத்திருப்பது என சோர்ந்து போகாதீர்கள், உங்களது ஜெபத்திற்கும் கண்ணீருக்கும், கிரியைக்கும் ஏற்ற காலம் வரும்போது, அத்தனை பலனையும் காண்பீர்கள். தேவ சமுகத்தில் விட்ட ஒரு சொட்டு கண்ணீரும் வீணாக போகாது. அவை சர்வ வல்ல தேவனுடைய கணக்கில் இருக்கிறது. ஆகவே இதுவரை நீதியாய் வாழ்ந்து என்ன பயன்? ஜெபித்து, கடவுளுக்கு பிரியமாய் வாழ்ந்து என்ன பயன்? என்று இருதயத்திலும் நினைக்காதீர்கள்.

நிச்சயமாகவே முடிவு உண்டு. உங்கள் நம்பிக்கை வீண் போகாது. ஆமென் அல்லேலூயா!

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும், அநேக நாட்களாக காத்திருந்து, கர்த்தரிடத்திலிருந்து இன்னும் பதில் வரவில்லையே என்று சோர்வோடு இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம் நிச்சயமாகவே ஒரு நாள் எங்கள் தேவன் எங்களுக்கு ஏற்ற பதிலை கொடுக்க போகிற தயவிற்காக நன்றி. எங்கள் நம்பிக்கையே நீர் தானையா, அந்த நம்பிக்கையை நாங்கள் இழந்து போகாதபடி, சீக்கிரமாய் நல்ல பதிலை கொடுத்து எங்களை ஆதரிக்கும்படியாக உம்மிடத்தில் மன்றாடுகிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Sunday 24 March 2013

நன்றியுள்ள இருதயம்

அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17: 17-19).
வியட்நாமில் நடந்த போரில், ஒரு இராணுவத்தலைவன் தன் கீழ் வேலைப் பார்த்த ஒரு சாதாரண போர் வீரனை காப்பாற்ற முயற்சிக்கும்போது, அவனை காப்பாற்றிவிட்டு, ஆனால் தான் காயப்பட்டு, அதன் காயங்களினால் அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது, அதைக் குறித்து அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் அவரது நினைவாக ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அப்போது அந்த கூட்டத்திற்கு அந்த போர்வீரனையும் அழைத்திருந்தார்கள்.
அந்த கூட்டத்திற்கு அந்த போர் வீரன் மிகவும் தாமதமாக வந்ததுமன்றி, நன்கு குடித்துவிட்டு வந்திருந்தான். அங்கிருந்த உணவு பொருட்களை அநாயசமாக சாப்பிட்டதுமன்றி, தன்னை காப்பாற்றிய அந்த தலைவனுக்கு தன் சார்பாக ஒரு நன்றியைக் கூட தெரிவிக்கவில்லை. மட்டுமல்ல, சாப்பிட்டு முடித்தவுடன், தன்னை அழைத்திருந்த அந்தக குடும்பத்திற்கு ஒரு நன்றியைக் கூட தெரிவிக்காமல், பேசாமல் போய் விட்டான். அவன் போனவுடனே, அந்த தலைவனின் தாயார் கதறி அழுது, ‘இந்த நன்றியில்லாத மனிதனுக்காகவா என் மகன் தன் ஜீவனைக் கொடுத்தான்’ என்று கதறினார்கள்.


இன்று நம்மில் எத்தனைப் பேர் அப்படி நன்றியில்லதவர்களாக இருக்கிறோம்? தேவன் நமக்கு பாராட்டிய கிருபைகள்தான் எத்தனை? அதை ஒரு முறையாவது நாம் நினைத்து அவரை துதிக்கிறோமா? பத்து குஷ்டரோகிகள் சுத்தமானாலும் ஒருவன் தான் திரும்ப வந்து அவருக்கு நன்றி சொன்னான். சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பி வரக்காணோமே என்று இயேசுகிறிஸ்து சொன்னாரல்லவா?


தேவன் செய்த நன்மைகளை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். அவருக்கு நன்றியறிதலுள்ளவர்களாய் இருப்போம். நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தாரே! நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் நம்மை ஆசீர்வதித்திருக்கிறாரே! அவருக்கு நாம் எத்தனையாய் நன்றி சொல்ல வேண்டும்! ஒரு நிமிடம் ஒரு தாளை எடுத்து கர்த்தர் செய்த பத்து காரியங்களை எழுதி, அப்பா உமக்கு ஸ்தோத்திரம். எனக்கு இப்படி கிருபை பாராட்டினீரே என்று கூறுவோமானால், அவர் எத்தனை மகிழ்வார்?


நாம் யாருக்காவது ஒரு நன்மை செய்யும்போது அவர்கள் நமக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கையானது. ஆனால் அவர்கள் நன்றி எதுவும் சொல்லாமல் போய் விட்டால், நாம் இந்த மனிதனுக்கு போய் செய்தோமே என்று நினைப்போமில்லையா? அதுப் போலத்தான் கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளுக்கு நாம் நன்றி சொல்லாமல் போனால், அவரும் அது போலத்தான் நினைப்பார். மற்ற நன்மைகளை அவர் தருவார் என்று நாம் எதிர்ப்பார்ப்பது எப்படி? நாம் அவரிடமிருந்து என்ன பெற்று கொண்டாலும் அதற்கு நன்றி சொல்ல பழகிக் கொள்வோம். இன்று, நாம் தேவன் செய்த நன்மைகளை மறப்பதினால்தான், வீண் பெருமை, அகந்தை நம்மை ஆட்கொள்கிறது. நாம் இருந்த நிலைமையிலேயே நாம் இன்று இல்லை. கர்த்தர் நம்மை நிச்சயமாக உயர்த்தியிருக்கிறார். நாம் இருந்த பழைய நிலைமையை மறக்கும்போதுதான், மற்றவர்களை காட்டிலும் நான் உயர்ந்தவன் என்று நம் மனம் பெருமை கொள்கிறது. ஆகையால் நாம் ஜெபிக்கும்போது, அப்பா, நீர் செய்த நன்மைகளை மறவாதிருக்கும் நன்றியுள்ள இருதயத்தை எனக்கு என்றும் தாரும் என்று ஜெபிக்க வேண்டும்.


நம்மோடு வேலை செய்கிற சகோதர சகோதரிகளுக்கு, ‘உங்களோடு நான் வேலை செய்வது எனக்கு சந்தோஷம், நன்றி’ என்று சொல்லிப் பாருங்கள், உங்கள் மேல் அவர்கள் வைத்திருக்கும் மதிப்பு உயரும். உங்கள் கணவர் அல்லது மனைவி செய்யும் காரியங்களுக்கு, என்மேல் கரிசனையாக செய்தாயே நன்றி’ என்றுச் சொல்லுங்கள். ‘இன்று சாப்பாடு பிரமாதமாக இருந்தது ‘Thank you’ என்று சொல்லுங்கள், அவர்கள் இன்னும் நன்றாக சமைத்து கொடுப்பார்கள். நன்றி என்று சொல்லுவோம். கர்த்தர் செய்த நன்மைகளை மறவாதிருப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்;.


ஜெபம்: 
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மைத் துதிக்கிறோம். அப்பா நீர் செய்த நன்மைகளை மறவாதிருக்கும் நன்றி மறவா இருதயத்தை எங்களுக்கு எப்போதும் தாரும். நீர் எங்களுக்கு செய்த நன்மைகள் கோடா கோடி தகப்பனே, எப்படி நன்றி சொல்லுவோம்? உமக்கு நன்றி என்று இருதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறோம். எங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் மூச்சு விடுவதுக் கூட உமது கிருபைதான் என்று உணர்ந்து, உமக்கு நன்றியாய் ஜீவிக்க உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Tuesday 19 March 2013

போதும் என்ற மனம்

என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். - (பிலிப்பியர் 4:11-12).

.ஒரு சிற்பி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதில் உருவத்தை செதுக்க ஆரம்பித்தார். தலைக்கு மேலே சூரிய வெப்பம் அவரை தாக்கவே, 'சே, இது என்ன வாழ்க்கை, எப்போது பார்த்தாலும், இந்த வெயிலில் நின்று இந்த உளியை கையில் வைத்து செதுக்கி கொண்டே இருக்கிறேனே! எனக்கு வேறு நல்ல வேலையும், எளிதாக அதிகமாக சம்பளமும் கிடைத்தால் நன்றாக இருக்குமே' என்று நினைத்தார். அப்போது அந்த வழியாக அந்த நாட்டு ராஜா குதிரையில் வருவதை கண்டார். ஆ, இந்த ராஜாவை போல் தானிருந்தால் எத்தனை நலமாயிருக்கும் என்று எண்ணினார், என்ன ஆச்சரியம், உடனே அவர் ராஜாவாக மாறினார். அவர் குதிரையில் பயணித்து கொண்டிருந்தபோது, சூரிய வெப்பம் அவர் மேல் அதிகமாக பாய்ந்தபோது, இந்த சூரியன் தான் இந்த ராஜாவை விட பெரியது என்று நினைத்த மாத்திரத்தில், உடனே சூரியனாக மாறினார். அப்படி சூரியனாக பிரகாசித்து கொண்டிருந்தபோது, ஒரு மேகம் தோன்றி, பூமியின்மேல் மழையை பொழிந்தது. தண்ணீரை அடித்து கொண்டு போகிறபோது, ஒரு பெரிய கல்லை தவிர வேறு எல்லாவற்றையும் அது போகிற வழியில் அடித்து கொண்டு சென்றது. உடனே அந்த சிற்பி, ஆ, அந்த கல்தான் மிகவும் உறுதியானது, என்னவந்தாலும் அசையவில்லையே என்று நினைத்த மாத்திரத்தில் உடனே ஒரு பெரிய கல்லாக மாறினார்.

. அப்போது ஒரு சிற்பி, ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு வந்து, அந்த கல்லை செதுக்க ஆரம்பித்த போதுதான், அந்த சிற்பிக்கு தன்னுடைய நிலைமையும், தான் எவ்வளவு வல்லமையுள்ளவரென்பதும் தெரிய வந்தது. நம்மில் அநேகர் நமக்கு இருக்கிற வசதிகளையும், தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களையும் கண்டு, திருப்தி அடைவதில்லை. மற்றவர்களை பார்த்து, அவர்களை போல எனக்கு இல்லையே என்று அதிருப்திபடுகிறவர்களாகவும், அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று முறையிடுகிறவர்களாகவும் காணப்படுகிறோம்.  நாம் இருக்கிற நிலைமை நினைத்து திருப்தி அடைவதேயில்லை! எவ்வளவு தான் சம்பளம் உயரட்டும், இன்னும் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்ப்பார்ப்பது மனிதனின் இயல்பாக மாறிவிட்டது. அந்த சம்பளத்திற்கு ஏற்ற வேலை செய்கிறோமா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை.

.பவுல் சொல்கிறார், 'என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்' என்று. நாம் எந்த நிலைமையில் இருந்தாலும், நாம் மனரம்மியமாக இருக்க கற்று கொள்ளும்போது, தேவன் அதில் மகிழ்ந்து, நம்மை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கிறார். தேவன் நம்முடைய பெலவீனங்களை அறிந்திருக்கிறபடியால், நம்மை ஒருபோதும் கைவிடாதவராக நம்மை தாங்கி வழிநடத்த வல்லவர். அவரே நம் தேவைகளில் அவைகளை சந்தித்து, நம்மை அதிசயமாய் வழிநடத்துவார்.

.எகிப்திலிருந்து கானானுக்கு சென்ற இஸ்ரவேலர் கர்த்தரையே சார்ந்து ஜீவித்தபடியால், நாற்பது வருடங்கள் அவர்கள் வனாந்தரத்திலே இருந்தபோதும், அவர்களுக்கு ஒரு குறையையும் தேவன் வைக்கவில்லை.
ஆனால் சிறுபிள்ளைகள் வளர்ந்தபோது, அவர்கள் துணிகளும் அதற்கேற்றாற்போல பெரிதானது. செருப்புகளும் பெரிதானது. அவர்களுக்கு சாப்பிட மாம்சம் வேண்டும் என்று கேட்ட போது, கீழ்காற்று சிவந்த சமுத்திரத்திலிருந்து, காடைகளை கொண்டுவந்து போட்டது. மாராவின் கசந்த தண்ணீர் மதுரமாக மாறியது. ஒருவரும் வியாதிபடுக்கையில் படுக்கவில்லை. கர்த்தர் அதிசயவிதமாக சந்தித்தார். அதே தேவன் நம் தேவனாய் மாறாதவராய் இருக்கிறபடியால் நாம் அவரை சார்ந்து கொள்கிறபோது, நம் தேவைகளை அதிசயமாய் சந்திப்பார். நாம் மற்றவர்கள் போல இல்லையே என்று முறுமுறுக்க தேவையில்லை, கர்த்தர் அதினதின் நேரத்தில் நம் தேவைகளை சந்தித்து அதிசயமாய் நடத்துவார். நாம் கர்த்தரையே சார்ந்து கொள்கிறபோது இந்த அற்புதங்கள் நம் வாழ்விலும் நிச்சயமாய் நடக்கும். ஆமென்

அல்லேலூயா!

. ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிறவைகளில் நாங்கள் திருப்தியாக வாழ எங்களுக்கு கற்று தாரும். நீர் எங்கள் தேவைகளை சந்திக்கிற தேவனாக எங்களோடு என்றும் இருக்கிறபடியால் எதை குறித்தும் நாங்கள் கவலைபடாதபடி, உம்மையே சார்ந்து ஜீவிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே

ஆமென்.

Monday 18 March 2013

லேசான உபத்திரவம்

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது'. - (2 கொரிந்தியர் 4:17).

.
இரண்டாம் உலகப்போரின் வெற்றியில்,அமெரிக்க இராணுவ தளபதி ஜெனரல் ஐசன் ஹோவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் முதன் முதலாக இராணுவ பயிற்சியில் சேர்ந்தபோது தான் அங்கு படும் கஷ்டங்களை தினமும் தன் தந்தைக்கு கடிதமாக எழுதுவது வழக்கம். அதில் 'அதிகாலை 4 மணிக்கு எழும்ப வேண்டும். ஒரு நாளைக்கு 20 கி.மீ ஓட வேண்டும். மூன்று கி.மீ முள்வேலியினால் ஆன வலையில் முழங்கால் மற்றும் கைளினால் தவழ்ந்து சென்று கடக்க வேண்டும். சுமார் 40-45 டிகிரி வெப்பமுள்ள பாலைவனப்பகுதியில் பயிற்சி எடுக்கும்போது கிடைக்கும் ஆகாரம் 100 மில்லி பால் மட்டுமே'. இவ்வாறு தான் அனுபவிக்கின்ற கஷ்டங்களை கடிதமாக எழுதி அனுப்பினாலும் தந்தையிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. மூன்று மாதங்களில் அலுத்துப் போன ஐசன் நூறாவது கடிதத்தை 25 பக்கமுள்ள நீண்ட கடிதமாக எழுதினார். 'நீங்கள் இன்னும் இதற்கும் பதில் எழுதாவிட்டால், அல்லது இங்கிருந்து என்னை அழைத்து செல்லாவிட்டால், இதுவே என் கடைசி கடிதம். நான் என்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு சவப்பெட்டியில் வந்து சேர்வேன்' என்று எழுதி முடித்தார்.

.
இந்த நூறு கடிதங்களுக்கும் பதிலளிக்க அவரின் தந்தை ஒரு போஸ்ட் கார்டில் ஒரு சம்பவத்தை எழுதினார், 'இரண்டு பேர் சிறையிலடைக்கப்பட்டனர். ஒருவன் தன்னுடைய பரிதாப நிலையைக் கண்டு கண்ணீர் வடித்து தலை கவிழ்ந்வாறே அவ்வறையின் மணலை பார்த்தே துக்கத்துடன் தன் நாட்களை கழித்தான். மற்றவனோ துருப்பிடித்த ஜன்னல் வழியாக ஆகாயத்து நட்சத்திரங்களைப் பார்த்து அவற்றின் அழகினையும், வெளிச்சத்தையும் கண்டு, சந்தோஷத்துடன் காலத்தை கழித்தான். நீ யாரைப் போலிருக்க போகிறாய்?' என்று எழுதி கையெழுத்திட்டு மகனுக்கு அனுப்பி வைத்தார், இந்த கடிதத்தை படித்த ஐசன் உற்சாகமடைந்து, சந்தோஷத்துடன் இராணுவ பயிற்சியை முடித்து இருபதாம் நூற்றாண்டின் யுத்த வரலாற்றில் ஒரு நாயகனாக தன்னை மாற்றிக் கொண்டார். அமெரிக்க தேசத்தின் 34ஆவது ஜனாதிபதியாகவும் மாறினார்.

.
பிரியமானவர்களே, அப்போஸ்தலனாகிய பவுல் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. எத்தனையோ பாடுகளின் வழியாக அவர் கடந்து சென்றாலும் கிறிஸ்துவுக்காக அத்தனை பாடுகளையும் பொறுமையாக சகித்தார். அந்த பாடுகளை குறித்து அவர் சோர்ந்து போகாமல், கிறிஸ்து தன்னை அழைத்த அழைப்பில் உண்மையாக இருந்தபடியால், தான் பட்ட பாடுகளை, 'இக்காலத்து இலேசான பாடுகள்' என்று ஆச்சரியவிதமாக கூறுகிறார். மட்டுமல்ல, அந்த உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என விசுவாசித்தார்.நாமும் ஒருவேளை அநேக பாடுகளினூடே கடந்து சென்று கொண்டிருக்கலாம். பாடுகளையே நாம் நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால் அது பெரியதாகத்தான் தோன்றும். சிறையில் இருந்த கைதி மணலை பார்த்தபடியே தன் வாழ்நாளை கழித்தது போன்று, துக்கத்திலேயே நம் வாழ்நாளை கழித்து விடும்படியாகவே நேரிடலாம். நாம் படும் பாடுகள் எதுவும் நிலையானதல்ல, ஒரு நாள் அவை நம்மை விட்டு கடந்து போகத்தான் செய்யும். ஆனால் இப்படி ஆயிற்றே என்று நாம் துக்கத்தில் மூழ்கிப் போனால் யாராலும் நமக்கு உதவ முடியாது.ஆனால் ஆகாயத்து நட்சத்திரங்களை பார்த்து, தன் துக்கத்தை மறந்து வெளியே வந்த கைதியை போல, நாம் கர்த்தரையே நோக்கி பார்த்து லேசான பாடுகள் என்று அவைகளை விட்டு நாம் வெளியே வரவேண்டும். அதிலேயே மூழ்கிப் போய்விடக்கூடாது. 'அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்' (2 தீமோத்தேயு 2:12) என்ற வார்த்தையின்படி, பாடுகளை சகித்தோமானால், அவரோடேக்கூட ஆளுகையும் செய்வோம் என்ற நம்பிக்கையோடே 'இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்' (ரோமர்8:18)  என்று பவுல் எழுதியபடி வரப்போகும் மகிமையை நினைத்து, இப்போது படும் பாடுகளை 'அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் லேசான உபத்திரவங்கள்' என்று எண்ணத்தில் வைத்து, அவற்றை மகிழ்ச்சியோடே எதிர்கொண்டு, சகித்து, கிறிஸ்துவோடேக்கூட ஆளுகை செய்ய நம்மை தகுதிப்படுத்துவோமாக! ஆமென் அல்லேலூயா!

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் 
இந்த லேசான உபத்திரவம் 
சோர்ந்து போகாதே நீ 
சோர்ந்து போகாதே 
ஈடு இணையில்லா மகிமை 
இதனால் நமக்கு வந்திடுமே

ஜெபம் 
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்களுக்கு வரும் பாடுகளில் நாங்கள் அதை பொறுமையோடே சகித்து, அதி சீக்கிரத்தில் இந்த பாடுகள் எங்களை விட்டு நீங்கி போய் விடும் என்று விசுவாசித்து, பாடுகளை பொறுமையோடே சகிக்கும்படி கிருபை செய்யும். என் கிருபை உனக்கு போதும் என்று சொன்ன கர்த்தரின் வார்த்தைகளை நினைவில் வைத்து, உம்முடைய கிருபையை சார்ந்து ஜீவிக்க உதவி செய்யும். பாடுகளை சகித்தோமானால் தேவன் எங்களுக்காக வைத்திருக்கிற மகிமையையும், கிறிஸ்துவுடனேக்கூட ஆளுகை செய்யவும் நாங்கள் கண்டு உம்மை மகிமைப்படுத்த எங்களை தகுதிப்படுத்துவீராக.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Wednesday 13 March 2013

உதாசீனம் செய்ய வேண்டாம் - எச்சரிப்பு..... ( அவதானம் மிக முக்கியம் )

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவான் 1:12).


அமெரிக்க அதிபராக திரு. ஆண்ட்ரூ ஜேக்சன் அவர்கள் இருந்தபோது, ஒரு மனிதனுக்கு அவன் செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எந்த நாட்டிலும் ஜனாதிபதி தலையிட்டு, அவனுடைய குற்றத்தை மன்னித்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். அப்படி அதிபர் ஆண்ட்ரூ அவனுக்கு மன்னித்து மரண தண்டனையை ரத்து செய்தார். ஆனால் ஆச்சரியவிதமாக அந்த மனிதன் அந்த மன்னிப்பை நிராகரித்தான்.. 

நீதிமன்னறத்தில் உள்ள வக்கீல்களும், மற்றவர்களும் அவனை அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி எத்தனையோ சொன்னாலும் அவன் உறுதியாக அந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான்..

நீதிமன்றத்தின் நீதிபதிகளும், வக்கீல்களும் அவனிடம் அந்த மன்னிப்பை ஏற்க மறுத்தால் அவனுடைய உயிர் போவது மட்டுமன்றி, அந்த மன்னிப்பை வழங்கிய ஜனாதிபதியை கேவலப்படுத்துவது போல ஆகும் என்றும் அவனிடம் கூறினர். ஆனால் அவனோ உறுதியாக மறுத்து விட்டான். ஆகவே அவர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு அதை கொண்டு சென்றனர். சுப்ரீம் கோர்ட் ஒரு மனிதன் அதை ஏற்றுக்கொண்டாலொழிய சட்டமும் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டது. என்ன ஒரு பரிதாபம்!. தேவனின் இரட்சிப்பும் இதுப்போன்றதுதான். பாவிகளாகிய நமக்காக தம்முடைய ஒரே பேறான குமாரனை உலகத்திற்கு அனுப்பி அவர் சிலுவையில் அறையப்பட்டு, இரத்தத்தை சிந்தியதால் உலகத்திற்கு இரட்சிப்பை தேவன் அளித்து விட்டார்.

யார் யார் அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு பாவ மன்னிப்பும், இரட்சிப்பும் தேவனால் இலவசமாக கொடுக்கப்படுகிறது. எத்தனை பெரிய கிருபை!. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் நம் பாவங்களை அறிக்கையிட்டு பாவ மன்னிப்பை பெற்று இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாலொழிய தேவ நியாயத்தீர்ப்புக்கு யாரும் தப்ப முடியாது. 'அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' (யோவான் 3:18) என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது.

இரட்சிப்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தில் வந்த எந்த மனிதனுக்கும் உரியது. 'அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்' (அப்போஸ்தலர் 4:12) என்று வேதம் கூறுகிறது. இப்படியிருக்க அநத நாமத்தை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் நம்முடைய கரத்தில் தான் இருக்கிறது.



Salivation is free but you must receive it




'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்' எத்தனைப்பேர் என்று ஒரு கணக்கு இல்லை. உலகத்தின் அத்தனை ஜனங்களும் ஏற்றுக் கொண்டாலும் அத்தனைப்பேரும் தேவனுடைய பிள்ளைகளாக நிச்சயமாக முடியும். ஆனால் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைப் பேர்? இயேசுகிறிஸ்து ஒரு சாராருக்கு மட்டும்தான் வந்தார் என்று நினைத்து அவருடைய இரட்சிப்பை தள்ளிவிடுபவர்கள் எத்தனையோ கோடி கோடியான பேர்கள்! அவர் அருளும் பாவ மன்னிப்பை புறக்கணித்து தங்களுடைய வைராக்கியத்தில் வாழ்பவர்கள் கோடி கோடியானோர்!. அத்தனைப்பேரும் கர்த்தரை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக மன்றாடுவோமா? கர்த்தருடைய வசனம் சொல்லப்படும்போது அவர்கள் அதை உணர்ந்து அறிந்து கொள்ளும்படி அவர்களுக்கு உணர்வுள்ள இருதயம் அருளும்படி ஜெபிப்போமா? இரட்சிப்பு இலவசம், ஆனால் அதை ஏற்றுக் கொள்பவர்களுக்கே! 

Sunday 10 March 2013

எக்காள சத்தம்

எக்காளம் தொனிக்கும். அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இதுஅழியாமையையும். சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும். சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். - (1கொரிந்தியர் 15:52-54).

தேயிலை தொழிற்சாலையில் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு பகல் வேலையும், இரவு வேலையும் மாறி மாறி வரும். ஒவ்வொருமுறை வேலை ஆரம்பிக்கும் போதும் அந்த தேயிலை தொழிற்சாலையில் சங்கு முழங்கும். சில வேளைகளில் அவர், மனைவி பிள்ளைகளோடு அயர்ந்து தூங்கி கொண்டு இருப்பார். அதிகாலை நேர வேலைக்காக சங்கு ஊதும் சத்தம் கேட்டு, எழுந்திருந்து முகத்தை கழுவிவிட்டு வேலைக்கு செல்வார். அந்த வீட்டில் தூங்கும் பலர் அந்த சத்தத்ததை பொருட்படுத்துவதில்லை. அவரும் அவருடைய மனைவியும் மட்டுமே அந்த சத்தத்தை கேட்டு எழும்புவார்கள். மனைவி வேகமாக, காப்பி போட்டு கொடுக்க அவர் தன் வேலைக்கு செல்லுவார். மற்றவர்களோ அயர்ந்து தூங்கி கொண்டிருப்பார்கள்.

பாருங்கள், அவருக்கு மட்டும் அந்த சங்கின் சத்தம் கேட்கிறது. காரணம் அவருடைய உள்ளத்தை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தபடியினால்தான். வேலைக்கு செல்ல வேண்டுமென்ற கடமை உணர்வு இருக்கிறபடியால் அவரால் எழுந்து விட முடிகிறது. மற்றவர்கள் அதை பொருட்படுத்தாததினால் சங்கு சத்தம் அவர்கள் காதில் விழுவதும் இல்லை, எழுந்திருப்பதும் இல்லை.

இதோ போலதான் அநேக தேவனுடைய பிள்ளைகள் இரவிலே படுக்க போகுமுன், 'ஆண்டவரே என்னை அதிகாலையில் எழுப்பும்' என்று சொல்லிவிட்டு படுக்கைக்கு செல்கிறார்கள். எப்போது பொழுது விடியும்? என் நேசருடைய முகத்தை காண்பேன், மனம் திறந்து அவரிடம் பேசி உறவு கொள்வேன் என்ற ஆவலில் குறித்த நேரத்திற்கே எழும்பி விடுவார்கள். மற்றவர்களோ அயர்ந்து தூங்கி கொண்டிருப்பார்கள்.

இயேசுகிறிஸ்துவின் வருகையின் நாளில் கூட இதே காரியம்தான் சம்பவிக்க போகிறது. யாரெல்லாம் அவருடைய வருகையிலே காணப்பட வேண்டும் என்ற ஏக்கத்தோடும் வாஞ்சையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அந்த எக்காள சத்தத்தை கேட்டவுடன் அறிந்துகொள்வார்கள் இயேசுவின் வருகை வந்துவிட்டது என்று. இமைப்பொழுதில் மறுரூபமாக்கப்பட்டு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சந்திப்பதற்கு மத்திய ஆகாயத்திற்கு பறந்து செல்வார்கள். மற்றவர்களுக்கு அந்த சத்தம் கேட்பதும் இல்லை, அவர்கள் எதிர்கொண்டு போவதும் இல்லை.

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் என (1தெசலோனிக்கேயர் 4: 16-17) ல் பார்க்கிறோம். அப்போது அழிவுள்ள இந்த சரீரம் அழியாமையை தரித்துக் கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்படும் அல்லேலூயா! அந்த பொன்னான நாளில் நாம் மறுரூபமாக்கப்படும்படி, இப்போதே ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்தமாய் நம்மை காத்துக்கொள்வோம். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார்!

பிரியமானவர்களே, நமக்கு எந்த ஒரு காரியத்தில் வாஞ்சையும் தாகமும் அதிகமாக இருக்கிறதோ, அது சம்பந்தமான விஷயங்களை கேட்க நம் இருதயம் எப்போதும் விழித்தே இருக்கும். அதுபோல தேவன் மேல் வாஞ்சையும் தாகமும் இருக்குமானால் அவருடைய வசனத்தை கேட்க, அவருடன் உறவுகொள்ள நம் இருதயம் ஏங்கும், எப்போது அவர் வந்தாலும் அவரை சந்திக்க ஆயத்தமாயிருக்கும். ஆயத்தமாவோமா!


அதிகாலையில் உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே

ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் 
அப்பனே உமக்குத் தந்தேன் 
ஆராதனை ஆராதனை 
அன்பர் இயேசு ராஜனுக்கே 
ஆவியான் தேவனுக்கே 

இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் 
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் 
என் வாயின் வார்த்தை எல்லாம் 
பிறர் காயம் ஆற்ற வேண்டும் 

உமக்குகந்த தூய பலியாய்

இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் 
ஆட்கொண்டு என்னை நடத்தும் 
அபிஷேகத்தாலே நிரப்பும் 

ஜெபம்

எங்கள் கன்மலையும் மீட்பருமாகிய கர்த்தாவே உம்மை துதிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் வருகை எப்போது நடந்தாலும் நாங்கள் அவருக்கு எதிர்கொண்டுவரும்படியாக எங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள கிருபை செய்யும். எக்காள சத்தம் தொனிக்கையில் நாங்கள் மறுரூபமாகக்கப்பட்டு, கர்த்தருடனே கூட என்றென்றும் இருக்கும்படியாக, அந்த சத்தத்தை கேட்கும் காதுகளையும், விழிப்புணர்வுடன் எங்களை ஆயத்தபடுத்தவும் உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Related Posts Plugin for WordPress, Blogger...