ஆகையால் அவ்விடம் இந்நாள் வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும் ( யோசுவா 7:26)
எரிகோ மதில் விழுந்ததைக் குறித்து அநேக பாடல்களைப் பாடுகின்ற நாம் அதே வெற்றிக்கு பின் பெரியதொரு தோல்வி இருந்ததை சிந்திப்பதில்லை. எரிகோவிற்கு அடுத்த சிறிய பட்டணமாகிய ஆயி இல் இஸ்ரவேலர் கண்டதான படுதோல்விக்கு எரிகோ விடயத்தில் ஆகான் செய்த பாவமே காரணமாயிற்று. ஆகவே ஆகானுக்கும் அவன் முழுக்குடும்பத்திற்கும் ஆடு மாடுகளுக்கும் கொடுக்கப்பட்ட தண்டனை தேவன் பாவத்தை எவ்வளவாய் வெறுக்கின்றார் என்பதற்கு அடையாளமாக ஒரு கற்குவியலாக குவிக்கப்பட்டு அந்த இடம் “ஆகோர் பள்ளத்தாக்கு” என்ற பெயரும் இடப்பட்டது. அது இஸ்ரவேலருக்கு எப்போதும் ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது.தேவன் இன்றும் நமக்கு எத்தனை எச்சரிப்புக்களின் அடையாளங்களை வைத்திருக்கின்றார். ஜேர்மன் தேசத்தில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பல அடையாளச் சின்னங்கள் இன்றும் உண்டு. மாண்டுபோன யூதருக்காக எழுப்பப்பட்ட ஏறத்தாழ 2168 நினைவு கற்தூண்கள் நெதர்லாந்து தேசத்திலே அதே யுத்தத்தில் மாண்டு போன அமெரிக்க போர் வீரருக்கான ஒரு பரந்த கல்லறைத் தோட்டம் கிழக்கு மேற்கு ஜேர்மனியைப் பிரித்துப் போடும்படி ஒரே இரவில் கட்டி எழுப்பப்பட்ட பிரமாண்டமான மதிற்சுவர் இருந்த இடம் அதினாலே பாதிக்கப்பட்டவர்கள் எல்லையைத் தாண்ட முற்பட்டு முற்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் நினைவுகள் மொத்ததில் இரத்த ஆறு ஓடிய இடங்கள் என்று ஏராளமான நினைவுச் சின்னங்கள் இவற்றை இன்று ஒரு புதினமாக பார்க்கும் உல்லாசப் பயணிகளோ ஏராளம்! ஆனால் இவை நமக்கு எச்சரிப்பாக இருக்கின்றன. நாமும் மனந்திரும்பாமற் போனால் நமக்கும் இதுதான் நடக்கும் என்று மனதிலே எச்சரிப்புப் பெறுகிறவர்கள் எத்தனைபேர்!
அன்பு நண்பர்களே இன்று நம் மத்தியிலும் பேரழிவின் பல நினைவுச் சின்னங்கள் உண்டு. சுனாமிப் பேரழிவை நாம் மறந்தது ஏன் கடந்தகாலங்களில் நடந்த யுத்த நினைவுகள் மாத்திரமல்ல சமீபத்தில் நாட்டில் நடந்த யுத்த பேரழிவுகள் அந்தந்த நேரத்தில் மாத்திரம் ஜயோ என்று சொல்லவைத்த விட்டால் போதுமா? கடவுள் எங்கே என்று கேள்வி கேட்பதும் தகுமா? நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள்’ என்று ஆண்டவர் சொன்ன வார்ததையை நினைவுகூர்ந்து நம் வாழ்வை இன்னும் சரிப்படுத்தவில்லையானால் அதன் விளைவை நாமும் சந்தேகிக்க நேர்ந்திடும். அதன் பின்னர் துக்கப்படுவதில் பலனில்லை. நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் ஞாபக சின்னங்கள் நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்.
ஜெபம் : “ பிதாவே நீர் எச்சரிப்பு தராமல் தண்டிக்கும் அநீதியுள்ள தேவனல்ல. அதை உணர்ந்து நான் கீழ்ப்படிந்து நடக்க அடியேனை நடத்தியருளும். ஆமென்”
No comments:
Post a Comment