கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Saturday 25 August 2012

இயேசுவே, கிருபாசனப்பதியே

இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,ஏசுவே, கிருபாசனப்பதியே.

1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவுகண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்துநித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி,

…….எபிரேயர் 4:16 அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த அருமையான இந்த பாடலை எழுதிய ஜான் பால்மர் 1812-ம் ஆண்டு மயிலாடியில் பிறந்தார். தன் வாழ்வின் ஆரம்ப நாட்களிலேயே ஆண்டவரைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டு, நாகர்கோவில் பகுதியில் மிஷனரிகளுடன் சேர்ந்து, உற்சாகமாக நற்செய்திப் பணியாற்றினார். பால்மர் பல பாடல்களை எழுதிய சிறந்த கவிஞராவார். அவர் ஆண்டவரின் வாழ்க்கைச் சரித்திரத்தை அழகாகச் சித்தரிக்கும் “கிறிஸ்தாயணம்,” என்ற காவியத்தை உருவாக்கியிருக்கிறார்.

பால்மர் திருவனந்தபுரத்தில் அரசு அச்சகத்தில் பணியாற்றி வந்தார். நாதஸ்வர இசையைக் கேட்டு ரசிப்பது, அவருக்கு விருப்பமான பொழுது போக்காகும். எனவே, அவர் கேட்கும் இசையின் ராகத்தில் லயித்து, பரவசமாகப் பாடல்களை எழுதிவிடுவார்.

அந்நாட்களில், பொது இடங்களில் நாதஸ்வர இசைக்கச்சேரிகள் நடத்தப்படுவதில்லை. திருவனந்தபுரத்தின் புகழ்பெற்ற பத்மனாப சுவாமி கோவிலில், தினந்தோறும், அதிகாலைப் பூசை வேளையில், நாதஸ்வர இசை வாசிக்கப்படும். ஆனால், அக்கோவிலில் கிறிஸ்தவர் எவரும் நுழைந்தால், அவர்களுக்கு மரண தண்டனை உண்டு. எனினும், பால்மர் தன் உயிரையும் பொருட்படுத்தாது. ஒரு போர்வையால் தன்னை முழுவதும் மறைத்துக் கொண்டு, நாதஸ்வர இசையைக் கேட்கச் செல்லுவார். கேட்டு மகிழ்ந்த அதே ராகத்தில், அன்றே, ஆண்டவரைப் போற்றி, அழகான ஒரு பாடல் உருவாகிவிடும்.

இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையின் வழியே, உயிரைப் பணயம் வைத்து எழுதப்பட்ட அருமையான பாடல் தான், “இயேசுவே கிருபாசனப் பதியே” ஆகும்.

பால்மர், தமது 71 ஆண்டு கால வாழ்க்கையில், பல துன்பங்களுக்கும், வேதனை நிறைந்த அனுபவங்களுக்கும் உள்ளாயிருக்க வேண்டும். இவ்வுலக மக்களால் பல எதிர்ப்புகளை அவர் சந்தித்திருக்க வேண்டும். அடுக்கடுக்காய் வந்த இச்சோதனைகளால் தன் உள்ளம் சோர்ந்துபோகாதபடி, அவர் இறைவனின் துணையை நாடி, அவற்றின் மீது வெற்றியையும் பெற்றிருக்க வேண்டும். இவ்வனுபவமே அவரை, நாம் விரும்பிப் பாடும், “வாராவினை வந்தாலும் சோராதே மனமே,” என்ற சிறந்த ஆறுதல் பாடலை எழுதத் து}ண்டியிருக்கும்.

ஜான் பால்மர் இயற்றிய ஏனைய பாடல்களில் பிரபலமானவை:

1. பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே

2. ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே

3. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் (மகிழ் கொண்டாடுவோம்)

4. உன்றன் சுயமதியே நெறியென்றுகந்து சாயாதே

5. கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே நல்ல கேடகத்தைப் பிடி நீ

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...