கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Tuesday 18 December 2012

வேத வசனமாகிய கண்ணாடி


ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். -(யாக்கோபு 1:23-24).

மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று முகம் பார்க்கும் கண்ணாடியாகும். கண்ணாடி முன்பாக மணிக்கணக்காக நின்று தன்னை அழகுப்படுத்தி பார்த்து கொள்வாள் பெண். மனிதனும் தன் முகத்தை விதவித கோணங்களில் வைத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று திருப்தியாகும் வரைக்கும் முகத்தை அப்படி சீவி, இப்படி சீவி அழகு படுத்தி, பின் அவ்விடம் விட்டு போகிறான்.

ஒரு கண்ணாடி ஒருவரின் உருவத்தை தன்னிடத்தில் வாங்கி கொண்டு, பின்பு அவருடைய உருவத்தை அவர் இருக்கிற வண்ணமாக பிரதிபலிக்கிறது. ஒருபோதும் ஒரு மனிதனை அழகுப்படுத்தியோ, ஒரு மனிதனை அசிங்கப்படுத்தியோ காட்டுவதே இல்லை. ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அது வெளிப்படுத்துகிறது.

இந்த கண்ணாடி மாத்திரம் இல்லாதிருந்தால் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை நாம் அறியாமல் போயிருந்திருப்போம்! நம்மை அழகுப்படுத்தி கொண்டிருக்க மாட்டோம். முகத்தில் இருக்கிற கறையையோ, அப்பியிருக்கிற பவுடரையோ துடைத்து கொண்டிருந்திருக்க மாட்டோம். அத்தனை முக்கியமானதாக கண்ணாடி விளங்குகிறது.

வேத வசனம் கண்ணாடிக்கு ஒப்பிடப்பட்டு மேற்கண்ட வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒருவன் திருவசனத்தை கேட்டும் அதன்படி செய்யாதவனானால் அவன் ஒருவன் தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு, தன்னிடத்தில் இருக்கிற குறைகளை கண்டும், அதை சரி செய்யாதிருக்கிறவனைப் போல இருப்பான் என்று வேதம் கூறுகிறது.

'தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது' (எபிரேயர் 4:12). ஆம், வேத வசனம் ஒரு மனிதனிடத்திலுள்ள இருதயத்திலுள்ள நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாய் இருக்கிறபடியால், அது அவனிடத்தில் உள்ளதை அவனுக்கு தெரிவிக்கிறது.

நாம் நம்முடைய வெளி உருவத்தை பார்ப்பதற்கு கண்ணாடி உள்ளது. ஆனால் இருதயத்தில் உள்ளில் இருக்கும் காரியங்களை வேத வசனமே கண்ணாடியை போல வெளிப்படுத்துகிறது. எப்படி நம் உருவத்தை கண்டு, சரி செய்ய வேண்டிய காரியத்தை சரி செய்கிறோமோ, அதுப்போல நம்முடைய இருதயத்தில் காணப்படும் காரியங்களை வேதம் வெளிப்படுத்தும்போது அவற்றை சரி செய்து கொள்ள வேண்டும்.

'எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?' (எரேமியா 17:9). ஏனெனில் அப்படிப்பட்ட 'இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்' (மத்தேயு 15:19). ஆம், இருதயத்தின் உள்ளிருந்து தான் இப்படிப்பட்டதான அசுத்தங்கள் வெளிப்படும். வெளியே மனிதனை பார்ப்பதற்கு மிகவும் நல்லவனாக, சாதுவாக இருப்பான். ஆனால் இருதயத்திற்குள்ளேயோ எல்லாவற்றையும் அடக்கி வைத்து கொண்டிருப்பான். இவற்றில் வேத வசனம் நம்மை குறித்து வெளிப்படுத்தும் காரியத்திற்கு நாம் செவி கொடுத்து, எந்த துர்க்குணங்களாவது நம்மில் இருந்தால் அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.

Sunday 16 December 2012

அந்நியரை உபசரி

அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள், அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. - (எபிரெயர். 13:2).

ஜெர்மனியில் மிகவும் குளிரான இரவு. கன்ராடும் அவர் மனைவி உருசுலாவும் தங்களது ஒரே மகன் மரித்ததினால், மிகவும் துக்கத்தோடு அந்த குளிரான இரவைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒருச் சிறுவன் பாடும் குரல் கேட்டது. அந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது பாட்டுப்பாடி, அச்சிறுவன், பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். அவன் பாடுவதைக் கேட்ட அத்தம்பதியினர், அந்த அழகிய குரல், இக்கடும் குளிரில் பாடினால் கெட்டுவிடுமே எனறு எண்ணி, அச்சிறுவனை தங்கள் வீட்டிற்குள் அழைத்தனர். கந்தைகளையும் அழுக்குத் துணிகளையும் அணிந்து, குளிரில் நடுங்கியபடி இருந்த அவனை அனலான இடத்தில் கொண்டுவந்து, தங்கள் மரித்த மகனின் உடைகளை அணியச் செய்து, சாப்பிட ஆகாரமும் கொடுத்தார்கள்.

சாப்பிடும்போது அச்சிறுவன், தனது தந்தை மிகவும் ஏழ்மையானவரென்றும், தனக்கு உடையோ உணவோ கொடுக்க இயலாதவர் என்றும் கூறினான். இதைக் கேட்ட அத்தம்பதியினரின் இருதயம் நெகிழ்ந்தது. தங்கள் மகனின் படுக்கையில் படுக்க வைத்தனர். அவன் தூங்கிய பிறகு, அவர்கள், தங்களது மரித்த மகனுக்கு பதிலாக அச்சிறுவனை தத்தெடுப்பது என்று முடிவு செய்தனர்.

அடுத்த நாள் காலையில் அச்சிறுவன் எழுந்த போது, தங்கள் முடிவை தெரிவித்த போது, அவன் மிகவும் சந்தோஷப்பட்டு, சம்மதித்து, அவர்களோடேயே தங்கினான். அவனை படிக்க வைத்து, ஒரு பாதிரியும் ஆக்கினார்கள். அநதப் பாதிரி வேறு யாருமில்லை, புரட்சி செய்து புரோட்டஸ்டண்ட் என்னும் பிரிவை உண்டாக்கி, உலகத்தை கலக்கிய மார்ட்டின் லுத்தரே ஆவார்.

பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள், தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள், அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள். மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். - (மத்தேயு.25:35,40).

Sunday 9 December 2012

எச்சரிக்கையாயிருங்கள்.

ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். - (மாற்கு 13:5).

ஒரு பள்ளியில் வழக்கமாக வாரத்திற்கு ஒருமுறை வேதபாட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதை அந்தந்த வகுப்பாசிரியர்கள் நடத்தி வந்தனர். அதில் ஏழாம் வகுப்பு ஆசிரியர் ஒரு கிறிஸ்தவராயிருந்த போதிலும், வேதாகமத்தை தன் இருதயத்தில் நம்பாதவரும், பரிகசிப்பவருமாய் இருந்தார். ஒரு நாள் அவர் தன் வகுப்பு பிள்ளைகளிடம், 'இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலை கடந்து சென்றது பெரிய அற்புதம் ஒன்றுமில்லை. ஏனென்றால் அந்த சமயத்தில் சமுத்திரத்தில் ஆறு அங்குல அளவு மட்டுமே தண்ணீர் இருந்தது. ஆகவே தான் ஜனங்கள் அதை வெகு சுலபமாக கடந்து விட்டனர்' என்றார்.

உடனே அவ்வகுப்பிலிருந்து ஒரு சிறுமி, 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று சத்தமாக கூறினாள். ஆசிரியர் எரிச்சலுடன், 'இதில் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?'என்று கேட்டார். அச்சிறுமியோ சற்றும் தயங்காமல், 'அந்த ஆறு அங்குல அளவு தண்ணீரில் எகிப்திய சேனை அனைத்தையும், பார்வோனின் இரதங்களையும் நம்முடைய பெரிய தேவன் அழித்து விட்டாரே! இது அற்புதம் அல்லவா? அதற்காகவே நான் கர்த்தரை துதித்தேன்' என்று பதிலளித்தாள். அந்த ஆசிரியர் பேச்சற்று போனார். இந்நாட்களில் வேத வல்லுநர்கள் என்ற பெயரில் பலர் வேதத்தின் அற்புதங்களை ஏற்று கொள்ள மனதில்லாதவர்களாய் விதவிதமான விளக்கங்களை சொல்லுகிறவர்களாய் உள்ளனர். விண்வெளிக்கு மனிதன் செல்லும் இந்த விஞ்ஞான யுகத்தில் அற்புதங்களை நாம் நம்ப தேவையில்லை என்று கூறுவர். ஒரு சில கிறிஸ்தவ புத்தகங்களில் கூட வேதத்திற்கு புறம்பான பல விளக்கங்கள் காணப்படுவதுண்டு. 'இப்புத்தகத்தை எழுதியவர் பெரிய போதகரல்லவா, அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்' என்று நாம் அக்கருத்தை ஏற்று கொள்ள வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஆனால் இவையெல்லாம் வேதத்திற்கு புறம்பானது என்பதை எப்படி அறிநது கொள்ள முடியும்? வேதத்தின் அறிவு நமக்கு இருக்கும்போது மட்டுமே! இல்லாவிட்டால் எல்லாவற்றையும் கேட்டு மனதில் பெரும் குழப்பம் அடைந்து விடுவோம். கடந்த மே மாதம் 21ம் தேதி ஹெரால்ட் கேம்பிங்க் என்பவர் உலகம் அழியப்போகிறது என்று அறிவித்தார். இதை உலகமெங்கும் செஃப் ஹாகின்ஸ் என்பவர் பல இலட்ச ரூபாய்களை செவழித்து, பரப்பினார். ஆனால், மே மாதம் 21ம் தேதி ஒன்றும் நடக்கவில்லை. அவர் கூறியது உண்மை என்று அவரை நம்பி பலர் ஏமாந்தனர். சரியாக வேதம் அறியாதவர்கள் இத்தகைய வார்த்தைகளுக்கு மிக எளிதாக விழுந்து விடுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசுவும் தன்னுடைய இரண்டாம் வருகைக்கு முன் நடககும் அடையாளங்களில் பிரதானமாக கூறியது, கள்ளபோதனைகள் மற்றும் கள்ள போதகர்களுக்கு எச்சரிக்கையாயிருக்கும்படி கூறியுள்ளார். ஏனெனில் இயேசுவின் நாட்களில் இருந்த வேதபாரகர்களும், பரிசேயர்களும் வேத உபதேசம் என்ற பெயரில் ஜனங்களை கட்டி போட்டிருந்தார்கள். இன்றைக்கும் பிரசங்கம், உபதேசம் என்ற பெயரில் தவறானவைகளை போதித்து ஜனங்களை பிசாசு கட்டி வைத்துள்ளான். குறிப்பாக ஏதெனும் ஒரு வசனத்தை மையமாக வைத்து இதுவே சத்தியம் என போதித்து, அதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சபைகளும், ஊழியங்களும் ஏராளம். நாம் அப்படிப்பட்ட மாயையில் சிக்கி விடாதபடிக்கு வேதத்தை வாசித்து வேத அறிவிலே வளர வேண்டியது மிகமிக அவசியம்.

Thursday 6 December 2012

சிலுவை அன்பு

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். - (யோவான் 12:25).

'இப்பொழுது நாம் என்ன செய்வது? கீழே ஒரு நகரம் இருக்கிறது. பள்ளிக்கூடம் ஒன்றும் காணப்படுகிறது. இங்கே இந்த ஹெலிகாப்டர் வெடித்து கீழே விழுந்தால் இந்நகரிலுள்ள அநேகர் இறந்து விடுவார்கள். ஆனால் நாம் தப்பித்து கொள்ள பாராசூட் இருக்கிறது' என்று கூறி கொண்டிருந்தவரிடம் மற்றொருவர், 'நாம் முடிந்த அளவு வேகமாக ஹெலிகாப்படரை ஓட்டி சென்று விடுவோம். ஒருவேளை ஹெலிகாப்டர் வெடித்தால் நாம் இருவர் மாத்திரமே இறப்போம். ஆனால் கீழேயுள்ள அநேகரை காப்பாற்றி விடலாம்' என்று கூறி கொணடிருக்கும்போதே அந்த ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. பழுதடைந்த அந்த ஹெலிகாப்டர் ஊருக்கு வெளியில் சென்று வெடித்ததால் நகர மக்களுக்கு எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் அதை ஓட்டி சென்ற இரண்டு இளம் இராணுவ அதிகாரிகளும் உடல் கருகி இறந்து விட்டனர். இந்த இருவரும் பேசிய இறுதி பேச்சுக்களே மேலே படித்த சம்பவம்.

அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்த 28 வயதான இராணுவ அதிகாரி பானுசந்தர். கணிணி துறையில் இஞ்சினியரான இவர் பல்கலை கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றிருந்த போதிலும், தனக்கு வந்த வேலை வாய்ப்புக்களை தள்ளிவிட்டு நாட்டு மக்களுக்கு சேவை செய்யும்படி இராணுவத்தில் சேர்ந்து கடின உழைப்பு மற்றும திறமையினால் சிறுவயதிலேயே அதிகாரியாக உயர்ந்தவர். மற்றவர் சண்டிகரை சேர்ந்த ராதோர். பெற்றோருக்கு ஒரே மகனான இவர் தன்னை தேசத்தை காக்கும் பணியில் ஈடுபடுத்தி கொண்டார். இந்த இருவரும் தப்பித்து கொள்ள வாய்ப்பிருந்தும் தப்பித்து கொள்ளாமல் இறந்ததற்கு காரணமென்ன? நான் மரணமடைவதாயிருந்தாலும் என் தேசத்சை காக்கும்படி கடைசி மூச்சு வரை போராடுவேன் என்ற அவர்களின் உறுதி மொழியே! அர்ப்பணிப்பே அப்படி செய்ய தூண்டியது.
நாம் ஆராதிக்கும் ஆலயங்கள் ஏற்பட காரணமாயிருந்த மிஷனெரிகள் அநேகருடைய வாழ்க்கை சரிதைகளை வாசித்து பார்ப்போமானால் நாற்பது, நாற்பத்தைந்து வயதிற்குள்ளாகவே அநேகர் மரணமடைந்திருக்கிறார்கள். ஒரு நண்பர் எழுதின கடிதத்தை படித்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் இந்தியாவின் மீது பாரம் கொண்டு அந்த கடிதத்தையே அழைப்பாக ஏற்று குஷ்டரோகிகளின் மத்தியில் ஊழியம் செய்து, அவரும், அவருடைய இரண்டு மகன்களும் இரத்த சாட்சியாக மரித்தது நாம் அனைவரும் அறிந்ததே! ஒரு மிஷனெரியின் பிரசங்கத்தின் மூலம் இந்தியாவின் நிலைமையை அறிந்த வில்லியம் கேரி அறியாமையிலுள்ள மக்களை விடுவிக்கும்படி ஜெபித்தார். குறைந்த கலிவியறிவு உடையவராக இருந்தாலும் மிஷனெரியாக இந்தியா வந்து 40க்கும் மேற்ப்பட்ட இந்திய மொழிகளி;ல் பைபிள் அச்சிடப்பட காரணமாயிருந்தார். இப்படி அநேகர் பணி செய்யும்படி அவர்களை உந்தி தள்ளியது என்ன? சிலுவை அன்பே! அதே அன்பை நமக்குள்ளும் வாசம் செய்கிறது. ஆனால் அந்த அன்பை வெளிப்படுத்த நாம் என்ன செய்கிறோம்?

நம்மை சுற்றியுள்ள மக்களை பார்க்கும்போது மேய்ப்பனற்ற ஆடுகளை போல இருக்கிறார்களே என்று கண்ணீர் விடுகின்ற இயேசுவுக்கு உங்கள் அன்பை எப்படி வெளிப்படுத்த போகிறீர்கள்? அறுவடையோ மிகுதி ஆட்களோ கொஞ்சம் என்ற ஏக்கமுள்ள இருதய பாரமுள்ள வார்த்தைகளுக்கு நமது பதில் என்ன? நம்முடைய கிறிஸ்துவுக்கு அவருக்காக நிற்க, உழைக்க ஆட்கள் தேவை! நமது வாழ்க்கை, தாலந்துகள், நேரங்கள், விடுமுறைகள் எல்லாவற்றையும் அவருக்காக அர்ப்பணிப்போமா? அவர் நமக்கு செய்த, நமக்கு கொடுத்த எல்லா காரியங்களுக்கு ஈடாக நாம் என்னத்தை செலுத்த முடியும்? எது ஈடாகும்? ஓன்றுமே இல்லை! ஆனாலும் நம்மால் இயன்றதை அவருக்காக செய்வோமா? குடும்பத்திலுள்ளவர்கள் அதிலிருந்து பிரிந்து, தியாகமாக செய்தால்தான் ஊழியம் என்று நினைக்காதீர்கள். கர்த்தர் உங்களை குடும்பமாக இணைத்திருந்தால், குடும்பமாக அவருக்கென்று ஊழியம் செய்யுங்கள். குடும்பத்தை விட்டு விட்டு, ஊழியத்திற்கு போகிறேன் என்று சல்லாதிருங்கள். கர்த்தர் இணைத்து வைக்கிற தேவன், பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறவர் அல்ல! மனைவி ஊழியத்திற்கு வர மாட்டேன் என்று சொல்வார்களானால், அவர்களுக்காக தேவனிடத்தில் உங்கள் ஜெபத்தில் மன்றாடுங்கள். கர்த்தர் அவர்களையும் உங்களோடு இணைந்து ஊழியம் செய்ய வைப்பார்.

இந்த வாரத்தில் ஈரான் தேசத்தில், நீதிமன்றத்தில் கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த வாலிப போதகர் யூசுப் நடர்கனி அவர்களுக்கு சென்ற வருடமே அவர் கிறிஸ்துவை ஏற்று கொண்டதால் மரண தண்டனை விதித்த ஈரானின் அரசு இப்போது இந்த வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறது. தனது உயிரே போனாலும் நான் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன் என்று கிறிஸ்துவை பற்றி கொண்டிருக்கிற அவருக்கு ஈரான் அரசு தயவு காட்டும்படியாக நாம் ஜெபிப்போமா?

Tuesday 4 December 2012

கர்த்தர் கொடுத்த பெற்றோர்

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. - (நீதிமொழிகள் 23:22).

ஒரு வேடிக்கையான கதை உண்டு. ஒரு தாயின் மூன்று குமாரர்கள் நன்கு படித்து, வீட்டை விட்டு வெளியே சென்று நன்கு சம்பாதித்து, நல்ல நிலைமையில் இருந்தார்கள். ஒரு நாள் அவர்கள் மூவரும் கூடி தங்கள் தாயாருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒருவரோடொருவர் சொல்லி கொண்டார்கள். அதன்படி மூத்தவன் 'நான் அம்மாவுக்கென்று ஒரு பெரிய வீட்டை கட்டியிருக்கிறேன். ஏசியெல்லாம் போட்டு, சூப்பரா கலக்கியிருக்கிறேன்' என்று கூறினான். அடுத்தவன், 'நான் அம்மாவுக்கென்று ஒரு மெர்சிடஸ் காரும், அவர்கள் ஹாயா உட்கார்ந்து போகத்தக்கதாக ஒரு டிரைவரையும் ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்' என்று கூறினான். கடைசி மகன், 'உங்களுக்கெல்லாம் தெரியும், அம்மா பைபிளை அதிகமாக வாசிக்க பிரியப்படுவார்கள் என்று. ஆனால் அவர்களுடைய கண் சரியாக தெரியாததால் அவர்களால் சரியாக வாசிக்க முடிவதில்லை. ஆகவே நான் ஒரு கிளியை வாங்கியிருக்கிறேன். அது பைபிளை அப்படியே சொல்லும். அதை பழக்குவிக்க 12 வருடங்கள் ஆனதாம். அம்மா சோபாவில் உட்கார்ந்து, எந்த அதிகாரம், எந்த வசனம் என்று சொன்னால் போதும், அது பட்பட்டென்று சொல்லும்' என்று கூறினான். மூவரும் தங்கள் அன்னைக்கென்று தாங்கள் வாங்கிய பரிசுகளை பெருமிதமாக நினைத்தபடியே, அவற்றை தங்கள் அன்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அவற்றை பெற்று கொண்ட அன்னையிடமிருந்து ஒவ்வொருவருக்கும் கடிதம் வந்தது. அதன்படி, அவர்கள், மூத்தவனுக்கு 'நீ கொடுத்த வீடு மிகவும் பெரியது. நான் ஒரே ஒரு அறையில் தான் இருக்கிறேன். ஆனால் மற்ற இடம் முழுவதையும் நான் சுத்தப்படுத்த வேண்டி இருக்கிறது' என்று எழுதியிருந்தார்கள். அடுத்தவனுக்கு 'நான் எங்கே வெளியே போகிறேன், நீ எனக்கு அவ்வளவு பெரிய காரை அனுப்பி வைத்திருக்கிறாய்? நீ அனுப்பியிருக்கிற அந்த டிரைவர் அதற்கு மேல் மிகவும் மோசம், முகம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறான்' என்று எழுதியிருந்தார்கள். மூன்றாமவனுக்கு 'நீ மட்டும்தான் என்னுடைய தேவையையும், என்னை பற்றியும் நன்கு அறிந்திருக்கிறாய்! நீ அனுப்பியிருந்த கோழி; நன்றாக ருசியாக இருந்தது' என்று எழுதியிருந்தார்களே பார்க்கணும்!

Monday 3 December 2012

நம்முடைய காலங்கள்

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? - (மத்தேயு 6:25).

இரு வாலிபர்கள் (ஒருவன் விசுவாசி, மற்றவன் அவிசுவாசி) ஒரு மலையின் மேல் நடந்துப் போய்க் கொணடிருந்தார்கள். அப்போது விசுவாசியான வாலிபன், கர்த்தருடைய அநாதி திட்டங்களையும், அவருடைய சிருஷ்டிப்பின் மகிமையையும் பேசிக் கொண்டே இருவரும் நடந்துப் போய் கொண்டிருந்தார்கள். ‘எனக்கு எந்தவித கவலையும் இல்லை ஏனென்றால் என்னுடைய நடைகளை அவர் தீர்மானிக்கிறார். அவருடைய பாதுகாப்பு எனக்கு இருப்பதால் எனக்கு எந்தவிதக் கவலையும் இல்லை’ என்று விசுவாசியான வாலிபன் கூறினான்.

அதற்கு அவிசுவாசியான வாலிபன், ‘என்னை நடத்திக் கொள்ள எனக்குத்தெரியும் யாருடைய தயவும் எனக்கு வேண்டுவதில்லை’ என்றுக் கூறிவிட்டு, ஒரு கல்லை தூரத்தில் எறிந்து, ‘கடவுள் இந்தக் கல் எங்கே போய் விழ வேண்டும் என்று தீர்மானிக்கிறார்’ என்று கேலியாக கேட்டுவிட்டு, ‘பார், அந்த மரம் மலையின் ஓரத்தில் வளர்ந்து இருக்கிறது. அதையும் கர்த்தர்தான் வைத்தார் என்று சொல்லாதே, யாரோ வழிபோக்கன் விதையை எறிந்திருக்கிறான் அது இங்கே முளைவிட்டு மரமாக இருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்கிறாய்’ என்று அந்த மரத்தின்மேல் சாய்ந்து நின்றான். திடீரென்று அந்த மரத்தின் கீழ் இருந்த மண் சரிய ஆரம்பித்தது. அந்த வாலிபன் நகர்வதற்குள் மண்சரிந்து தாழ இருந்த பாறைகளுக்குள் விழ ஆரம்பித்தது. ஒரு கையை மரத்தைச் சுற்றி பிடித்தும் ஒரு காலை அங்கு இருந்த பாறையின் மேலும் வைத்து தப்பித்தான். இருவரும் சில நிமிஷங்கள் அப்படியே உறைந்துப் போய் நின்றார்கள்.

விசுவாசியான வாலிபன் உடனே அந்த இடத்திலேதானே முழங்கால்படியிட்டு, தேவனுக்கு தன் நண்பனின் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றி சொன்னான். பக்கத்தில் மற்றவனும் முழங்கால்படியிட்டு நன்றி சொன்னான் இருவரும் மீதமிருந்த தங்கள் பயணத்தில் ஒன்றும் பேசாமல் தொடர்ந்தனர். தேவன் அவிசுவாசியான வாலிபனோடு பேச ஆரம்பித்தார். தன்னை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து ஒரு ஊழியக்காரனாக அவன் மாறினான்.

Sunday 2 December 2012

இயேசுகிறிஸ்துவின் கண்ணீர்

இயேசு கண்ணீர் விட்டார். - (யோவான் 11:35)

வேதத்திலேயே மிகவும் சிறிய இந்த வசனத்தை நமது பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே கற்று கொடுத்து, அவர்கள் அழகாக அந்த வசனத்தை சொல்வதை கேட்டிருக்கிறோம். உலகத்தில் வாழும் நமக்கு அநேக பாடுகளும் உபத்திரவங்களும் வருகிறபடியால் நாம் சில வேளைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் அழுவது உண்டு. துக்க நேரங்களிலும், மனம் பாரத்தால் நிறைந்திருக்கிற போதும் நாம் அழுவது உண்டு. ஆனால் சகலவற்றையும் படைத்தவர், தேவனுக்கு சமமாக எண்ணப்பட்டவர், தேவனுடைய ஒரே பேறான குமாரன் இந்த உலகத்தில் வந்திருந்தபோது கண்ணீர் விட்டார். அவர் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை கண்ணீர் விட்டார் என்று வேதம் நமக்கு கூறுகிறது.

1. இயேசு கண்ணீர் விட்டார். - (யோவான் 11:35)

2. அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது (லூக்கா 19:41-42)

3. அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு... (எபிரேயர் 5:7) இதில் முதலாவது முறை லாசருவின் கல்லறையினிடத்தில் வந்து, அவர் அழுவதை காண்கிறோம். இரண்டாவது முறை எருசலேம் நகரத்தண்டை வந்து, அவருடைய வார்த்தைகளையும், அவரையும் தள்ளி விட்ட அந்த நகரத்தையும், அதினால் அவர்களுக்கு வர இருக்கும் அழிவையும் நினைத்து அவர்கண்ணீர் விட்டார். மூன்றாவது முறை சிலுவையில் தாம் அறையப்படுவதற்கு முன்பு, தாம் கடந்து செல்ல இருக்கும் பாடுகளின் பாதையை நினைத்தவராக கண்ணீரோடு விண்ணப்பம் செய்தார் என்றும் பார்க்கிறோம்.

மனிதர்களாகிய நாம் விடும் கண்ணீருக்கும், சர்வ வல்லமையுள்ள தேவன் விடும் கண்ணீருக்கும் நிச்சயமாக அதிக வித்தியாசமுண்டு. நம்முடைய கண்ணீர் நமது விடுதலைக்காக, நமது பாரம் நீங்குவதற்காக விடுவதாகும். அவர் சகலத்தையும் அறிந்தவர், அவர் நம் ஒவ்வொருவரின், மற்றும் உலகத்தின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் அறிந்தவர். அதினால்தான் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று அவரை குறித்து கூறப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தேவன் கண்ணீர் விட்டார் என்பது விந்தையிலும் விந்தையல்லவா?

நம் தேவன் நம்மை விசாரிக்கிறவர். அவர் நம்மை தேற்றுகிறவர். நம் கண்களில் கண்ணீர் வரும்போது, அதை கண்டும் காணாமல் போகிறவர் அல்ல, லாசருவின் கல்லறையினிடத்திற்கு வந்தபோது, யூதர்கள் அழுகிறதை கண்ட அவருக்கும் கண்ணீர் வந்தது. மக்கள் அவரிடம் தங்கள் வியாதினிமித்தமும், வருத்தத்தினிமித்தமும் வந்த போது, அவருடைய உள்ளம் உருகிற்று. அவர்களை தொட்டு அவர் சுகப்படுத்தினார். அதே தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். நம்முடைய தேவைகளிலும் அவர் உடனே நமக்கு வந்து உதவி செய்யவும், நம்முடைய தேவைகளை சந்திக்கவும் அவர் வாஞ்சையுள்ளவராயிருக்கிறார். அவருடைய சித்தமில்லாமல் நம்முடைய தலையிலிருந்து ஒரு முடிக்கூட கீழே விழுவதில்லை.

பாவத்திலிருந்து விடுதலை

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். - (1 யோவான் 1:8-9).

ஒரு கூட்ட தவளைகள் தண்ணீரை நோக்கி வேகமாக ஓடின. போகும் பாதை எப்படி உள்ளது என்று கூட பார்க்கவில்லை. மூன்று தவளைகள் வழியில் உள்ள பெருங்குழியில் விழுந்து விட்டன. மற்ற தவளைகளோ பாதையை நோக்கி செல்லாமல் குழியின் அருகே வந்து நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன. விழுந்த வேகத்தில் அந்த மூன்று தவளைகளும் எப்படியாவது மேலே வந்து விட வேண்டுமென்று வேகவேகமாக தாவின. இதை மேலிருந்து பார்த்து கொண்டிருந்த தவளைகளில் ஒன்று, 'நீங்கள் மேலே வரவே முடியாது. ஏன் வீணாக முயற்சிக்கிறீர்கள்' என்றது. இதை கேட்டவுடன் அந்த தவளை சோர்ந்து ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டது. இரண்டு மட்டும் மேலே வர முயற்சித்தன.

மேலேயிருந்த மற்றொரு தவளை கூறியது, 'மழைக்காலம் வரும் அப்போது இநத குழி மழை நீரால் நிரப்பப்படும். அப்போது நீங்கள் எளிதாக நீந்தி வெளியே வந்து விடலாம். அதுவரை இங்கே இருங்கள்' என்றது. அதுதான் சிறந்த யோசனை என்று இரண்டாவது தவளையும் எண்ணி தாவுவதை நிறுததியது. ஆனால் ஒன்று மட்டும் விடாப்பிடியாக வெளியே வர முயற்சித்தது. ஆனால் உடனிருந்த இரு தவளைகளும் 'நீயும் எங்களுடன் இரு. உனக்கு துணையாகத்தான் நாங்கள் இருக்கிறோமே' என்றன. ஆனாலும் காது கேளாதது போல பெருமூச்சுடன் தாவித்தாவி மேலேயும் வந்து விட்டது அந்த தவளை.

வேதத்தில் சிலர் பாவத்தில் விழுந்து திரும்ப எழுந்தரிக்க முயற்சிக்கவே இல்லை. அவர்கள் முயற்சித்திருந்தால் ஒருவேளை பாவததிலிருந்து வெளியே வந்திருக்கலாம். ஆனால் அவர்களோ பாவத்தில் இருப்பதையே விரும்பினார்கள்.

ஆனால் தாவீது ராஜா பாவத்தில் விழுந்து, அதை நாத்தான் தீர்க்கதரிசி கண்டித்தவுடன் அதை ஒப்புக்கொண்டு, அந்த பாவத்திற்கு மனம் வருந்தினார். பாவத்தை தேவனிடம் அறிக்கையிட்டார்.

நாமும் நமது வாழ்க்கை பயணததில் அறிந்தோ அறியாமலோ பாவத்தில் விழுந்து விடுகிறோம். விழுந்த நாம் அதிலிருந்து மீள முயற்சிக்கும்போது, சாத்தான் நம்மிடம், 'நீ எழும்பவே முடியாது. பாவமே இன்பம், நீ உன்னை சரிபடுத்த முயற்சிக்காதே' என்பான். நம்முடன் இருக்கும் நண்பர்களோ 'வயதாகும் காலம் வரும். அப்போது நாம் முயற்சிக்காமலேயே பாவ ஆசைகள் நம்மை விட்டு போய்விடும். அதுவரை இன்பம் காண்போம் என்று கூறலாம். மற்றொரு கூட்ட நண்பர்கள் 'நீ மட்டும் ஏன் அடிக்கடி குற்ற உணர்வு அடைகிறாய்? நாங்களும் உனக்கு துணையாக இருக்கிறோம், நீ மாட்டி கொள்ள மாட்டாய்' என்பார்கள். பாவத்தில் உழலும் மக்களின் பேச்சும் இதுவே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Friday 30 November 2012

2012-ல் உலகம் அழியுமா?- படித்து சுவைத்தது

  ”மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.” -   ரோமர்:11:25

வரும் 2012-ஆம் ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துபோக அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. மாயன் காலண்டர், எகிப்து பிரமிடின் அமைப்பு, பூமியின் சுழலில் ஏற்படப்போகும் மாற்றம், எதிர்பார்க்கப்படும் படுபயங்கர சூரியப் புயல் இப்படி பல காரணங்களை அட்டவணை படுத்திக் கொண்டே போயிருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி இது போன்ற டூம்ஸ்டே கதைகளுக்கு மக்களிடையே அதிக கிராக்கி உண்டு. இத்தகைய கதைகள் சீக்கிரமாக சூடுபிடித்து ஜனங்களிடையே பிரபலமாகின்றன. TEOTWAWKI என புதிதாக ஒரு சொல்லையே உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதன் விரிவாக்கம் The End Of The World As We Know It என்பதாம். இந்த டியோடுவாக்கியை சார்ந்து உருவாக்கப்படும் ஹாலிவுட் சினிமாக்கள் எப்போதுமே ஃபாக்ஸ்ஆபீஸ் ஹிட்டாக தவறுவதில்லை. இதனால் வேதாகமம் அல்லாத பிற பிரபல தீர்க்கதரிசனங்களும் ஆராயப்படுகின்றன. நாஸ்ட்ராமஸ், எட்வர்ட் கேய்ஸ், போப் மாலக்கியின் தரிசனங்கள், இஸ்லாமிய புகாரி நூல் என பல சுவாரஸ்ய மூலங்கள் இவர்களுக்கு கிடைத்திருக்கின்றன. இதனால் உலகின் முடிவு என்னமாயிருக்கும் என்னென்ன சம்பவங்கள் நடக்கலாம் ஓருலக அரசாங்கம், ஓருலக கரன்சி, அர்மெகெதோன், வெளியுலக ஜீவராசிகளின் படையெடுப்பு, ரோபாட்டுகளின் மாயாஜாலங்கள் என முன்பு பேசப்படாத பல விசயங்கள் இன்று பரவலாக பேசப்படுகின்றன.

பிசாசானவனுக்கு நம்மை விட வேதாகமம் அதிகமாய் தெரியும். இதனால் இறுதிக் காலங்களுக்கென மக்களை இப்போதே தயாராக்கத் தொடங்கிவிட்டான்.வேதாகம தீர்க்கதரிசனங்களுக்கொத்த எதிர்தீர்க்கதரிசனங்களை அவன் உருவாக்கி அதன் மூலம் மக்களின் இருதயங்களை கடினப்படுத்துவதோடு வரவிருக்கும் அசாதாரணமான நிகழ்வுகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் மக்களை இப்போதிருந்தே அவன் பயிற்றுவிக்க தொடங்கிவிட்டான்.

அணுவுலை ஒன்றின் அருகாமையிலுள்ள் மக்கள் வசிக்கும் பகுதி அது. கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைப்படி எப்போதெல்லாம் அணுவுலை வளாகத்திலிருந்து அபாயசங்கு ஒலிக்கிறதோ அப்போதெல்லாம் மக்கள் ஓடி தங்கள் தங்கள் வீடுகளுக்குள் போய் மறைந்துகொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை அந்த அபாயசங்கு பயங்கரமாக ஒலியெழுப்பியது. யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தெருவில் அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நல்லவேளையாய் அது தவறுதலாக ஒலித்த ஒரு சங்காக அமைந்தது. மத்தேயு 24:38,39-ல் சொல்லியிருக்கிறபடி வாரிக்கொண்டு போகுமட்டும் அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. ”எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”

Thursday 29 November 2012

இயன்ற மட்டும்

என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். - (ரோமர் 1:15).

ஒரு வாலிபன் ஒரு கனவை கண்டான். அவன் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டவன். பாவங்களற கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, நித்திய ஜீவனை பெற்று கொண்டவன். அவன் கண்ட கனவில், நியாயத்தீர்ப்பு நாளில் அவன் நிற்கிறதை போலவும், அவனுடைய முறை வந்தபோது, தேவன் அவனை பார்த்து, சில கேள்விகளை கேட்டப்பின், பரலோகத்தில் அவனுக்கென்று நியமிக்கப்பட்டிருந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்.

அவன் அப்படி கடந்து சென்றபோது, அவனுக்கு பின்னால் அவனுடைய உயிர் நண்பன் கர்த்தருக்கு முன்பாக நிற்பதையும், அவன் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளாததால், அவன் நித்திய ஆக்கினைக்கு தள்ளப்பட்டதையும் கண்டான். அவனுடைய நண்பனின் கண்களில் கண்ணீர்! அவனது பார்வை அந்த கிறிஸ்தவ வாலிபனின் இருதயத்தை துளைத்தது! 'எத்தனை நாட்கள் நான் உன்னோடு படுத்து உறங்கினேன், எத்தனை நாட்கள் நாம் ஒன்றாக சேர்த்து கழித்தோம்? ஒரு நாளாவது எனக்கு நீ கர்த்தரை குறித்து அறிவிக்க வில்லையே?' என்று பார்த்து கேட்டதை போன்று உணர்ந்தான். 'ஐயோ, நான் அந்த நண்பனோடு சேர்ந்து கர்த்தரை குறித்து அறிவிக்க எனக்கு கொடுக்கப்பட்ட தருணங்களை வீணாக்கி போட்டேனே!' என்று கதறினான்.

(பரலோகத்தில் கண்ணீர் உண்டு, அந்த கண்ணீர் இதை போன்றதாய்த்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! வெளிப்படுத்துதல் 21:4) ஆனால் இனி சென்ற காலம் திரும்ப வரப்போவதில்லை! நித்திய அக்கினிக்கு சென்ற ஆத்துமா மனம் திரும்ப மீண்டும் ஒரு தருணம் கொடுக்கப்பட போவதில்லை! இப்படி நம் நண்பர்கள், உறவினர்கள், கணவர்கள், மனைவிகள், பிள்ளைகளை நாம் இழந்து போவோமானால் எத்தனை பரிதாப நிலைமையாயிருக்கும்!!!

'கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் ஒருமுறை கேட்பதற்கு முன் இன்னொருவர் ஏன் பலமுறை கேட்க வேண்டும்' இக்கேள்வியை கேட்டவர் ஆஸ்வால்ட் ஸ்மித் என்ற தேவ ஊழியர். 'இயேசு என்ற வார்த்தையை கேள்விப்பட்டிராத ஜனங்கள் கோடிக்கணக்கில் இருக்கும்போது கிறிஸ்தவர்களாகிய நாம் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்கவும், அறியவும் செய்வதில் என்ன நியாயம் உண்டு?' என்று தன் செய்தி ஒன்றில் ஆஸ்வால்ட் வாதிடுகிறார்.

இவருடைய கேள்வியில் நிச்சயம் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. இவ்வுலகம் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின் 2011 வருடங்களை கடந்தும் இன்னும் நம் தேச மக்கள் தொகையில் சொற்ப அளவில்தான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளனர். உலகளவில் நற்செய்தி அறிவிக்கப்படாத மக்களினங்களில் 25 சதவிகிதம் இந்தியாவில் உள்ளனர். அதாவது மூன்றறை இலட்சம் கிராமங்களுக்கு இன்னும் சுவிசேஷ நற்செய்தி சென்றடையவில்லை. இவர்களின் எண்ணிக்கை நாற்பது கோடிக்கும் அதிகம். இன்னும் குறிப்பாய் கூற வேண்டுமானால் நம் கிறிஸ்தவ ஊழியம் என்பது புறமார்கத்தினர் மத்தியில் செய்வதை காட்டிலும், கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் பணியிலேயே முடங்கி கிடக்கிறது. சாப்பிட்டவர்களுக்கே மீண்டும் மீண்டும் உணவுகளை ஆயத்தம் செய்து கொடுத்து கொண்டிருக்கிறோம். ஜீவ அப்பமாகிய இயேசுவை தேடும் தரித்திரருக்கோ சுவிசேஷத்தை அறிவியாதபடிக்கு நம்மில் அநேகருடைய கண் சொருகி போய் இருக்கிறது.

நம் தேசம் இன்னும் சந்திக்கப்படாததற்கு பாவம், சாபம், விக்கிரக ஆராதனை என சாக்கு போக்கு சொல்லி தப்பி விடுகிறோம். ஆனால் அதற்கான காரணத்தை சரியாய் சொல்ல போனால் கிறிஸ்தவர்களாகிய நாம் செயல்படாததே காரணம்! பவுல் தான் அநேக ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படியாக கடன் பட்டுள்ளேன் என்றும் 'என்னால் இயன்ற மட்டும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க விரும்புகிறேன்' என்றும் கூறுகிறார். ஆம் மிஷனெரி ஊழியம் என்பது ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் செய்ய வேண்டிய கட்டாய கடமையாகும்.

கடைசி நிமிடத்தில் அற்புதம்

'இனி தப்பிப் பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று, .......பவுல் அவர்கள் நடுவிலே நின்று...... உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது என்றான்.' – (அப்போஸ்தலர் 27: 20 - 22).

குளத்தில் குளித்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அதில் மூழ்கி விட்டான். அனைவரும் பதற்றத்தோடு அதை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே நீச்சலடித்து, மூழ்கி கொண்டிருந்தவனை காப்பாற்ற முடியும். ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கினவன் ஒரு தடவை, இரண்டு தடவை மூழ்கி, மூன்றாம் முறையாக மூழ்க ஆரம்பிக்கிறான். அப்போது நீச்சல் தெரிந்த இவர் குளத்திற்குள் பாய்ந்து சென்று நீரில் மூழ்கினவனை தூக்கி கொண்டு வந்து சேர்த்தார். ஏன் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்து விட்டு மூன்றாம் முறை மூழ்க ஆரம்பித்தவுடன் பாய்ந்து சென்று காப்பாற்றினார்? பதிலை நீங்களே யூகித்திருப்பீர்கள்! தண்ணீரில் மூழ்கினவனை உடனே நாம் காப்பாற்ற முயற்சித்தால் காப்பாற்றுபனை மூழ்குகிறவன் கட்டி பிடித்து இருவரும் மூழ்க நேரிடும். மூழ்கினவன் தன் சொந்த பெலனை எல்லாம் இழந்தால்தான் அவனை காப்பாற்றுவது எளிது. இதுபோல தான் நமது சில தேவையிலும் தேவன் உதவி செய்ய கடைசி மணித்துளிவரை பொறுத்திருப்பதுண்டு.

வேதத்திலே நாம் பார்ப்போமென்றால், சாறிபாத் விதவையின் வாழ்விலும் கடைசி வேளையில் இதே மாதிரியான ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கடும் பஞ்ச வேளையில் அவளிடமிருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து விட்டது. கடைசியாக பானையை வழித்தெடுத்தால் ஒரு படி மாவும், ஒரு கரண்டி எண்ணையும் தேறும். அதில் அடை செய்து சாப்பிட்டு விட்டு உயிரை விட எண்ணினாள். அந்த கடைசி கட்டத்தில் ஆண்டவர் எலியாவை அவளிடத்தில் அனுப்புகிறார். சில வேளைகளில் நம்முடைய வாழ்வில் நமது தேவை உச்சக்கட்டத்தை அடையும்போதுதான் தேவன் நமது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். காரணம் என்ன? நமது சொந்த முயற்சிகளினால் பல இடங்களுக்கு உதவி நாடி சென்று பலரை சந்தித்து, பல கதவுகளை தட்டி எங்கும் உதவிக்கான வாசல் அடைபடும் போது இறுதியில் ஆண்டவரிடத்தில் வந்து 'ஆண்டவரே நீரே என் தஞ்சம், வேறு கதி இல்லை' என்று நாம் சொல்லும் நிலைக்கு வரும்வரை தேவன் நமது வாழ்வில் குறுக்கிட மாட்டார். நாம் அவரிடம் சரணடைந்து அவர் பாதத்திற்கு வரும்வரை அவர் அமர்ந்திருப்பார்.

Tuesday 27 November 2012

அந்நிய நுகம்

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?. -                                                        (2 கொரிந்தியர் 6:14-15).

காலங்கள் மாறி கொண்டிருக்கின்றன. இளைஞர்கள் ஒரு கணவனை அல்லது மனைவியை தெரிந்தெடுப்பதில் தங்களுடைய சுய விருப்பத்தை நிறைவேற்றவே விரும்புகின்றனர். தங்களுடைய பூரண வளர்ச்சியடையாத பருவத்தில் அவர்கள் அழகை, வசீகரத்தை அல்லது செல்வத்தை தங்கள் வாழ்க்கை துணையிடம் எதிர்ப்பார்க்கின்றனர். ஒரு இளைஞன் தன் வாழ்க்கை துணையை தெரிந்தெடுக்கும்போது எவ்விதமான குணாதிசயங்களை எதிர்பார்க்க வேண்டும், பெற்றோரும் எவ்வித குணாதிசயங்களை மனதில் கொண்டு வரன் பார்க்க வேண்டும் என்பதையும் காண்போம்.

வாழ்க்கை துணை ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமென்ற எண்ணமே முதலும் எல்லாவற்றிற்கும் மேலானதுமாக இருக்க வேண்டும். ஒரு பெண் ஒரு மனிதனை பார்த்து அவரை வாழ்க்கை துணையாகக் தீர்மானிக்கும் முன் கீழ்கண்ட கேள்விகளை கேளுங்கள், இந்த மனிதன் ஒரு கிறிஸ்தவரல்ல என கருதுகிறேன். இவர் எவ்வித பழக்கங்களை கொண்டிருப்பார்? என் குடும்பத்திற்கு சமாதானத்தை கொண்டு வருவாரா? அல்லது சண்டையை கொண்டு வருவாரா? மது அருந்துவாரா? புகை பிடிப்பாரா? என்று தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அதை மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். எனக்கு தெரிந்த ஒரு கிறிஸ்தவ பெண், பார்க்க வந்த ஒவ்வொரு ஆணிடமும் கேள்விகள் கேட்டு, ஒவ்வொருவரையும் தள்ளி, இன்று 35 வயது வரை இன்னும் திருமணம் ஆகாமலேயே இருக்கிறாள்!

ஒரு கிறிஸ்தவனுக்கு தேவனே வாழ்வின் மையம், அடுத்ததாக வாழ்க்கை துணை. தேவனுக்கு எதிலும் இடம் கொடுக்காதவரானால் அது எப்பேர்ப்பட்ட மன வேறுபாடுகளையும் வேதனைகளையும் உருவாக்கும்! ஆகவே கிறிஸ்தவரல்லாத ஒருவரை நேசிக்க ஆரம்பிக்குமுன், உறவாட ஆரம்பிக்குமுன், கிறிஸ்தவ பெண்களும், ஆண்களும் சிந்தித்து, அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக என்ற வசனத்தை நினைவுகூர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்லி, பின்னர் வாழ்நாளெல்லாம் கண்ணீர் வடித்து கொண்டிருக்க வேண்டாம்!

எனது உறவின் பெண் வேறு மதத்தில் உள்ள வாலிபனை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தாள். அவனிடம் 'நீ கிறிஸ்தவனாக மாறினால், நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்' என கூறவே, அவனும் ஒத்து கொண்டு, ஞானஸ்நானம் எடுத்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்தான். திருமணம் முடிந்து, அந்த பெண் அந்த வாலிபனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தபோது, அந்த பையனின் பெற்றோர், 'எங்கள் சுவாமி கோயிலில் நீ திருமணம் செய்தே ஆக வேண்டும்' என்று சொல்லி, அவளை கோயிலுக்கு கூட்டி சென்று, அங்கு மந்திரங்களை ஓதி, அந்த பையன் அவளுடைய கழுத்தில் தாலி கட்டினான். ஒரு பிள்ளையும் பிறந்தது. அவர்கள் வீட்டில், அந்த பெண் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று வற்புறுத்தல். அவளால் முடியாது போகவே இப்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது கற்பனை கதையல்ல, உண்மை சம்பவம்!

ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்து அவளை வாழ்க்கை துணையாக்க தீர்மானிக்குமுன் கீழ்க்ணட கேள்விகளை கேளுங்கள். இந்த பெண் என்னுடைய பிள்ளைகளுக்கு தாயாகி, நாள் முழுவதும் அதிக நேரம் அவர்களோடிருப்பாள், ஆனால், கிறிஸ்துவை அறியாதவளாக இவள் இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய காரியங்களை குறித்து எப்படி கற்பிப்பாள்? மேலும் நான் அவளை கிறிஸ்துவுக்கு ஆதாயப்படுத்த முடியவில்லை என்றால் நித்திய ஜீவனுக்கேதுவான நம்பிக்கையில்லாத அவளுடைய வாழ்வையும், மரணத்தையும் பார்ப்பது மிகவும் வேதனை நிறைந்த காரியமாக இருக்குமே என சிந்தியுங்கள்.

கிறிஸ்தவர்களில் பத்தில் எட்டுபேர் கிறிஸ்தவரல்லாதோரை திருமணம் செய்து கடைசியில் தேவனையும் சபையையும் விட்டு விலகி போகின்றனர் என புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. என்னோடு படித்த ஒரு வாலிபன் கர்த்தருக்காக வைராக்கியமாக நின்றவன், கிறிஸ்தவரல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து, விசுவாசத்தை விட்டே விலகி போனான்! என்ன பரிதாபம்! அவனுக்காக கண்ணீர் விட்டு ஜெபிப்பதை தவிர என்ன செய்ய முடியும்?

பழையன ஒழிந்தன, எல்லாம் புதிதாயின

ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).


ஒரு ராஜ அரண்மனையில் ஒரு அறிவிப்பு செய்தார்கள். அதன்படி, ஒரு பெரிய விருந்து அரண்மனையில் ஆயத்தபடுத்தப்பட போவதாகவும், அரச உடை அணிந்திருப்பவர்கள் நாளை நடக்கும் அந்த விருந்தில் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை ஒரு பிச்சைக்காரன் கேள்விப்பட்டான். அவனுக்கு அந்த விருந்தில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை எழுந்தது. ஆனால் தான் உடுத்தியிருந்த அழுக்கான கந்தையான உடைகளை பார்த்ததும் அவனுக்கு துக்கம் வந்தது.

நல்ல அரச குடும்பத்தினர் மாத்திரமே அந்த விருந்தில் கலந்து கொள்ள முடியும் என்று அவன் நினைத்து, பெருமூச்சு விட்டவனுக்கு திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது. தான் அதை எப்படி நிறைவேற்றப்போகிறோம் என்று நினைத்தபடியே, அவன் அரண்மனையின் வாயிலுக்கு முன்பாக சென்று, அங்கிருந்த வாயிற்காப்போனிடம், தான் அரசனை காண விரும்புவதாக கூறினான். அந்த காவலன், சற்று நேரம் காத்திருக்கும்படி கூறி, உள்ளே சென்று திரும்ப வந்து, அவனை உள்ளே அனுமதித்தான்.

உள்ளே சென்ற பிச்சைக்காரனிடம், அரசர், 'நீ என்னை காண வேண்டும் என்றாயா'? என்று கேட்டார். அதற்கு அவன், 'ஆம் அரசே, நான் நீங்கள் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு அதற்கு அரச உடுப்பு இல்லை, உங்களுடைய பழைய உடுப்பு ஏதாவது இருந்தால் எனக்கு கொடுப்பீர்களா? நானும் விருந்தில் கலந்து கொள்வேன்' என்று தைரியமாக கேட்டான்.

அதை கேட்ட அரசர் புன்னகையுடன், 'நல்லது, என்னிடமே நீ கேட்டாயே' என்று கூறி, தம்முடைய இளைய குமாரனிடம், 'உன்னுடைய அறைக்கு கூட்டி சென்று உன்னுடைய உடைகளில் ஒன்றை இவனுக்கு கொடு' என்று கூறினார். அதன்படி, இளவரசன், தன்னுடைய உடைகளில் ஒன்றை எடுத்து கொடுத்து, பிச்சைகாரனை அணிவிக்க செய்தார். அதை அணிந்த பிச்சைகாரனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கண்ணாடிக்கு முன் நின்று, அதையே பார்த்து கொண்டிருந்த பிச்சைகாரனிடம் இளவரசர், 'நீ அணிந்திருக்கிற இந்த உடையுடன் நாளை விருந்தில் கலந்து கொள், வேறு உடை எதுவும் உனக்கு வேண்டாம், இந்த உடை நீ உயிருடன் இருக்கும்வரைக்கும் போதுமானது' என்று கூறினார்.

அதை கேட்ட பிச்சைகாரன் இளவரசரின் கால்களில் விழுந்து, நன்றி கூறி, திரும்ப செல்லும்போது, தன்னுடைய பழைய கந்தல் உடைகளை கண்டு, ஒரு வேளை இளவரசர் தன்னுடைய உடைகளை மீண்டும் கேட்டால்.. என்று நினைத்து, அந்த கந்தையை தன்னுடன் எடுத்து கொண்டு புறப்பட்டான்.

அடுத்த நாள் விருந்தில் கலந்து கொண்ட பிச்சைக்காரன், அவன் வாழ்வில் கண்டிராத அளவு மிகவும் அருமையான உணவு வகைகளையும், பழங்களையும், இனிப்புகளையும் கண்டான். ஆனால், அவன் அதை சந்தோஷமாய் அனுபவிக்க முடியவில்லை, ஏனென்றால் அவன் தன்னுடைய கந்தையை ஒரு துணியில் சுற்றி அதை தன் மடியில் வைத்து இருந்தான். உணவு வரும்போது, அதை எடுக்க முற்படும்போது, அவன் மடியில் இருந்த கந்தை கீழே விழுந்ததால், அவன் விதவிதமான உணவுவகைகளை ருசிக்க முடியாமற் போனது. இளவரசர் சொன்னது போல, அவர் கொடுத்த உடை எப்போதும் அவனுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அவனுக்கோ தன் கந்தையின் மேல் இன்னும் மோகம் இருந்தபடியால், அதை அவன் விடவே யில்லை. எங்கு அவன் சென்றாலும் அந்த கந்தையை தன்னுடன் கொண்டு சென்றான்.

அதனால் அவனை கண்ட மக்கள் அவனை 'கந்தைகளோடு உள்ள வயோதிபன்' என்று அழைக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் அவன் மரண படுக்கையில் இருந்தான். அவனை காண அரசர் வந்தார். அவரது முகத்தில் அவன் தன் அருகில் வைத்திருந்த கந்தையை கண்டபோது, சோகம் வந்தது. எத்தனை அருமையான உடை இருந்தும் தன் கந்தையை அவன் விடவே இல்லையே என்று சோகத்துடன் அவர் கடந்து சென்றார். அதை கண்ட அந்த பிச்சைக்காரன், இளவரசர் தன்னிடம், 'இந்த கந்தையை விடாதிருந்தால் தாம் கொடுத்த ராஜ உடையை இழக்க வேண்டியதாயிருக்கும்' என்று கூறினதை நினைவு கூர்ந்து, தான் செய்த தவறை நினைத்து அழுதான். ஆனால் அது மிகவும் காலம் கடந்ததாயிருந்தது.

நாமும் கூட அரச விருந்திற்கு அதாவது தேவனுடைய குடும்பத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றால், நம்முடைய அழுக்கான கந்தையாகிய பாவங்களை நம்மை விட்டு அகற்றி, தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்து கொடுக்கும், இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிந்திருக்க வேண்டும். இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிந்து கொண்ட பிறகு பழைய கந்தையான அழுக்கான பாவங்களை நிச்சயமாய் விட்டிருக்க வேண்டும். அதை நாம் தொடர்ந்து பிடித்து கொண்டு ருப்போமானால், நாம் நிச்சயமாக கர்த்தருடைய விருந்தில் கலந்து கொள்ள முடியாது. இரட்சிப்பின் வஸ்திரம் இருந்தால் தான் நாம் பரலோகம் செல்ல முடியும். 'ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின' என்ற வசனத்தின்படி, நாம் புதிதாக்கப்பட்டவர்களாக, நம்முடைய வாழ்க்கை புதியதாக மாற வேண்டும். பழைய பாவ பழக்க வழக்கங்கள் நம்மை விட்டு முற்றிலும் அகல வேண்டும். பாவங்களை முற்றிலும் அகற்றிவிட்டு, புதிதாய் பிறந்த குழந்தையை போல நாம் கர்த்தருக்குள் வளர தேவன் தாமே கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே - நான்
புதியன படைப்பானேன்
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, என்னுடைய பாவங்கள் அழுக்கான கந்தையை போல் இருக்கிறதே, இயேசுகிறிஸ்துவின் தூய இரத்தத்தால் கழுவி என்னை சுத்திகரிப்பீராக. என்னை கழுவி சுத்திகரித்து, பாவங்களை போக்குவதற்காய் உமக்கு நன்றி. இரட்சிப்பின் மெல்லிய வஸ்திரத்தை எனக்கு உடுத்துவிப்பதற்காக உமக்கு நன்றி. என்னுடைய பழைய பாவங்கள் எதையும் என்னுடன் கந்தையை போல கொண்டு வராதபடிக்கு, அவைகளை முற்றிலும் என்னை விட்டு அகற்றும். பரிசுத்தமாய் வாழ கிருபை செய்யும். எல்லாவற்றையும் புதியதாக மாறி, என்னை உம்முடைய சொந்த மகனாக, மகளாக ஏற்று கொண்ட கிருபைக்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Monday 19 November 2012

குணசாலியான ஸ்திரீ

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. - (நீதிமொழிகள் 31:10).


குணசாலியான ஸ்திரீ, இவள்தான் ஒவ்வொரு இள வாலிபனின் கனவு. எந்த ஒரு திட்டமும் தீட்டி அவன் அப்படிப்பட்ட பெண்ணை பெற முடியாது. ஆனால் அவன், தன் தேவனிடம் தன் கனவுகளையும், தன் எதிர்ப்பார்ப்புகளையும் ஒப்புக்கொடுத்து, அவருடைய நேரத்திற்காக காத்திருப்பானானால், நிச்சயமாக தேவன் அப்படிப்பட்ட பெண்ணை அவனுக்கு கொடுக்க வல்லமையுள்ளவராகவே இருக்கிறார். ஏவாளை ஏற்ற துணையாக ஆதாமுக்கு உருவாக்கி, அவளை அவனிடத்தில் கொண்டு வந்த தேவனல்லவா அவர்!

அப்படிப்பட்ட மனைவியை பெற்ற மனிதன், முதலாவது அறிந்து கொள்ள வேண்டும், அவளுடைய விலை முத்துக்களை பார்க்கிலும் உயர்ந்தது என்று. இப்போது உலகம் மூன்று WWW உடைய பெண்ணைத்தான் தேடி கொண்டிருக்கிறது. Working, White, Wisdom உடைய பெண்ணைத்தான் தங்கள் மகனுக்கு தேடி கொண்டிருக்கிறார்கள். பெண்ணின் அழகு, வேலை, படிப்பு, கலர், குடும்ப செல்வாக்கு, சொத்துக்கள் இவைதான் ஒரு பெண்ணை திருமணம் செய்ய உலகம் முதலாவது பார்க்கிறது. இவைகள் ஒரளவு முக்கியம் என்றாலும், தேவ பக்தியுள்ள பெண்ணோ இவைகள் எல்லாவற்றிலும் மேலானவள். அப்படிப்பட்ட பெண்ணை வாஞ்சிக்கும்போது நிச்சயமாக தேவ கிருபையும் ஆசீர்வாதமும் அங்கு இருக்கும். அவை உலகத்தின் எல்லா சம்பத்துக்களைவிட மிகவும் உயர்ந்தது. குணசாலியான பெண்ணின் விலை இந்த உலகத்தின் எல்லா செல்வத்திற்கும் மேலானது.

ஒரு மனிதன் தனக்கு அழகான பெண் வேண்டும் என்று தேடினால் நிச்சயமாக அவனுக்கு கிடைக்கும். ஆனால் அந்த அழகு என்றும் நிலைக்காது. சிலர் தங்களுக்கு ஒரு சில நடிகைகள் போன்ற அழகுள்ள மனைவி வேண்டும் என்று கனவு காண்பதுண்டு. அந்த அழகு வீண், மாiயானது என்று நினைப்பதில்லை. 'சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திர்Pயே புகழப்படுவாள்' (நீதிமொழிகள் 31:30) என்று வேதம் சொல்கிறது. அழகு நாளாக ஆக குறைய ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் இருந்த அழகு கடைசிவரை நிலைப்பதில்லை. ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயின் அழகு நாளாக நாளாக கர்த்தரின் அழகு அவளில் தெரிய, அவள் அழகாக விளங்க ஆரம்பிப்பாள்.

வேதத்தில் அப்படிப்பட்ட குணசாலியான ஸ்திரீ ஒருவள் இருந்தாள். அவள்தான் ரூத். 'இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாம் அறிவார்கள்' (ரூத் 3:11) அவள் குணசாலியானவள் என்று ஊராரெல்லாம் அறிந்திருந்தார்கள். அது எப்படிப்பட்ட ஆசீர்வாதம்! ஆகையால் அவள் புறஜாதியான மோவாபிய ஸ்திரீயாயிருந்தாலும் கிறிஸ்து அவளுடைய சந்ததியில் பிறந்தார்.

குணசாலியான ஸ்திரீ என்றால் என்ன? அவளுடைய எட்டு வகையான குணநலன்களை நீதிமொழிகள் 31ம் அதிகாரதிதிலிருந்து பார்ப்போம். அந்த எட்டு குணநலன்களையும் ரூத் கொண்டிருந்தார்கள்.

1. குணசாலியான ஸ்திரீ தன் குடும்பத்தின் நன்மைக்காக பாடுபடுவாள். தன் கணவனின் காரியங்களிலும், வீட்டின் காரியங்களிலும் கருத்துள்ளவளாயிருப்பாள். 'அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.அவள் உயிரோடிக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்' - (நீதிமொழிகள் 31:11-12).

2. குணசாலியான ஸ்திரீ தான் செய்யும் வேலையை சந்தோஷமாய் உற்சாகத்தோடே செய்வாள். (13ம் வசனம்)

3. குணசாலியான ஸ்திரீ தன் வேலையில் கவனமாய் ஞானமாய் செய்வாள் (நீதிமொழிகள் 14-24)

4. குணசாலியான ஸ்திரீ தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. (26ம் வசனம்). வீடு வீடாக ஏறி ஊர்க்கதைகளை பேசி கொண்டிருக்காமல், ஞானமாய் தன் வாயை திறந்து போதிக்கிறாள்.

5. குணசாலியான ஸ்திரீ கர்த்தருக்கு பயப்படுகிறவளாக, அவர் மேல் தன் நம்பிக்கையை வைக்கிறவளாக இருக்கிறாள் (வசனம் 30)

6. குணசாலியான ஸ்திரீ தன் உடையில் மிகவும் கவனமாயிருக்கிறாள். மற்றவர் குறை கூறாவண்ணம், சரியான முறையில் உடுத்தி, அலங்காலம் செய்கிறாள். (வசனம் 22,25)

7. குணசாலியான ஸ்திரீ தன் கணவனை தவிர மற்ற ஆண்களிடம் மிக கவனமாக பழகுவாள். அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. அவள்; புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான். (வசனம் 11:23) மோசமான நடத்தை உள்ள பெண்ணின் கணவன் நியாயஸ்தலங்களில் உட்கார முடியாது.

8. குணசாலியான ஸ்திரீ தன் குடும்பத்திற்கும், தன் பின்வரும் சந்ததிக்கும் எப்போதும் ஆசீர்வாதமாக இருப்பாள் (வசனம் 28-29)

ரூத்திற்கு இத்தனை குணநலன்களும் இருந்தபடியால்தான் அவள் குணசாலி என்ற பெயர் பெற்றாள். இந்த குணநலன்கள் இருந்தபடியால் அதை கவனித்த போவாஸ் அவளை மணந்து கொண்டார். இந்த காலத்து வாலிப பெண் பிள்ளைகள் இந்த குணங்களை கொண்டவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும். நமது குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகள் இந்த குண நலன்களை உடையவர்களாக இருக்கும்படியாக நாம் ஜெபிக்க வேண்டும். கணவனும், பிள்ளைகளும் உற்றார் உறவினரும், ஊராரும் பாராட்டும் குணசாலியான பெண்ணாக ஒவ்வொரு கிறிஸ்தவ பெண்ணும் இருக்க பிரயாசப்படவேண்டும்.

ஒய்யாரத்து சீயோனே நீயும்
மெய்யாகவே களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேசுக்குனின் கையை கூப்பி துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே – தினம் 
தந்தானை துதிப்போமே

ஜெபம்:
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, குணசாலியான ஸ்திரீயை கண்டுபிடிப்பவன் யார் என்று வசனம் கூறுகிறதே, அந்த குணசாலியான ஸ்திரீயாக ஒவ்வொரு கிறிஸ்தவ சகோதரியையும் மாற்றும்படியாக ஜெபிக்கிறோம் தகப்பனே. குணசாலியான ரூத்தின் சந்ததியை நீர் ஆசீர்வதித்தது போல ஒவ்வொரு குணசாலியான சகோதரிகளின் வாழ்வையும் ஆசீர்வதிப்பீராக. எங்கள் பெண்பிள்ளைகள் குணசாலியான ஸ்திரீகளாக வளர கிருபையையும் ஞானத்தையும் தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Wednesday 14 November 2012

கோலியாத்தை முறியடிப்போம்

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். - (ஏசாயா 54:17).

ஒரு விதவை தாய் தன் வீட்டிற்கு அருகாமையிலுள்ள சிறு பிள்ளைகளை கூட்டி வைத்து, ஒவவொரு நாள் மாலையிலும் ஆண்டவரை துதித்து பாடி, சிறு சிறு கதைகள், சம்பவங்கள் மூலம் வேதாகம செய்திகளை பிள்ளைகள் மனதில் பதிய செய்து, வறுமையின் மத்தியிலும் தன்னால் இயன்ற பண்டம் கொடுத்து அனுப்புவார்கள். அநேக பிள்ளைகளின் வாழ்வு மாற்றப்பட்டு வந்தது. பக்கத்து வீட்டுகாரருக்கு தினமும் கைளை தட்டி, அந்த பிள்ளைகள் பாடுவது எரிச்சலை உண்டாக்கியது. ஆகவே அந்த அம்மாவை விரட்ட ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஒரு மந்திரவாதியை வரவழைத்தான். குறிப்பிட்ட நேரத்திலே மந்திரவாதி அவர்களுக்கு விரோதமாய் மந்திரங்களை செய்து கொண்டிருந்தான். திடீரென்று மந்திரவாதியின் கைகளும், கால்களும் நடுங்கின. ' ஐயோ என்னை உடனே இப்போதே என் வீட்டிற்கு அனுப்பு, இல்லையென்றால் மரித்து விடுவேன்' என்று கதறினான். காரில் உடனே அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான் மந்திரவாதி. ஆம் தேவன் தெரிந்து கொண்டவர்களை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறவன் யார்? (ரோமர் 8:33) சர்வவல்லமையுள்ள தேவனை அடைக்கலமாக கொண்ட நாம் எந்த ஒரு மாந்திரீகத்திற்கும், பிசாசின் வல்லமைக்கும் கலங்க தேவையில்லை.

மாந்திரீகங்கள் மற்றும் பிசாசின் கிரியைகளை குறித்து வேதாகமம் போதிக்கும் காரியத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும். கிறிஸ்தவர்களில் ஒரு சாரார் பிசாசுகளே கிடையாது என்று கூறுவர். மாறாக மறறொரு சாரார் எல்லாவற்றிற்கும் பிசாசு என்று கூறி எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். இந்த இரண்டு எண்ண ஓட்டங்களுமே சரியானதல்ல.

வேதாகமத்தில் குறி சொல்லுவோர், மந்திரவாதத்தில் ஈடுபடுவோரை குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. உதாரணமாக பார்வோனுக்கு முன்பாக மோசேயின் கோல் பாம்பாக மாறியது போல பார்வோனின் மந்திரவாதிகளும் தங்கள் கோல்களை மாற்றினர். அதே போல் எகிப்தியர்களுக்கு மேல் வந்த பத்து வாதைகளில் முதல் இரண்டை எகிப்திய மந்திரவாதிகளும் செய்து காட்டினர். ஆம், பிசாசும் தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு வல்லமையையும், அற்புதம் செய்கிற வழியையும் கொடுக்கிறான். ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமைக்கு முன்பாக எந்த பிசாசின் வல்லமைகளும் ஒரு பொருட்டல்ல. எகிப்திய மந்திவாதிகள் பாம்பாக மாற்றிய கோலை மோசேயின் கோல் விழுங்கி போட்டது.

அதுபோல இரண்டு வாதைகளுக்கு மேல் எகிப்திய மந்திரவாதிகளால் செயல்படுத்தி காட்டமுடியவில்லை என்பதையும் வாசிக்கிறோம்.

பிரியமானவர்களே, மாந்திரீகமும் பில்லி சூனியங்களும் உண்மைதான். ஆனால் அவைகளை விட கோடி மடங்கு வல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னமும், பாதுகாப்பும் மிகமிக உண்மையாகும். எந்த ஒரு பிசாசின் கிரியைகளுக்கும் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இயேசுவின் நாமத்தினால் பிசாசுகளை துரத்த அதிகாரம் பெற்ற நாம் ஏன் பிசாசின் வல்லமைக்கு பயப்பட வேண்டும்? அந்தகார வல்லமைகளை தேவ பெலத்தினாலும், இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள இரத்தத்தினாலும், அவருடைய நாமத்தின் வல்லமையினாலும் நாம் தோற்கடிக்க வேண்டும். எல்லா நாமத்திற்கும் மேலான இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்கு பாதாளம் நடுநடுங்கும்! ஒரே ஓட்டமாக ஓடிப்போகும்! அந்த நாமத்தை தரித்து கொண்ட ஒவ்வொருவர் மேலும் பிசாசிற்கும், சாத்தானின் வல்லமைக்கும் எந்தவித அதிகாரமுமில்லை.

கிறிஸ்தவர்களில் சிலர் பயப்படுவார்கள், 'அவன் எனக்கு சூனியம் வைத்து விட்டான், மந்திரம் செய்து விட்டான்' என்று. உண்மையான கிறிஸ்தவனாக இருந்தால், அந்த சக்திகள் அவனுக்கு பயந்து ஓடும். செய்தவனையே தாக்கும். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது. கர்த்தரின் நாமமும், அவருடைய இரத்தமும் நம்மை பாதுகாக்கும் கோட்டைகளாகும். அதினாலே நாம் வெற்றி எடுத்து, சாத்தானின் கிரியைகளையும், அவனுடைய தந்திரங்களையும், வெல்வோமாக! ஆமென் அல்லேலூயா!

சர்ப்பங்களை மிதித்திடவும் பெரும்
தேள்களை நசுக்கிடவும்
அதிகாரம் உண்டு வல்லமை உண்டு
தோல்வி இல்லை வெற்றி எனக்கே என்றும்
தோல்வி இல்லை வெற்றி எனக்கே

அந்தகார வல்லமைகளை தேவ பெலத்தால் முறியடிப்பேன்
இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு
பயமில்லை வெற்றி எனக்கே – என்றும்
பயமில்லை வெற்றி எனக்கே

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எந்த அந்தகார சக்திகளின் வல்லமையும் எங்களை மேற்கொள்ளாது என்ற உமது கிருபை நிறைந்த வாக்குதத்தத்திற்காக உமக்கு நன்றி. எங்களுக்கு விரோதமாக எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் என்ற உம்முடைய வார்த்தைக்காக நன்றி. நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிற அதிகாரத்தின்படி நாங்கள் பிசாசுகளை துரத்தவும், சத்துருவின் எல்லா வல்லமைகளையும் மேற்கொள்ளவும், நீர் எங்களுக்கு பெலன் தருவதற்காக உமக்கு நன்றி. எங்கள் துதி ஸ்தோத்திரங்களை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Friday 12 October 2012

ஜெபமும் வேதமும்

மோசே தன் கையை ஏறேடுத்திருக்கையில் இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையை தாழவிடுகையில் அமலேக்கு மேற்கொண்டான். ( யாத் 17 : 11 )

இன்று எங்கு பார்த்தாலும் யுத்த செய்திகளையே அதிகமாகக் கேள்விப்படுகின்றோம். இந்த யுத்தத்தின் அடிப்படை நோக்கம் என்ன? அழிந்து போகும் மண்ணும் அநித்தியமான உரிமைகளும்தானே. ஆனால் ஒரு விசுவாசியின் யுத்தமும், யுத்தமுறைமைகளும் இவ்வுல யுத்தங்களைவிட முற்றிலும் வேறான ஒன்றாகும். ஏனனில் முதலாவது நமது யுத்தத்தை நடத்துவது நாமல்ல;  சேனைகளின் கர்த்தர். உலக யுத்தங்களின் கிடைக்கும் வெற்றியோ அநித்தியமானது. மாறக்கூடியது. ஆனால் ஒரு விசுவாசியின் வெற்றியோ நித்தியமானது. நிரந்தரமானது.

அமிலேக்கியர் யுத்தத்திற்கு வந்தபோது, பட்டயத்தை கொடுத்து யோசுவாவை யுத்தத்திற்கு அனுப்பிவிட்டு, பதட்டமின்றி தேவனுடைய கோலுடன் மலையுச்சிக்கு ஏறிய மோசே, யுத்தத்தை நோக்காமல் தன் கைகளையுயர்த்தி, கண்களை ஏறேடுத்;து தேவனை நோக்கி பார்த்தார். மோசேயின் கைகள் உயர்ந்திருக்கும் போது இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையை தாழவிடுகையில் அமலேக்கு மேற்கொண்டான். இதனால் சூரியன் அஸ்தமிக்கும் வரை மோசேயின் கரங்கள் வானத்தை நோக்கியபடியே இருந்தது.

ஆவிக்குரிய யுத்தத்திலே எதிரியான மாம்சத்தையும், பிசாசையும் ஜெயிக்கவேண்டுமாயின் நமது கரங்கள் பரத்தை நோக்கி உயர்ந்திருத்தல் மிகவும் அவசியம். ஒரு விசுவாசிக்கு தேவையானது முழங்காலின் ஜெபம் ஒன்றே! ஜெபம் ஜீவியம் குறைவுபடும்போது நமது விசுவாசமும் தளர்ந்து விடும். விசுவாசியை! தினம்தோறும் அதிகாலையில் தேவனின் திவ்ய பிரசன்னத்தையே நாடி ஒட உன்னை அப்பியாசப்படுத்திக்கொள். பரிசுத்தாவியானவரின் பெலத்தினால் இடைக்கட்டப்படுவாயாயின், உலக மயக்கமும் மாம்ச இச்சையும் உன்னை எதுவும் செய்துவிட முடியாது.  சூரியன் அஸ்தமிக்கும் வரை அதாவது உனது வாழ்நாள் முடியும்வரை உன் இருதயம் எப்பொழும் தேவனை நோக்கி மேலே உயர்ந்திருக்கட்டும். முழங்காலின் பெலனை அறியாதவன் யுத்தத்தில் வெற்றி பெறவே முடியாது.

யுத்தத்திற்க்காக எம் கரங்களில் கொடுக்கப்பட்ட பட்டயக்கரு தேவனின் வேதவசனங்களே. இது ரோம போர்வீரனின் கையிலுள்ள இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கூர்மையானது. இப்பட்டயம் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கும் போது மாம்சம் பெலன் குறைந்து தோற்றுவிடும் என்பதில் சந்தேகமேமில்லை ஆகவே முழங்காலின் ஜெபத்திலும் வேதவனங்களிலும் உறுதியாக தரித்திருப்போமாக! ஜெயம் நமக்கே!

“பிதாவே, ஜெபத்திலும் உமது வசனத்திலும் என்றென்றும் நிலைத்து நின்று ஆவிக்குரிய வாழ்வில் வெற்றி பெற எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.” 

Wednesday 10 October 2012

முறுமுறுப்பு

ப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து என்னத்தை குடிப்போம் என்றார்கள்

மிகப்பெரிய வெற்றியைக் கண்டதும் ஆர்ப்பரித்து துதித்துப்பாடிய அதே ஜனங்கள் மூன்று நாட்;களுக்குள் ஒரு சிறு கசப்பைக் கண்டதும் முறுமுறுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏத்தனை பரிதாபமான நிலைமை இது துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படலாமா? ஓரே ஊற்றிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்கக்கூடுமோ? இயேசு கிறிஸ்துவிற்கு விரோதமாக பரிசேயர் சதுசேயர் வேதபாரகர் மாத்திரமா முறுமுறுத்தார்கள்? அவரது உபதேசம் கடினமானது என்று ஜனங்களும் சிஷர்களுங்கூட அவருக்கெதிராக முறுமுறுத்ததை வாசிக்க காண்கிறோமே ( 6 : 60 )
எமது நாவு முறுமுறுப்பதற்கு காரணம் பலவீதமான பலவீனங்களே ஆகும் 
  1. தேவனில் நம்பிக்கை அற்ற நிலைமை
  2. சுயவிருப்பு
  3. தற்பெருமை
  4. விசுவாசத்தில் முதிர்ச்சியற்ற தன்மை
  5. சுயபரிதாபம்
இப்படி பல காரணங்களை கூறலாம். இவர்கள் முறுமுறுக்கிறவர்களும் முறையிடுகிறவர்களும் தங்கள் இச்சைகளின் படி நடக்கிறவர்களுமாய் இருக்கிறார்களே ( யூதா 16 ) என்று நம்மை பார்த்து கர்த்தர் கூறுவாராயின் நாம் என்ன பதிலை சொல்லக்கூடும்?

மோசேக்கும்கூட தண்ணீர் தாகம் வந்தது. அவரோ முறுமுறுப்பை விட்டு கர்த்தரை நோக்கி கூப்பிட்டார். கர்த்தர் அவர் சத்தத்தை கேட்டு ஒரு மரத்தைக் காண்பித்தார். ஆதை தண்ணீரில் போட்டபோது அது மதுரமான நீரானது, தாகமும் தீர்ந்தது.

தேவபிள்ளையே சிறு சிறு கசப்புக்களையும் தடைகளையும் பார்த்து விசுவாசத்தை கெடுத்தக்கொள்ளாதே! முறுமுறுத்து சாபத்தை தேடிக்கொள்ளாதே! துன் கண்களை ஏறேடுத்துக் கூப்பிடும் ஒவ்வொருவருக்கும் சிலுவையின் உதவிகள் கிடைக்கும் அது சாவை வென்ற மரம். முறுமுறுக்கும் உன் நாவை அடக்கிபோட்டு, அந்த மரத்ததை உன் தோழின் மேல் வை தூய ஆவியானவரின் முழுமையான ஆளுகைக்குள் உன்னை அர்ப்பணித்து விடு. இனிமேல் உன் நாவும் இருதயமும் துதியினால் நிறைந்திருக்கட்டும்

“ என் அருமை பிதாவே, சிறு சிறு காரியங்களுக்கெல்லாம் முறுமுறுத்த என்னை மன்னித்துää என் நாவை துதியினால் நிரப்பிவிடும்…….. ஆமென்.

Monday 1 October 2012

ஜெயமுள்ள வாழ்க்கை


நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, வேண்டிக்கொள்ளுகிறேன். - (எபேசியர் 3:17-19).

ஒரு முறை பிரசங்கியார் D.L.Moody அவர்கள் தன்னுடைய பிரசங்கத்தில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் காட்டி, அதனில் உள்ள காற்றை எப்படி எடுப்பது என்றுக் கேட்டார். ஓவ்வொருவரும் ஒரு பதிலைக் கூறினார்கள். “ஒருவர் சொன்னார், ஒரு குழாயை வைத்து அதை உறிஞ்சி எடுத்துவிடுங்கள் ” என்றுக் கூறினார். அப்படி எடுத்தால் அங்கு வெற்றிடம் (Vaccum) உருவாகும். அதினால் கண்ணாடி உடைந்து விடும் என்று மூடி கூறினார். இன்னும் அநேகர் வெவ்வேறு கருத்துக்களைச் சொன்னார்கள். அப்போது அவர் ஒரு பாத்திரத்திலிருந்து தண்ணீரை எடுத்து அந்த டம்ளரில் நிறைய ஊற்றி, “இப்போது இதில் கொஞ்சம்கூட காற்று இல்லை. தண்ணீரை ஊற்றியவுடன் காற்று எடுக்கப்பட்டு விட்டது” என்றார்.

அவர் இந்த சிறிய உதாரணத்தின் மூலம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வது எப்படி என்றுக் காட்டினார். பாவத்தை அங்கும் இங்கும் உறிஞ்சி எடுப்பதால் அது போய் விடாது என்றும், நாம் பாவமில்லாத வாழ்க்கை வாழ்வதற்கு பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய இருதயம் நிரப்பப்பட வேண்டும் என்றும் விளக்கினார். பின்னும் அவர், ‘நம்முடைய இருதயத்திலிருந்து பெருமையும் சுயநலமும் மற்றும் பாவமான காரியங்களும்; விலகும்போது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய முழு இருதயத்தையும் நிரப்புவார்’, ஆனால் நம் இருதயம் அப்பாவங்களினால் நிறைந்திருந்தால் பரிசுத்த ஆவியானவருக்கு அங்கு இடமில்லை என்றுக் கூறினார். நம்முடைய இருதயம் உலக காரியங்களுக்கு வெறுமையாக்கப்படாலொழிய ஆவியானவர் அதை நிரப்ப முடியாது என்றும் கூறினார்.

அதுப் போல நாம் நம்மையே வெறுமையாக்கி ஆவியானவரை நம் இருதயத்திற்குள் அழைப்போம். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். அவர் வந்து நம் இருதயத்திற்குள் வாழும் போது எந்த பாவமும் நம்மை நெருங்காது. கர்த்தர் நம்மைக் கொண்டு பெரிய காரியங்களை செய்வார். மட்டுமல்ல சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துவார்; - யோவான் - 16:13.

ஒவ்வொரு நாளும் அவருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்து நாம் வாழும்போது அவர் நம்முடைய வாழ்வை பொறுப்பெடுத்துக் கொள்வார்.

சிலர் பரிசுத்த ஆவியை அளவில்லாமல் நான் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு பிரசங்கிமாரிடம் போய் நிற்கிறார்கள். நீங்கள் உங்களை எவ்வளவு வெறுமையாக்குகிறீர்களோ அந்த அளவு அவர் உங்களை நிரப்புவார். எந்த பிரசங்கிமாரும் கடவுள் அல்ல உங்களுக்கு பரிசுத்த ஆவியை அதிகமாய் கொடுப்பதற்கும், மற்றவர்களுக்கு குறைவாக கொடுப்பதற்கும்.

Thursday 27 September 2012

எஜமானருடைய தொடுதல் (the touch of the Master’s Hand)

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. - சங்கீதம் 118:22-23.

ஒரு இடத்தில், ஏலம் விடுபவர் ஒரு பழைய வயலினை (Violin) எடுத்து, ஏலம் விட ஆரம்பித்தார். அந்த வயலின் மிகவும் பழையதாக, தூசி படிந்ததாக, அதனுடைய நரம்புகள் (Strings) எல்லாம் தொய்ந்துப் போனதாக, அநேக நாட்களாக உபயோகிக்கப்படாததாக இருந்தது.

ஏலம் விடுபவர் நினைத்தார், இதைப் போய் நான் ஏலம் விடுகிறேனே, யார் வாங்கப் போகிறார்கள்? என் நேரம் இதற்காக வீணாகப் போவதுதான் மிச்சம் என்று நினைத்தவராக, அதை ஏலம் விடுவதற்க்கு, ஒரு டாலர், இரண்டு டாலர் என்று ஆரம்பித்தார். ஓருவர் மூன்று
டாலர் என்றுக் கூறவும், மூன்று டாலர் ஒரு தரம், மூன்று டாலர் இரண்டு தரம், மூன்று டாலர் மூன்று தரம் என்று கூறி முடிப்பதற்குள், ஒரு சத்தம், ‘பொறுங்கள்’ என்றுக் கேட்டது. ஒரு உயரமான மனிதர், முன்பாக வந்துக் கொண்டிருந்தார், அவர் வந்து, அந்த வயலினைக்
(Violin) கையில் எடுத்து, அதைத் துடைத்து, தொய்ந்துப் போயிருந்த அதன் நரம்புகளை (Strings) சரியாக டியூன் பண்ணி, அதை மெருகேற்றினார். இப்போது அந்த
வயலின் (Violin) புதுப் பொலிவோடு ஜொலித்தது. அதிலே அழகான ஒருப் பாடலை இசைக்க ஆரம்பித்தார்.

பாடல் நின்றவுடன், ஏலம் விடுபவர், மெதுவான சத்தத்தில், அந்த வயலினின் (Violin) அருமையை உணர்ந்தவராக, இப்போது, இந்த வயலின் (Violin) 1000 டாலர் ஒரு தரம் என்று கூற ஆரம்பித்தார். ஒருவர் 2000 என்றுக் கூற, இன்னொருவர், 3000 என்று போட்டியிட ஆரம்பித்தனர். கடைசியாக 4000த்தில் அதன் ஏலம் முடிந்தது. கூடியிருந்த மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ‘2 டாலருக்குப் விலைப் போன அந்த வயலின் இப்போது 4000 டாலருக்கு எப்படி போயிற்று’ என்று அந்த ஏலம் விடுபவரை கேட்டபோது அவர் சொன்னார், ‘அதுதான் எஜமானனுடைய கைகளின் தொடுதல்’, (the touch of the Master’s Hand) என்று.

அன்பானவர்களே, ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம், ‘என்னால் என்ன பிரயோஜனம்?’ பாவத்திலும், துன்பத்திலும் அடிபட்டு, பொலிவிழந்து இருக்கிற என்னால் என்ன பிரயோஜனம்? என்று நினைக்கிறீர்களா? எஜமானர் உங்களை தொடும்போது நீங்கள் ஜொலிக்க ஆரம்பிப்பீர்கள். உங்களுக்கு தெரியுமா? ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.  உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய்  எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். - (1கொரிந்தியர் 1:27-28).

சமீபத்தில் ஒரு அருமையான ஊழியர் எங்கள் சபைக்கு வந்திருந்தார். அவர் இந்துக் குடும்பத்தை சேர்ந்தவராக, ஏழு தலைமுறையாக மந்திரவாதத்தில் ஈடுபட்டு, தன்  குடும்பத்தில் அநேகர் பைத்தியங்களாக திரிந்து, வாழ்க்கையில் சந்தோஷத்தைக் காணாதவராக,  அவருக்கு பிறந்த ஆறு குழந்தைகள் அடுத்தடுத்து, மரித்துப் போய் அவரும் அவருடைய மனைவியும் தற்கொலைதான் முடிவு என்று முடிவுசெய்து அதற்கு ஆயத்தம் செய்தபோது, கர்த்தர் “மகனே” என்று அவரை அழைத்து, தம்மை வெளிப்படுத்தி, அவரை தமது  கனமான ஊழியத்திற்கு தெரிந்துக் கொண்டார். அவர் செய்த ஒவ்வொரு பிரசங்கங்களும் முத்தானவை. வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு
ஆச்சரியமாயிருக்கிறது. - சங்கீதம் 118:22-23).

ஆம் பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஒரு பயங்கர
மந்திரவாதியை கர்த்தர் எடுத்து, அவருக்கென்று உபயோகிக்க கூடுமானால் உங்களை உபயோகிப்பது அவருக்கு லேசான காரியம்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முத்துக்கள் என்பது கர்த்தருக்குத் தெரியும். லேகியோன் பிசாசு பிடித்திருந்த ஒருவனுக்காக  இயேசுகிறிஸ்து கலிலேயாவைக் கடந்து, கதரேனருடைய நாட்டிற்கு வந்து, அவனை சுகப்படுத்தி, அவனை கிறிஸ்துவின் அற்புதங்களை சொல்லும் ஊழியக்காரனாக மாற்றினார், அவர் ஒரு ஆத்துமாவிற்காக கரிசனையுள்ள தேவன். நான் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லதவன், என்னால் கர்த்தருக்கு என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? அந்த லேகியோன் பிசாசு  பிடித்திருந்த ஒருவனால் ஒரு பட்டணத்தை ஆதாயப்படுத்த முடியுமானால் (லூக்கா 8:39-40) எல்லா ஞானத்தோடும் உங்களை உருவாக்கின கர்த்தருக்கு உங்களால் எதையும் செய்ய முடியும். 

இயேசுகிறிஸ்துவுடன் உரையாடிய சமாரிய ஸ்திரீ வேறு ஒன்றும் செய்யவில்லை. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி; நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள் (யோவான் 4:28,29,39). அவள் போய் மற்றவர்களுக்கு ‘வந்துப் பாருங்கள்’ என்று மட்டுமே கூறினாள். அதைப் போல உங்கள் சபைக்கு மற்றவர்களை வந்துப் பாருங்கள் என்று நீங்கள் அழைக்கலாம். அவர்கள் வந்து, ஜீவனுள்ள தேவனை  அவர்களே அறிந்துக் கொள்வார்கள்.

Wednesday 26 September 2012

பொறுமையோடு காத்திருக்கும் தந்தை


எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். - 1 பேதுரு.4:7.

அந்த ஹோட்டலில் இரண்டாவது முறையாக சர்வர் அந்த மனிதரிடம் வந்து ‘ஐயா ஏதாவது வேண்டுமா?’ என்றுக் கேட்டான். அவர் வந்து அரை மணி நேரம் ஆகிறது. அவரோ, ‘இல்லை இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கிறேன். அவள் வந்து விடுவாள்’ என்றார். 

அந்த மனிதர் பார்க்க அழகாக நல்ல உடை உடுத்தி இருந்தார். யாரையும் ஈர்த்திழுக்கும் தோற்றம்.  அவளுக்காக அவர் காத்திருந்தார்;  தனிமையாக அமர்ந்திருந்து பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னும் அரை மணிநேரம் கழித்து, சர்வர் திரும்பவும் வந்து,  ‘ஐயா காப்பியாவது கொண்டு வரட்டுமா?’ என்றுக் கேட்டான். அவரும் ‘சரி’ என்றார். அவன் காபி கொண்டுவந்து கொடுத்து விட்டு, ‘ஐயா உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் ஒன்று கேட்கட்டுமா?’ என்றுக் கேட்டான். அதற்கு அவர் கேள் என்றார். ‘ஐயா நீங்கள் இன்று 3 ஆவது நாளாக அந்தப் பெண்ணிற்காக காத்திருக்கிறீர்கள். அவளோ வரவேயில்லையே,  ஏன் அவளுக்காக காத்திருக்க வேண்டும்?  நீங்கள் மற்ற வேலைகளை கவனிக்கலாமே’ என்றான்.  அதற்கு அவர்‘அவள் சொன்னாள் நான் வருவேன் என்று,  அதோடு அவளுக்கு நான் தேவை’ என்றார். ‘ஐயா அவளுக்கு நீங்கள் தேவை என்றால் இன்று மூன்றாவது நாளாக உங்களை காக்க வைக்கமாட்டாளே’ என்றான். ‘அவள் சொன்னாள், தான் இன்று வருவதாக நான் அவளை அதிகமாய் நேசிப்பதால் அவளுக்காக காத்திருக்கிறேன்’ என்றார். அந்த சர்வர், இந்த மனிதனுக்கு பைத்தியம் ஏதாவது பிடித்திருக்குமா? என்று யோசித்துப் பார்த்து,  இல்லை ஆளைப் பார்த்தால் நன்றாக இருக்கிறார், என்னவோ நமக்கு என்ன என்று போய் மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தான். நேரம் கடந்துக் கொண்டே இருந்தது. அவளோ வரவேயில்லை. அவளது சத்தத்தைக் கேட்க வேண்டும்,  அவளோடு எத்தனையோ காரியங்களை பகிர்ந்துக கொள்ள வேண்டும் என்று அவர் பொறுமையோடு காததிருந்தார். ஹோட்டலை மூடும் நேரம் வந்தபோது அந்த சர்வர் மீண்டும் வந்து, ‘ஐயா உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?  என்றுக் கேட்டான்.’ அதற்கு அவர், ‘இன்று அவ்வளவுதான், நான் புறப்படுகிறேன்’ என்று விரக்தியுடன்  சொல்லிவிட்டு, கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து விட்டு, புறப்படும்போது அங்கு இருந்த கிளர்க்கிடம்,  நாளை சரியாக 6 மணிக்கு இரண்டு பேருக்கு டேபிளை புக் பண்ணி விடுங்கள் என்றுச் சொல்லி விட்டு தனது ஏமாற்றத்தை மறைக்க மெல்லியதாக புன்னகைத்து விட்டுச் சென்றார். 

அவர் வெளியே போகும்போது யாருக்காக அவர் அத்தனை நேரம் காத்திருந்தாரோ, அவள் தனது படுக்கைக்கு சென்றாள். அன்று சாயங்காலம் முழுவதும் தன் தோழிகளோடு வெளியே சென்றிருந்ததால் அவளுக்கு ஒரே களைப்பு. அடுத்த நாள் அலாரம் வைக்க தனது கடிகாரத்தை பார்த்தபோது அதன் கீழ் ஒரு தாளில் இன்று ஆறு மணிக்கு ஜெபிக்க வருவதாக எழுதி வைத்திருந்தாள். ஐயோ மறந்துப் போய்விட்டோமே! என்ற ஒரு சிறிய வருத்தம் மனதில் தோன்றியது.  அதை புறம்பே தள்ளிவிட்டு நாளை பார்த்துக் கொள்ளலாம், இயேசுகிறிஸ்து மன்னித்து விடுவார்  என்று எண்ணியபடி படுக்கச் சென்று விட்டாள். 

இன்று நம்மில் அநேகர் ‘அப்பா எனக்கு இதைச் செயயும், நான் தினமும் ஜெபிப்பேன்’ என்று வாக்கு  பண்ணுகிறோம் ஆனால் காரியம் நடந்த பிறகு அதை மறந்துப் போகிறோம். கர்த்தர் மன்னித்து  விடுவார் என்கிற குருட்டு நம்பிக்கை. ஆனால் அவர் காத்திருக்கிறார் என்பதை மறந்து போய்  விடுகிறோம். இன்று எத்தனை குடும்பங்களில் குடும்ப ஜெபம் வைப்பதில்லை. தேவனிடம் நாம்  பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு குடும்பமாக ஒரு நன்றி தெரிவிக்கக்கூட நாம் ஜெபிப்பதில்லை.  குடும்ப ஜெபம் இல்லாத வீடு, கூரை இல்லாத வீடு என்று என் பெற்றோர் சொல்லியிருக்கிறார்கள்.  கூரை இல்லாத வீடு எல்லா மழைக்கும் காற்றுக்கும் தூசிக்கும் திறந்திருக்கிற மாதிரி எல்லா 
கஷ்டங்களுக்கும் பிசாசின் கிரியைகளுக்கும் திறந்துக் கொடுக்கிற மாதிரியாகும்.  அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்;அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று என்று கர்த்தரிடம் முறையிட்டான். அப்படியானால் நம் குடும்பத்தைச் சுற்றி 
Related Posts Plugin for WordPress, Blogger...