கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்
ஒரு மனிதன் கவிதைப்புத்தகம் ஒன்றை வாங்கி அதைப் படிக்க ஆரம்பித்தான். அதன் முதல் பக்கத்தை மாத்திரம் வாசித்து விட்டு அது சுவையாக ரசனையாக இல்லை என ஓரமாக எறிந்துவிட்டான். சில மாதங்கள் கழித்து அவன் ஒரு பெண்ணை சந்தித்தான். அவளோடு பேசிப்பழகினான். அவளை நேசித்தான். இறுதியில் அவளை திருமணம் முடிக்க விரும்பினான். அப்பொழுது அவள் கவிதை எழுதுகிறவள் என்பதை அறிந்து கொண்டான். முன்பு சுவையும் ரசனையும் அற்ற கவிதை என்று துக்கி எறிந்த அந்த கவிதைகளை எழுதியது அவளே என்பதை அறிந்து உடனே அந்த கவிதைப் புத்தகத்தை தேடி எடுத்து அதை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தான். இப்பொழுது அதன் ஒவ்வொரு வரிகளும் அவனுக்கு தேனைப்போல இனித்தன ஒவ்வொரு கவிதைக்குள்ளும் பொதிந்திருந்த ஆழமான அர்த்தங்களை ரசித்துப்படிக்க ஆரம்பித்தான். புத்தகத்தை கிழே வைக்க மனமில்லாமல் இரவும் பகலும் பலமுறை அதை திரும்ப திரும்ப வாசிக்க ஆரம்பித்தான். எந்த புத்தகம் சுவையும் ரசனையற்றதாக இருந்ததோ அந்தப் புத்தகமே இப்பொழுது அவனுக்கு இன்மையான புத்தகமாக மாறியது. அதன் இரகசியம் அவன் அப்புத்தகத்தை அல்ல அதை எழுதியவரை நேசிக்க ஆரம்பித்ததுதான்.
அன்பான நண்பர்களே நாம் ஒரு உண்மையை புரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நாம் கர்த்தரை முழுமனதோடு நேசித்தால் மாத்திரமே நம்மால் அவருடைய வார்த்தையையும் நேசிக்கமுடியும். நாம் கர்த்தரை உண்மையாய் நேசிக்காதவரை அவருடைய வார்த்தையையும் நேசிக்க முடியாது. இன்றைக்கு தினசரி பத்திரிகைகள் வார மஞ்சரிகைகள் கதைப்புத்தகங்கள் தொலைகாட்சி தொடர் நாடகங்கள் என பொழுது போக்கு சாதனங்கள் பெருகிவிட்டன. இவற்றின் மத்தியில் கர்த்தருடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதத்தில் பிரியமாயிருந்து அதை தியானிப்பது தேவனுடைய மக்களுக்கு மிகப்பெரிய சாவாலாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் அசுத்தமும் பாவமும் பெருகி வாழ்க்கையின் உண்மையான மதிப்பீடுகள் அழிந்து வருகின்றன. இந்த சமுதாயத்தில் நம்முடைய வாழ்க்கையும் நம்முடைய குடும்பத்தையும் கறைபடாமல் கர்த்தருக்குள் காத்துக்கொள்ள வேண்டுமானால் தெவனுடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுக்கவும் அதன்படி வாழவும் நாம் தீர்மானிக்க வேண்டும். அப்படிப்பட்ட குடும்பங்களே உண்மையில் கர்த்தரின் பார்வையில் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பங்களாக காணப்படும்.
ஜெபம் :---- உம்முடைய வேதத்தில் நேசித்து அதைத் தியானித்து அதைக் கைக்கொண்டு வாழவும் இந்தப் பாவ உலகின் இழுப்புகளால் கறைபடாமல் என்னைக் காத்துக்கொள்ளவும் உமது கிருபையை தாரும். ஆமென்.
No comments:
Post a Comment